இந்தியாவை வலுவான நாடாக உருவாக்க காங்கிரஸ் தவறிவிட்டது: ராஜ்நாத் சிங்
First Published : 06 Oct 2009 12:18:00 AM IST
Last Updated :
நாசிக், அக். 5: இந்தியாவை வலுவான நாடாக உருவாக்க காங்கிரஸ் தவறி விட்டது என்று பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் குற்றம் சாட்டினார். மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு நாசிக்கில் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசுகையில் அவர் இதைத் தெரிவித்தார். சத்பூர் பகுதியில் பாஜக வேட்பாளர் ராகுல் அஹேரை ஆதரித்து பேசுகையில் ராஜ்நாத் சிங் மேலும் கூறியது: நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 55 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி புரிந்துள்ளது. இந்தியாவை வலுவான நாடாக உருவாக்குவதில் காங்கிரஸ் தோல்வியடைந்துவிட்டது. ராணுவ ரீதியில் இந்தியாவை வலுவான நாடாக உருவாக்கவில்லை. இதனால்தான் இந்தியாவிற்குள் பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டுகிறது. அருணாசலப் பிரதேசத்தில், சீன ராணுவம் ஊடுருவ முயற்சிக்கிறது. போஃபர்ஸ் பீரங்கி பேரத்தில் நடைபெற்ற ஊழலில் முக்கிய நபரான இத்தாலிய தொழிலதிபர் ஒட்டாவியோ குவாத்ரோச்சியை விடுவிக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இது மிகவும் தவறான முன்னுதாரணமாகும். மாநிலத்தில் தலை விரித்தாடும் லஞ்சம், ஊழல் ஆகியவற்றுக்கு காங்கிரஸ் - தேசியவாத கூட்டணி ஆட்சியே காரணம். அத்தியாவசிய பொருள்களின் விலையேற்றத்துக்கும் காங்கிரஸ் அரசே காரணம் என்றார். மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவாரின் கொள்கைகள் அனைத்தும் விவசாயிகளுக்கு எதிரானவை. இதனாலேயே இம்மாநிலத்தில் பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர் என்று குற்றம் சாட்டினார் ராஜ்நாத் சிங்.