மதுரையில் அண்ணா பல்கலைக்கழகம் உருவாகும்: மு.க.அழகிரி
First Published : 07 Mar 2010 04:24:25 AM IST
Last Updated :
மதுரை, மார்ச் 6: மதுரையில் அண்ணா பல்கலைக்கழகம் நிறுவப்படும். இதற்கான அறிவிப்பு மார்ச் 19-ம் தேதி தமிழக பட்ஜெட்டில் வெளியிடப்படும் என்று மத்திய ரசாயனங்கள் மற்றும் உரத் துறை அமைச்சர் மு.க.அழகிரி உறுதி தெரிவித்தார்.மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிலையம் (சிப்பெட்) சார்பில் மதுரை மாவட்டம், இடையப்பட்டியில் அமைய உள்ள அதிநவீன அச்சுக்கருவிகள் மற்றும் பிளாஸ்டிக் பொருள்கள் மேம்பாட்டு மையத்துக்கு சனிக்கிழமை அடிக்கல் நாட்டி அவர் மேலும் பேசியதாவது:மதுரையை தொழில் நகரமாக உருவாக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறேன். இதன் ஒருபகுதியாக மேலூரில் கிரானைட் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மேலூர் அருகே டிராக்டர் தொழிற்சாலை அமைய உள்ளது. மேலூர் அருகே அம்பலக்காரன்பட்டியில் அரசு பாலிடெக்னிக் அமைய உள்ளது.சென்னையை அடுத்து கோவை, திருச்சியில் அண்ணா பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது போல மதுரையிலும் அண்ணா பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று நான் முதல்வரிடமும், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியிடமும் வலியுறுத்தினேன். அதன் பலனாக மதுரையில் அண்ணா பல்கலைக்கழகம் உருவாக உள்ளது. இதற்கான அறிவிப்பு மார்ச் மாதம் 19-ம் தேதி பட்ஜெட் அறிவிப்பில் வெளியாகும் என்றார்.