கிரிக்கெட் சூதாட்டத்தில் பாகிஸ்தான் வீரர்கள் ஈடுபடுவது உண்மை: முன்னாள் வீரர் குற்றச்சாட்டு
First Published : 08 Sep 2009 12:39:01 AM IST
Last Updated :
கராச்சி, செப். 7: கிரிக்கெட் சூதாட்டத்தில் பாகிஸ்தான் அணியின் 2 மூத்த வீரர்கள் ஈடுபடுவது உண்மை என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் காசிம் உமர் குற்றச்சாட்டு தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி:
கிரிக்கெட் சூதாட்டம் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. இது பாகிஸ்தான் அணியையும் விட்டுவைக்கவில்லை. பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த 2 மூத்த வீரர்கள் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் அவர்கள் போதைப் பொருளையும் பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் பெயரை நான் இப்போது தெரிவிக்க முடியாது. தகுந்த நேரம் வரும்போது அவர்களது பெயர்களை வெளியிடுவேன்.
அவர்கள் பெயரை நான் இப்போது வெளியிட்டால், அவர்கள் என்னை கொலை செய்து விடுவார்கள். என் உயிருக்கு பயந்து தான் இதைச் சொல்கிறேன். பயத்தால் தற்போது நான் மெüனமாக இருக்கிறேன். நேரம் வரும்போது அவர்களது முகத்திரையை கிழிப்பேன் என்றார் அவர்.
1980-களில் கிரிக்கெட் விளையாட ஆயுள் தடை விதிக்கப்பட்டார் காசிம் உமர். இவர் அப்போதைய கேப்டன் இம்ரான் கான் உள்ளிட்ட சில வீரர்கள் தங்களது கிரிக்கெட் பொருட்கள் அடங்கிய பைகளில் போதைப் பொருட்களைக் கடத்திச் செல்கிறார்கள் என்று அப்போது குற்றம் சாட்டியிருந்தார். இது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.