Friday, September 03, 2010 2:03 PM IST
Click
உலகம்
இந்தியாவுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்: ஒபாமா நிர்வாகம் முடிவு

First Published : 17 Sep 2009 10:01:00 PM IST


புதுதில்லி, செப். 16: ஜார்ஜ் புஷ் ஆட்சி காலத்தில் செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தை உதாசீனப்படுத்திவிட்டு அணுசக்தி விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம் கொண்டு வர அமெரிக்கா தீர்மானித்துள்ளது.

  வரும் 24-ம் தேதி நடைபெறும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இந்தியாவை கையெழுத்திட செய்யும் வகையில் தீர்மானத்தை முன்மொழிய உள்ளது அமெரிக்கா.

  இந்திய - அமெரிக்க ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள அணு உலைகள் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள அனைத்து அணு உலைகளையும் சர்வதேச அணுசக்தி முகமையின் சோதனைக்கு உட்படுத்துவதற்கு அமெரிக்க கொண்டுவரும் இந்தத் தீர்மானம் நிர்பந்திக்கிறது.

  அணு ஆயுதங்களை முற்றிலுமாக அழிப்பது என்ற அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் முயற்சிக்கு ஆதரவாக ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்த தீர்மானம் தாக்கல் செய்யப்படுகிறது.

  இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தியதை அடுத்து அணுகுண்டு தயாரிக்கப் பயன்படுத்தும் யுரேனியம் மற்றும் அதற்கான தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு அளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. அணுசக்தியை அமைதி வழிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவோம் என்று உறுதியளிக்கும் வகையில் அணு ஆயுத பரவல் தடை சட்டத்தில் இந்தியா கையெழுத்திட வேண்டும். அவ்வாறு கையெழுத்திட்டால் தான் அணுசக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பது உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளுக்கு யுரேனியம் வழங்க முடியும் என்று சர்வதேச அமைப்புகள் நிபந்தனை விதித்தன. ஆனால் அணு ஆயுத பரவல் தடை சட்டத்தில் கையெழுத்திட இந்தியா மறுத்து வந்தது.

  இந்த நிலையில், அமெரிக்காவில் ஜார்ஜ் புஷ் ஆட்சி காலத்தில் இந்தியா - அமெரிக்கா இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தப்படி புதிதாக ஏற்படுத்தும் அணு உலைகளை சர்வதேச அணுசக்தி முகமை சோதனையிட ஒப்புக்கொள்ளப்பட்டது. ஏற்கெனவே உள்ள அணு உலைகளை சோதனையிட அனுமதிக்க தேவையில்லை என்ற நிலை இருந்தது.

  ஆனால் அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா பதவியேற்ற பிறகு அமெரிக்க நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

  அதன்படி இந்தியாவில் உள்ள அனைத்து அணு உலைகளையும் சர்வதேச அணுசக்தி முகமையின் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று நிர்பந்திக்கும் தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கொண்டு வர ஒபாமா நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த தீர்மான வரைவு சுற்றுக்கு விடப்பட்டுள்ளது.

  அணு ஆயுத பரவல் ஒப்பந்தம் அமலுக்கு வந்த பிறகு முதல்முறையாக இப்போதுதான், ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடுகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் அல்லது ஒப்பந்தத்தில் உள்ள அம்சங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் நிர்பந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

  ஒபாமா நிர்வாகத்தின் இந்த முடிவு இந்தியாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் அல்லது அணுகுண்டு சோதனைத் தடை உடன்படிக்கை போன்றவற்றில் இந்தியா கையெழுத்திட கட்டாயப்படுத்த முடியாது.

   ஆனால் இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் இதன் மூலம் பயனற்றுப் போய்விடும். அதாவது இந்தியாவுக்கு யுரேனியம் சப்ளை செய்ய தடை விதிப்பதற்கு இந்த ஐ.நா. தீர்மானம் வழி வகுக்கும்.
கருத்துக்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்