அனைத்துப் பிரிவினருடன் பேச்சு நடத்தி காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு: சிதம்பரம்
First Published : 14 Oct 2009 03:34:44 AM IST
Last Updated :
ஸ்ரீநகரில் ஜம்மு-காஷ்மீர் பிரதேச காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கட்சியின் கூட்டத்தில் பங்கேற்றார் மத்திய உள்துறை அமைச்சர் ப.சி
ஸ்ரீநகர், அக். 13: அனைத்துப் பிரிவினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி ஜம்மு காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம். ஸ்ரீநகரில் காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் நடந்த கூட்டத்தில் சிதம்பரம் பேசியதாவது: காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காண பிரதமர் மன்மோகன் சிங் தயாராக உள்ளார். எல்லா பிரிவினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள் கூறும் யோசனைகளை கவனத்தில் கொண்டு செயல்படுவோம் என்றார் சிதம்பரம். பாரூக் புகார்: இதனிடையே, காஷ்மீர் பிரச்னை தொடர்பான பேச்சுவார்த்தை குறித்து மத்திய அரசுக்கு தெளிவான பார்வை ஏதும் இல்லை என்றார் மத்திய அமைச்சரும் மாநில முன்னாள் முதல்வருமான பாரூக் அப்துல்லா. பிரதமர் மன்மோகன் சிங் இந்த மாதத்தில் காஷ்மீர் செல்ல உள்ள நிலையில் அப்துல்லாவின் இந்த கருத்து மத்திய அரசை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. சமூக மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டு குறித்த மாநாட்டில் பாரூக் அப்துல்லா கூறியதாவது: காஷ்மீர் தொடர்பான பிரச்னையில் தெளிவான பார்வை கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினால் நல்ல பலன் கிடைக்கும். இது தில்லியில் உள்ளவர்களுக்கு தெரியவில்லை என்றார் அப்துல்லா.