காஷ்மீர் விவகாரம்: சிதம்பரம் அறிவிப்புக்கு ஹுரியத் வரவேற்பு
First Published : 15 Oct 2009 10:58:00 PM IST
Last Updated :
ஸ்ரீநகர், அக். 14: காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காண பிரிவினைவாதிகள் உள்பட அனைவருடனும் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்ற உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் அறிவிப்பை ஹுரியத் மாநாட்டுக் கட்சி வரவேற்றுள்ளது. சிதம்பரத்தின் இந்த அறிவிப்பு நல்ல அறிகுறி, சிறந்த நடவடிக்கை. இது, நீண்டநாள் காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காண பெரும் உதவியாக இருக்கும் என்று ஹுரியத் மாநாட்டுக் கட்சித் தலைவர் மிர்வாய்ஸ் உமர் பரூக் தெரிவித்தார். சிதம்பரத்தின் இந்த அறிவிப்பின் மூலம் காஷ்மீர் பிரச்னைக்குரிய பகுதி, இந்தியாவின் பகுதியல்ல என்பதும் உறுதியாகியுள்ளதாகவும் அவர் கூறினார். காஷ்மீருக்கு இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு சமீபத்தில் நிரந்தரப் பிரதிநிதியை நியமித்தது. இந்த அமைப்பின் நெருக்குதலின் பேரில்தான் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதா என்று கேட்டதற்கு, இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு காஷ்மீர் பிரச்னையை விரைவில் தீர்க்க வேண்டும் என்று விரும்புகிறது. இதற்காக இந்தியாவையும், பாகிஸ்தானையும் ஊக்குவிக்கிறது என்றார். காஷ்மீர் பண்டிட்டுகள் கருத்து: இந்நிலையில் காஷ்மீர் பிரச்னை குறித்த பேச்சுவார்த்தையில் பங்கேற்கத் தங்களுக்கும் அழைப்பு விடுக்க வேண்டும் என்று காஷ்மீர் பண்டிட்டுகள் கோரியுள்ளனர். தங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிட்டால் அந்த பேச்சுவார்த்தையின் நோக்கம் நிறைவேறாது; அர்த்தமற்றதாகிவிடும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.