ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
First Published : 19 Sep 2009 01:53:15 AM IST
Last Updated :
ராமேசுவரம், செப். 18 இலங்கை சிறையில் உள்ள 21 மீனவர்களை விடுதலை செய்யக் கோரி ராமேசுவரம் மீனவர்கள் வெள்ளிக்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொண்டுள்ளனர். ராமேசுவரத்தில் இருந்து செப். 16 தேதி மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டு விரட்டியடித்தனர். மேலும் 5 படகையும், அதில் இருந்த 21 மீனவர்களையும் பிடித்து கம்பு, கயிறால் தாக்கினர். பின்னர் மீனவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து அனுராதாபுரம் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சிறையில் உள்ள 21 மீனவர்களையும் விடுதலை செய்ய கோரியும், இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் விரைவில் நடவடிக்கை எடுக்கக் கோரியும் வெள்ளிக்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வது என தீர்மானித்தனர். அதன்படி, ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாமல் படகுகளை கரையில் நிறுத்தி வைத்துள்ளனர். மீனவர்களின் தொடர் வேலை நிறுத்தத்தால் மீன்கள் ஏற்றுமதி இல்லாததால் மத்திய அரசுக்கு பல கோடி ரூபாய் அன்னிய செலவாணி இழப்பு ஏற்பட்டுள்ளது. கச்சதீவு அருகே மீனவர்கள் மீன்பிடிக்கும் உரிமையை பெற்றுத்தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லையெனில், மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.