பயங்கரவாதிகளை ஒடுக்கினால் தான் பாகிஸ்தானுடன் பேச முடியும்: மன்மோகன் திட்டவட்டம்
First Published : 30 Oct 2009 10:57:00 PM IST
Last Updated :
ஸ்ரீநகர், அக். 29: பாகிஸ்தானுடன் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடர இந்தியா நிபந்தனை எதையும் விதிக்கவில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். அதேநேரத்தில் பயங்கரவாதிகளை ஒடுக்காவிட்டால் பாகிஸ்தானுடன் பேசுவதில் அர்த்தமில்லை என்று பிரதமர் மன்மோகன் கூறினார். காஷ்மீர் மாநிலத்தில் இரண்டு நாள் பயணத்தை முடித்துக் கொண்டு தில்லி திரும்புவதற்கு முன்னதாக ஸ்ரீநகரில் செய்தியாளர்களுக்கு பிரதமர் வியாழக்கிழமை பேட்டியளித்தார். அப்போது அவர் இவ்வாறு கூறினார். பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை மீண்டும் தொடர அங்குள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்க வேண்டும் என்பது முன்நிபந்தனையா என்று கேட்டபோது, நிபந்தனை ஏதும் விதிக்கப்படவில்லை என்றார். ஆனால் பாகிஸ்தானில் இருந்து கொண்டு இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாத செயல்களை கட்டவிழ்த்துவிடும் பயங்கரவாத சக்திகளை கூண்டோடு ஒழித்தால்தான் பேச்சுவார்த்தைக்கு வழிபிறக்கும் என்றார் அவர். இந்தியா ஜனநாயக நாடு. பயங்கரவாதிகள் தினந்தோறும் தாக்கி அப்பாவி உயிர்களை கொன்று குவிக்கும் நிலையில் பேச்சுவார்த்தைக்கு இணக்கமான சூழ்நிலையை எங்களால் எவ்வாறு உருவாக்க முடியும் என்று அவர் கேட்டார். மும்பை தாக்குதலை நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் விஷயத்தில் பாகிஸ்தானின் போக்கு திருப்திகரமாக இல்லை. மும்பை தாக்குதலில் தொடர்புடைய அனைவரையும் நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டும்.உண்மைக்கு மாறானது: பலுசிஸ்தானில் வன்முறையை இந்தியா தூண்டி விடுகிறது. தலிபான்களுக்கு இந்தியா நிதியுதவி அளிக்கிறது என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் கூறியதில் சிறிதும் உண்மை இல்லை. பாகிஸ்தானின் இந்த குற்றச்சாட்டு முழுக்க, முழுக்க தவறானது. உண்மை என்னவெனில் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாதிகளால் இந்தியாதான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.காஷ்மீர் இயக்கங்களுக்கு: பேச்சுவார்த்தை நடத்த புதன்கிழமை நான் விடுத்த அழைப்புக்கு காஷ்மீர் பிரிவினைவாத இயக்கங்களிடமிருந்து சாதகமான பதில் வரும் என்று நம்புகிறேன். காஷ்மீர் மாநில நலனில் அக்கறை கொண்டுள்ள அனைவரும் எனது அழைப்புக்கு சாதகமாக பதிலளிப்பார்கள் என்று நம்புகிறேன் என்றார் பிரதமர். அனைத்துப் பிரிவினருடனும் பேச்சு நடத்த தயாராக உள்ளோம் என்றார் மன்மோகன். எனது காஷ்மீர் பயணம் திருப்புமுனையாக அமையும். காஷ்மீரிலிருந்து முழு திருப்தியுடன் திரும்புகிறேன் என்றார். அமைதியை நிலைநாட்டினால் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் மத்திய அரசு முழு கவனம் செலுத்த முடியும் என்றார் அவர்.இஸ்லாமிய நாடுகள் அமைப்பின் முடிவுக்கு எதிர்ப்பு: ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்புத் தூதரை நியமிப்பதாக இஸ்லாமிய நாடுகள் அமைப்பு (ஓஐசி) அறிவிப்பதற்கு மன்மோகன் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். இஸ்லாமிய நாடுகள் அமைப்பு இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிடுவதாக அவர் புகார் கூறினார். இதுபோன்ற நெருக்கடிகளுக்கு எல்லாம் பணியமாட்டோம் என்றார் அவர்.