பாகிஸ்தான் தீவிரவாதிகள் மேலும் பல தாக்குதலுக்கு சதி: மன்மோகன் சிங்
First Published : 21 Nov 2009 11:04:00 PM IST
Last Updated :
புது தில்லி, நவ. 20: பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பை தாக்குதல் போன்று மேலும் பல தாக்குதல்களுக்கு சதித்திட்டம் தீட்டி வருகின்றனர் என்று குற்றம்சாட்டியுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங். அமெரிக்காவுக்கு அரசுமுறைப்பயணமாக செல்ல உள்ளார் பிரதமர். அவரது பேட்டி வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில் {அவர் அமெரிக்கா போய்ச்சேரும் ஞாயிற்றுக்கிழமை வெளியாகிறது. அந்த பேட்டியில் அவர் கூறியதாவது: மும்பையில் கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி நடத்திய தாக்குதல்களைப் போல மேலும் பல தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டி வருகின்றனர் என்ற அதிர்ச்சிகர தகவல்களை அன்றாடம் உளவு அமைப்புத் தகவல்கள் கொடுத்தபடி உள்ளன. இந்த தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அரசுத் தரப்பிலிருந்து ஊக்கமும் ஆதரவும் கிடைக்கிறது என்பதுதான் வேதனையும் வருத்தமும் தரும் விஷயமாகும். கடந்த 25 ஆண்டுகளாகவே பாகிஸ்தானால் தூண்டிவிடப்படும் பயங்கரவாத செயல்களுக்கு பலிகடாவாகி வருகிறது இந்தியா. இருப்பினும் இந்தியாவின் மூலமாக தனக்கு அச்சுறுத்தல் வருமோ என்று பாகிஸ்தான் அஞ்சத்தேவையில்லை. அதனுடன் தீர்க்கப்படாமல் உள்ள பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள இந்தியா தயாராக உள்ளது. இதற்கு பாகிஸ்தான் செய்யவேண்டியது ஒன்றுதான். இந்தியாவுக்கு எதிராக அந்த நாட்டில் உள்ள தீவிரவாதிகள் பயங்கரவாத தாக்குதலை மேற்கொள்ள இடம் தரக்கூடாது. அங்குள்ள பயங்கரவாத பயிற்சி முகாம்களை கூண்டோடு அழிக்கவேண்டும். இந்த நிபந்தனையை நிறைவேற்றினால் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா முன்வரும். பயங்கரவாதமே பாகிஸ்தான் அரசின் கொள்கையாக இருக்கும் நிலையை பார்க்கும்போது பரிதாபப்பட வேண்டிவருகிறது. பயங்கரவாத பாதையைவிட்டு பாகிஸ்தான் விலகிவர அமெரிக்கா தனது செல்வாக்கை பயன்படுத்தவேண்டும் என இந்தியா விரும்புகிறது. கடந்த ஆண்டு மும்பை மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக தொடர்புடைய பயங்கரவாதிகள் மீது போதிய அளவுக்கு பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது ஒப்புக்கு சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பாகிஸ்தானில் பயங்கரவாதம் அதிகரிப்பு: பாகிஸ்தானில் பயங்கரவாதம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அந்தநாட்டின் பல பகுதிகள் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த நிலை நீடித்தால் அது இந்தியாவுக்கும் அச்சுறுத்தல் தருவதாகவே அமையும். தலிபான், அல் காய்தா தீவிரவாதிகள் அட்டகாசம் பாகிஸ்தானின் பல பகுதிகளுக்கும் பரவியுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கமே அதிகாரத்தை செலுத்த முடியாத அளவுக்கு தீவிரவாதிகளின் கை மேலோங்கியுள்ளது. இது எங்குபோய் முடியும் என்று தெரியவில்லை. மேலும் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் பாகிஸ்தான் அரைமனதுடன் செயல்படுவதாகவே தோன்றுகிறது. தீவிரவாதிகளை கூண்டோடு அழிக்கவேண்டும் என்ற நோக்கத்தில்தான் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா நிதி உதவிசெய்கிறது. ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும் ஒரே நோக்கமா என்றால் இல்லை என்று தான் சொல்லமுடியும். தலிபான் தீவிரவாதிகளை ஒடுக்கவேண்டும் என்ற அமெரிக்காவின் நோக்கம் நிறைவேறியதுமே ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்கா வெளியேறவேண்டும் என்பதே பாகிஸ்தானின் விருப்பம். ஆப்கானிஸ்தான் தனது கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் என்பதே பாகிஸ்தானின் நோக்கம். தலிபான்களுக்கு எதிராக முழுமனதுடன் பாகிஸ்தான் நடவடிக்கை எடுப்பதில்லை என்றார் மன்மோகன் சிங்.