Friday, September 03, 2010 2:10 PM IST
Click
இந்தியா
அணு ஆயுதத் தடை: பாரபட்சம் கூடாது: பிரதமர் மன்மோகன் சிங்

First Published : 30 Sep 2009 11:31:00 PM IST


"அமைதிப் பணிகளுக்கே அணுசக்தி' என்ற தலைப்பில் தில்லி விஞ்ஞான் பவனில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் (இடமிருந்து) நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி,
புதுதில்லி, செப். 29: அணு ஆயுதத்துக்குத் தடை விதிக்கும் விவகாரத்தில் பாரபட்சம் இருக்கக் கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

  "அமைதிப் பணிகளுக்கு அணுசக்தி' என்ற தலைப்பில் தில்லி விஞ்ஞான பவனில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் பேசும்போது அவர் இவ்வாறு கூறினார்.

  அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தின் தற்போதைய வடிவம் பாரபட்சத்துடன் கூடியதாக உள்ளது. அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் வெற்றிபெறவில்லை என்பதும் வருத்தத்துக்குரியது. அணு ஆயுதம் பெருகுவதை உண்மையிலேயே தடுக்க வேண்டுமானால் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் அனைவருக்கும் ஒரே மாதிரியான விதிகளுடன் பாரபட்சம் இல்லாமல் இருக்க வேண்டும். மேலும் அணு ஆயுதங்களை முழுமையாக ஒழிக்க அது வகை செய்ய வேண்டும் என்றார் அவர்.

  இந்தக் கருத்துக்கு உலகளவில் ஆதரவு பெருகி வருகிறது என்றும் அவர் கூறினார்.

  அணு ஆயுதம் பெருகுவதைத் தடுப்பதில் இந்தியாவின் பங்கு குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது குறித்து நாங்கள் பெருமைப்படுகிறோம். மேலும் பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை முழுமையாக ஒழிக்க உலகளவில் முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்பதிலும் இந்தியா உறுதியாக உள்ளது.

  அணுகுண்டு சோதனைக்கு நாங்களே சுயமாகத் தடை விதித்துக்கொண்டுள்ளோம். அணு ஆயுத நாடு என்ற அடிப்படையிலும் இந்தியா ஒரு பொறுப்புமிக்க நாடு என்ற வகையிலும் அணு ஆயுத ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கும் என்றார் அவர்.

ஒபாமா முயற்சிக்கு வரவேற்பு: அணு ஆயுதங்கள் பயங்கரவாதிகளின் கைகளில் சிக்குவதைத் தடுக்கும் வகையில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அடுத்த ஆண்டு ஏற்பாடு செய்துள்ள மாநாடு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  அணு ஆயுத பயங்கரவாதம் உலகத்துக்கு கடும் அச்சுறுத்தலாக மாறும் அபாயம் உள்ளது. அணு ஆயுத தொழில்நுட்பத்தைக் கையாளுவதில் இந்தியா மிகவும் கவனத்துடனும் பொறுப்புடனும் செயல்பட்டு வருகிறது. இந்த தொழில்நுட்பம் அணு ஆயுதம் இல்லாத நாடுகளிடமோ அல்லது வேண்டாத சக்திகளின் கையிலோ சிக்கி விடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக உள்ளோம். அணுசக்தி தொழில்நுட்ப பாதுகாப்புக்காக உலக அளவில் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு இந்தியா முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றார்.

  கருத்தரங்கில், சர்வதேச அணுசக்தி முகமை இயக்குநர் முகமது எல்பரதேய் கலந்து கொண்டார். அணு ஆயுத ஒழிப்பில் இந்தியாவின் முயற்சியை அவர் பாராட்டினார். இந்த விஷயத்தில் இந்தியாவின் கருத்துக்கு உலக நாடுகள் செவிசாய்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். ஆசிய நாடுகளில் அணுசக்தி பயன்பாடு அதிகரித்துள்ளதை வரவேற்ற அவர், பாதுகாப்பு அம்சங்கள் தீவிரமாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அணுசக்தியை அமைதிப் பணிகளுக்குப் பயன்படுத்த ஒவ்வொரு நாட்டுக்கும் உரிமை உண்டு. அதே நேரத்தில் அணுசக்தியை தவறான வழிகளில் பயன்படுத்துவதைத் தடுக்க அணு தொழில்நுட்ப பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றார் அவர்.

  கருத்தரங்கு நினைவு நாணயத்தை வெளியிட்டார் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி.
கருத்துக்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்