Friday, September 03, 2010 2:06 PM IST
Click
இந்தியா
மும்பை தாக்குதல்: பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு தொடர்பில்லை என இந்தியா கூறவில்லை - ப.சிதம்பரம்

First Published : 07 Sep 2009 12:05:46 AM IST


புது தில்லி, செப். 6:  மும்பை தாக்குதல் சம்பவத்துக்கும் பாகிஸ்தான் அதிகாரிகளுக்கும் தொடர்பில்லை என இந்தியா ஒருபோதும் கூறவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
  மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வரும் செவ்வாய்க்கிழமை அமெரிக்காவுக்கு 4 நாள் அரசு முறைப் பயணமாகச் செல்லவுள்ளார். இந்த பயணத்தின் போது அந்நாட்டு முக்கியத் தலைவர்களை சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கவுள்ளார்.
  குறிப்பாக சர்வதேச மனித சமுதாயத்துக்கே பெரும் அச்சுறுத்தலாக உள்ள பயங்கரவாதத்துக்கான எதிர்ப்பை இன்னும் வலுப்படுத்துவது, மும்பை தாக்குதல் விவகாரத்தில் தொடர்ந்து அலட்சியமாக நடந்து கொள்ளும் பாகிஸ்தானுக்கு நெருக்குதல் அளிப்பது குறித்து அமெரிக்க தலைவர்களிடம் சிதம்பரம் வலியுறுத்துவார்.
  அமெரிக்காவுக்கு செல்லவுள்ள நிலையில் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார்.
  அப்போது மும்பை தாக்குதல் சம்பவத்துக்கும், பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளுக்கும் தொடர்பிருப்பதற்கான சாத்தியம் குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த போது சிதம்பரம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
  மும்பை தாக்குதல் சம்பவத்தில் தங்கள் நாட்டில் இருந்து செயல்படும் பயங்கரவாதிகள்தான் ஈடுபட்டுள்ளனர் என்றும், தங்களது நாட்டு அதிகாரிகளுக்கும் அந்த சம்பவத்துக்கும் எவ்விதத் தொடர்புமில்லை என்றும் பாகிஸ்தான் தொடர்ந்து கூறிவருகிறது.
  பாகிஸ்தான் இவ்விதம் கூறினாலும் இதை ஏற்றுக்கொள்ள இந்தியா தயாராக இல்லை. மும்பை தாக்குதல் சம்பவத்துக்கும் பாகிஸ்தான் அதிகாரிகளுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று இந்தியா ஒருபோதும் கூறியதில்லை.
  தங்களது நாட்டு அதிகாரிகளையும், பயங்கரவாதிகளையும் வேறுபடுத்தி பாகிஸ்தான் பூசிமொழுகுவதை இந்தியா எப்போதும் ஏற்றுக்கொண்டதில்லை. எனென்றால் இரு தரப்பினருமே பாகிஸ்தான் மண்ணில் இருந்தே செயல்படுகின்றனர் என்றும் சிதம்பரம் தெரிவித்தார்.
  மோசமான முடிவு:  மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு மூளையாகச் செயல்பட்ட ஜமாத்-உத்-தவா தலைவர் முகமது சயீத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது என பாகிஸ்தான் கூறிவருகிறதே என்று கேட்டதற்கு, பாகிஸ்தானின் இந்த முடிவு மோசமானது. மும்பை தாக்குதலுக்கும் சயீத்துக்கும் தொடர்பிருப்பதை நிரூபிக்க ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. அவை பாகிஸ்தானிடமும் அளிக்கப்பட்டுள்ளன என்றும் சிதம்பரம் கூறினார்.
  அமெரிக்க அதிகாரிகளை சந்திக்கும்போது மும்பை தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு நெருக்குதல் அளிக்கும்படி வலியுறுத்துவீர்களா என்று கேட்டதற்கு, வாய்ப்பு கிடைத்தால் கட்டாயம் வலியுறுத்துவேன். மும்பை தாக்குதலுக்கும், பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கும் தொடர்பிருப்பதை உறுதி செய்யும் ஆதாரத்தை அவர்களிடம் பகிர்ந்து கொள்வேன் என்றார். மும்பை தாக்குதல் சம்பவத்துக்கும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கும் தொடர்பிருப்பதற்கான ஆதாரத்தை ஏற்கெனவே அமெரிக்கா உள்பட 16 நாடுகளுடன் பகிர்ந்து கொண்டுள்ளதாகவும் சிதம்பரம் கூறினார்.

கருத்துக்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்