சென்னை பல்கலை. தொலைநிலைக் கல்வி: மாணவர் சேர்ப்பு சனி, ஞாயிறும் உண்டு
First Published : 09 Jul 2010 01:55:01 AM IST
Last Updated :
சென்னை, ஜூலை 8: சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று பல்கலைக்கழகம் கூறியுள்ளது. பொதுவாக தொலைநிலைக் கல்வி மையத்தின் அலுவலகம் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படாமல் இருக்கும். இதனால், பாடம், தேர்வு தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்க வரும் மாணவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வர். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அலுவலகம் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் க. திருவாசகம் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். எனினும், இதுவரை அது நடைமுறைக்கு வரவில்லை. இந்த நிலையில், தொலைநிலைக் கல்வியில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த பல்கலைக்கழகம் திட்டமிட்டது. அரை மணி நேரத்தில் மாணவர் சேர்க்கையை முடித்து, மாணவருக்கு அடையாள அட்டை, பாடப்புத்தகங்கள் ஆகியவற்றை வழங்கும் வகையில், அங்கு உடனடி மாணவர் சேர்க்கை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படுமா என்ற சந்தேகம் மாணவர்களுக்கு இருந்தது. இது குறித்து பல்கலைக்கழகம் கூறியது: அரசு விடுமுறை நாள்களைத் தவிர மற்ற எல்லா நாள்களிலும் மாணவர் சேர்க்கை மையம் செயல்படும். ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 4 வரையிலும், மற்ற நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், மையம் செயல்படும்.