அணுசக்தியின் பலன்களை குறிப்பிட்ட சில நாடுகள் மட்டும் அனுபவிக்கக் கூடாது: மன்மோகன் கண்டிப்பு
First Published : 01 Oct 2009 11:09:00 PM IST
Last Updated :
இந்திரா காந்தி விருதை சர்வதேச அணுசக்தி முகமையின் இயக்குநர் முகமது எல்பரதேய்க்கு வழங்குகிறார் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல்
புதுதில்லி, செப். 30: அணுசக்தியின் பலன்களை குறிப்பிட்ட சில நாடுகள் மட்டுமே அனுபவிப்பதை ஏற்க முடியாது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். தில்லியில் புதன்கிழமை நடந்த விழாவில் இந்திரா காந்தி அமைதி விருது சர்வதேச அணுசக்தி முகமை இயக்குநர் முகமது எல்பரதேய்க்கு வழங்கப்பட்டது. இந்த விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது: அணுசக்தியை அமைதி வழிகளில் பயன்படுத்தி பல்வேறு ஆக்கப்பணிகளை மேற்கொள்ளவதற்கு சர்வதேச சமூகத்தின் ஒருங்கிணைந்த கூட்டு முயற்சி அவசியமாகிறது. அணுசக்தி மூலம் எரிசக்தி ஆதாரத்தைப் பெருக்க இந்தியா பெரிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்த சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பு மிக அவசியம். இந்தியா போன்ற வளரும் நாடுகளின் எரிசக்தி தேவையைப் பூர்த்தி செய்யவும் வளர்ச்சிப் பணிகளுக்காகவும் அணுசக்தி மிகவும் இன்றியமையாதது. அணுசக்தியை பாதுகாப்பாக பயன்படுத்துவது தொடர்பாக பொது மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்த உரிய முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். அணுசக்தியை தவறான வழிகளில் பயன்படுத்துவதைத் தடுக்கவும் பாதுகாப்பாக பயன்படுத்துவதற்கும் அணுசக்தி சர்வதேச முகமை எடுத்து வரும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை. ரூ. 25 லட்சம் ரொக்கத்துடன் கூடிய இந்திரா காந்தி அமைதிப் பரிசை எல்பரதேய்க்கு வழங்கி குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் பேசியதாவது: பாரபட்சமற்ற அணு ஆயுதத் தடையை இந்தியா நீண்ட காலமாக வலியுறுத்தி வருவது அனைவரும் அறிந்த ஒன்றுதான். அந்த நிலையில் எந்த மாற்றமுமின்றி இன்று வரை தொடர்கிறது. அணு ஆயுதப் பரவல் தடை குறித்து உலக அளவில் பொதுக் கருத்தை சர்வதேச சமூகம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதுபோல் பயங்கரவாதிகள் அணு ஆயுத தொழில்நுட்பத்தை பெறுவதைத் தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அணு ஆயுதப் பரவல் தடையில் இந்தியாவின் உறுதிப்பாடு பெருமைபடக் கூடியது. அமைதி வழிகளில் அணுசக்தியைப் பயன்படுத்த ஒவ்வொரு நாட்டுக்கும் உரிமை உண்டு. அதேநேரத்தில் அதற்கான பாதுகாப்பு முறைகளையும் உரிய வகையில் பின்பற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்."இந்தியா கையெழுத்திடும் என்று எதிர்பார்க்கவில்லை' : அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தின் தற்போதைய வடிவில் இந்தியா கையெழுத்திடும் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்று இந்திரா காந்தி அமைதிப் பரிசை பெற்ற சர்வதேச அணுசக்தி முகமை இயக்குநர் முகமது எல்பரதேய் கூறினார். தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார். அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் கையெழுத்திட வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் எல்பரதேயின் கருத்து முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அணு ஆயுதங்கள் முழுமையாக ஒழிப்பதற்கான பணிகளுக்கு இந்தியா தலைமை ஏற்க வேண்டும் என்றார். அணு ஆயுதங்களை முழுமையாக ஒழிப்போம் என்ற உறுதிமொழியை நிறைவேற்றும் பொருட்டு அணு ஆயுத நாடுகள் தங்கள் உறுதி மொழியை செயல்படுத்த வேண்டும் என்று எல்பரதேய் கூறினார்.