புதுதில்லி, அக். 27: தேசிய மின் ஆளுமைத் திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. திட்டமிடப்பட்டுள்ள ஒரு லட்சம் பொது சேவை மையங்களில் 55 ஆயிரம் மையங்கள் மாநில அரசுகளால் தொடங்கப்பட்டுவிட்டதாக மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.ராசா தெரிவித்தார்.
புதுதில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்களின் மாநாட்டில் அமைச்சர் ஆ.ராசா பேசும் போது கூறியது:இந்தியாவில் அனைத்து ஊராட்சிகளிலும் செயல்படும் வகையில் 1.50 லட்சம் பொது சேவை மையங்கள் அமைக்க தகவல் தொழில்நுட்பத்துறை திட்டம் தயாரித்துள்ளது.
இந்த பொது சேவை மையங்கள் பாரத் நிர்மாண் திட்டத்தின் கீழ் சேவைகளை அளிக்கும். அத்துடன் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம், சர்வ சிக்ஷா அபியான் எனப்படும் அனைவருக்கும் கல்வித் திட்டம், தேசிய ஊரக சுகாதாரத் திட்டம் முதலிய முக்கியத் திட்டங்களுக்கும் இம்மையம் ஒத்துழைப்பு தரும்.
28 தேசிய வங்கிகள் மூலமாக நேரடி மற்றும் மறைமுக வரிகளை செலுத்துதல், ஓய்வூதியர்களுக்கான சேவைகள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பொது சேவைகள் தற்போது ஆன்லைனில் உள்ளன என்றார் அவர்.
அனைவருக்கும் தொழில்நுட்ப பயன்பாடு கிடைக்கும் வகையில் மத்திய அரசானது பாரத் செயல்பாட்டு முறை தீர்வுகள் (பிஒஎஸ்எஸ்) என்று பெயரிடப்பட்ட இந்திய தேவைகள் மற்றும் இந்திய மொழி உதவியோடு கூடிய ஜிஎன்யூ-லைனக்ஸ் உள்ளூர் டெக்ஸ்டாப் விநியோகத்தை கொண்டுவந்துள்ளது. இது மின் ஆளுமை மற்றும் ஆன்லைன் கல்வியின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்யும் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் ராசா கூறினார்.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும், அரசும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தேவையுள்ளது. பொதுச் சேவைகளை வழங்குவதில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வாய்ப்பளிப்பதற்காக தேவையான சட்ட வழிமுறைகள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
2008ம் ஆண்டின் தகவல் தொழில்நுட்ப (திருத்தம்) சட்டமானது மின்னாளுமையை விரைவாகவும், சிறப்பாகவும் செய்வதற்கான திட்டங்களை செயல்படுத்துவதில் பொது மற்றும் தனியார் பங்களிப்பை சிறந்த முறையில் உறுதி செய்கிறது என அமைச்சர் ராசா தெரிவித்தார்.
அகண்ட அலைவரிசை இணைப்புக்கும் முன்னேற்றத்திற்கும் இடையே நேரடி தொடர்பு இருப்பதால் கிராமப்புற பகுதிகளை டிஜிட்டல் மயமாக்குவது பொருளாதார வளர்ச்சிக்கு பெருமளவு பங்களிப்பு செய்யும் என்று இணை அமைச்சர் சச்சின் பைலட் கூறினார். முன்னதாக தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் ஆர்.சந்திரசேகர் பேசினார்.