"தங்க முக்கோணம் இந்தியாவை வல்லரசாக்கும்': விஞ்ஞானி நெல்லை முத்து
First Published : 20 Dec 2009 03:47:16 PM IST
Last Updated :
20 Dec 2009 05:29:10 PM IST
கரூர், டிச. 19: தங்க முக்கோணம் இந்தியாவை வல்லரசாக்கும் என்றார் இந்திய விண்வெளிஆராய்ச்சி கூட்டமைப்பு விஞ்ஞானி நெல்லை சு. முத்து. கரூர் மாவட்டம் காகிதபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை பள்ளியின் 25-ம் ஆண்டு விழா நிகழ்ச்சியில் மேலும் அவர் பேசியது: மாணவர்கள் கேள், பார், படி என்ற கோட்பாட்டின்படி படிக்க வேண்டும். பூஜ்ஜியத்தை, பூஜ்ஜியத்தால் வகுத்தால் எவ்வாறு 1 கிடைக்கும் என்ற கேள்வி எழுப்பிய மாணவர்தான் ராமானுஜர். படிப்பது என்பது புத்தகங்களை மட்டுமல்ல. அறிவுச்சார்ந்த நூல்களையும் படிக்க வேண்டும். உழைப்பதற்கு தயக்கம் காட்டக் கூடாது. காலம் உங்களுக்காக நிற்காது. மாணவர்கள் உலகத்துடன் போட்டியிடுவதை நிறுத்திவிட்டு, பூமியுடன் போட்டியிட வேண்டும். அது ஒரு நாள், ஒரு வருடம் என்று சுற்றுகிறது. யாருக்காகவும் தனது வேலையை நிறுத்திக் கொள்ளாது. வள்ளுவர் ஒருவருக்கு அன்பு, அறிவு, தெளிவு, ஆர்வம் ஆகிய நான்கும் வேண்டும் என்றார். இவை இருந்தால்தான் சிறந்த விஞ்ஞானியாக, எழுத்தாளராக வர முடியும். இந்தியா வல்லரசாவதற்கு நாம் கல்வி, ஆரோக்கியம், உள்கட்டமைப்பு, தகவல் தொழில்நுட்பம், பாதுகாப்பு ஆகிய 5 துறைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றார் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம். 2020-ல் உலகில் மெகா நகரங்களில் முதலிடத்தை இந்தியாவிலுள்ள பெங்களூர் நகரம் பிடிக்கும் என்று அமெரிக்க நிறுவனம் தனது ஆராய்ச்சியில் கூறியுள்ளது. அமெரிக்கா-ரஷ்யா இடையே ஏற்பட்ட பனிப்போர் போல் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே பனிப்போர் எழுவதற்கு வாய்ப்பில்லை என்று ஒரு ஆராய்ச்சியாளர் கருத்து வெளியிட்டார். ஏனெனில், இந்தியா தேவை சார்ந்த பொருளாதாரத்தையும், சீனா உற்பத்தி சார்ந்த பொருளாதாரத்தையும் கொண்டுள்ளன. இந்தியாவில் பெண் கல்வி முக்கியத்துவம் பெற்று வருகிறது. இதே நிலை நீடிக்கும் போது 2067-ல் இந்திய குடும்பத்தின் சராசரி ஆண்டு வருமானமும், அமெரிக்கர்களின் ஆண்டு வருமானமும் சமமாக இருக்கும். இந்தியா தற்போது பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத் துறையில் முன்னேறி வருகிறது. பல மேலை நாடுகளும் தங்களது ராக்கெட்டுகளை இந்தியா மூலமே ஏவி வருகின்றன. இதனால், இந்தியாவிற்கு அன்னியச் செலாவணி கிடைத்து வருகிறது. இந்தியாவின் முன்னேற்றம் தங்க முக்கோணத்தில் உள்ளது. நல்ல தலைவர்கள், நல்ல அதிகாரிகள், நல்ல உள்ளம் இவைதான் இந்த தங்க முக்கோணமாகும். இந்த தங்க முக்கோணத்தை இளைஞர்கள், மாணவர்களால்தான் உருவாக்க முடியும். இதை உருவாக்கும் போது இந்தியா 2020-ல் வல்லரசாக மாறும் என்றார் முத்து.