மகாராஷ்டிர தேர்தல்: முதல்வர் அசோக் சவாண் உள்பட முக்கிய அமைச்சர்கள் மீண்டும் போட்டி
First Published : 21 Sep 2009 01:48:35 AM IST
Last Updated :
புது தில்லி, செப். 20: மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலில் முதல்வர் அசோக் சவாண் மற்றும் முக்கிய அமைச்சர்கள் காங்கிரஸ் சார்பில் மீண்டும் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணியில் காங்கிரஸ் தலைமை மும்முரமாக ஈடுபட்டுள்ளது. வேட்பாளர் தேர்வு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பிரதமர் மன்மோகன் சிங்கும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 140 முதல் 150 பெயர்கள் முக்கியமாகப் பரிசீலிக்கப்பட்டதாகத் தெரிகிறது. மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகன் அமீத் தேஷ்முக், மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் மாணிக்ராவ் தாக்ரேவின் மகன் ராகுல் தாக்ரே, மற்றொரு மத்திய அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேயின் மகள் பிரணிதி ஷிண்டே, நாடாளுமன்ற உறுப்பினர் தத்தின் மகன் சாகர், குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலின் மகன் ராஜேந்திர ஷெகாவத் ஆகியோர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்கள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே மும்பை, புணே பகுதியில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு செய்துகொள்வது தொடர்பான பேச்சுவார்த்தை ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்தது. மகாராஷ்டிரத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் காங்கிரஸ் 174 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 114 இடங்களிலும் போட்டியிடுகின்றன.