தீவிரவாத குற்றங்களைக் கண்டறிய எஃப்பிஐ ஒத்துழைப்பு: சிதம்பரம்
First Published : 12 Sep 2009 11:03:00 PM IST
Last Updated :
வாஷிங்டன், செப். 11: அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ தீவிரவாதிகள் பற்றிய தகவல்களை அளிப்பதில் இந்தியாவுக்கு மிகச் சிறந்த கூட்டு நிறுவனமாகத் திகழ்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறினார்.தீவிரவாதிகள் தொடர்பான குற்றங்களை விசாரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பை எஃப்பிஐ அளிப்பதாக அவர் மேலும் கூறினார்.அமெரிக்காவில் நான்கு நாள் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பும் முன் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அவர் பேசியது:மும்பையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த எஃப்பிஐ மிகுந்த ஒத்துழைப்பு அளித்தது. டிஎன்ஏ மாதிரிகளை சோதிப்பது மற்றும் ஜிபிஎஸ் சாதனத்தில் உள்ள தகவல்களைக் கண்டுபிடிப்பது உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் எஃப்பிஐ ஒத்துழைப்பு அளித்துள்ளது.தீவிரவாதிகள் தொடர்புடைய குற்றங்களைக் கண்டறிவதிலும் பரஸ்பரம் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதிலும் ஒத்துழைப்பு அளிப்பதாக அவர் கூறினார்.தகவல்களைப் பரிமாறிக் கொள்வது இரு நாடுகளிடையிலேயும் மிகச் சிறப்பாக உள்ளது. இந்த விஷயத்தில் இரு நாடுகளிடையிலான உறவு மேம்பட்டதாக உள்ளது.நடவடிக்கை எடுக்க வேண்டிய தகவல்கள் அனைத்தையும் இரு நாடுகளும் பகிர்ந்து கொள்வதாகவும், இந்திய புலனாய்வு அமைப்புக்குக் கிடைக்கும் எத்தகைய தகவலையும் அமெரிக்காவின் எஃப்பிஐ-யிடம் பகிர்ந்து கொள்வதாகக் கூறிய அவர் இது எதிர்காலத்திலும் தொடரும் என்றார்.அமெரிக்காவின் நிதித்துறைச் செயலர் டிமோத்தி கெய்த்னருடனும் சிதம்பரம் பேச்சு நடத்தினார். பயங்கரவாதிகளுக்கு பணம் செல்வது குறித்து ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.