ஊரக தொலைத்தொடர்பு அடர்த்தி 40 சதவீதமாக உயரும்: ஆ.ராசா
First Published : 31 Oct 2009 09:56:00 PM IST
Last Updated :
புதுதில்லி, அக். 30: ஐந்தாண்டுகளில் ஊரகப் பகுதிகளில் தொலைத்தொடர்பு அடர்த்தி 40 சதவீதமாக அதிகரிக்கப்படும் என மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.ராசா வெள்ளிக்கிழமை தெரிவித்தார். புதுதில்லியில் இந்திய தொலைத்தொடர்பு 2009 என்ற கண்காட்சிக்கு முன்னோட்டமாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் ஆ.ராசா பேசும் போது கூறியது: இந்திய தொலைத் தொடர்புத் துறை தடையின்றி வளர்ந்து வருகிறது. இலக்கை கடந்து செப்டம்பர் மாதத்திலேயே 50 கோடி இணைப்புகளையும் தாண்டிவிட்டோம். இதன் மூலம் ஒட்டுமொத்த தொலைத் தொடர்பு அடர்த்தியும் 44 சதவீதத்தை அடைந்துள்ளது. ஊரகப் பகுதிகளில் தொலைத் தொடர்பு அடர்த்தி 4.5 சதவீதத்திலிருந்து 19 சதவீதமாக அதிகரித்துள்ளது. தனியார் துறைகளின் பங்களிப்பு வரும் 2014ம் ஆண்டுக்குள் ஊரக தொலைத் தொடர்பு அடர்த்தியை 40 சதவீதமாக எட்ட வேண்டும் என்ற அரசின் இலக்கை அடைய உதவும். அகண்ட அலைவரிசையை பரப்பும் முயற்சியில் இதுவரை 70 லட்சம் இணைப்புகள் என்ற இலக்கு எட்டப்பட்டுள்ளது. 3ஜி எனப்படும் மூன்றாம் தலைமுறை ஸ்பெக்ட்ரம் மற்றும் பிடபுள்யூ சேவைகளை ஏலம் விடும் நிலையை எட்டியுள்ளோம். ஸ்பெக்ட்ரம் ஏலம் விடும் நடைமுறை தொடங்கப்பட்டு 2010ம் ஆண்டு பிப்ரவரிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார் அவர். நிகழ்ச்சியில் மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் சச்சின் பைலட், தொலைத் தொடர்புத் துறை செயலாளர் பி.ஜே.தாமஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.