மும்பை தாக்குதல்: பதில் ஆவணத்தை இந்தியாவிடம் அளித்தது பாகிஸ்தான்
First Published : 21 Sep 2009 09:26:00 PM IST
Last Updated :
இஸ்லாமாபாத் , செப். 20: மும்பை தாக்குதல் தொடர்பாக இந்தியா கடைசியாக அளித்த ஆதாரத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்த பதில் அடங்கிய ஆவணத்தை இந்தியாவிடம் பாகிஸ்தான் அளித்தது. பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர் சல்மான் பஷிர், இந்திய தூதரக அதிகாரி சரத் சபர்வாலை இஸ்லாமாபாதில் உள்ள தனது அலுவகத்துக்கு சனிக்கிழமை அழைத்து இந்த ஆவணத்தை அளித்தார். இந்த ஆவணத்தில் பாகிஸ்தான் எவ்விதப் பதிலை அளித்துள்ளது என்பது குறித்து சரத் சபர்வால் எவ்விதத் தகவலும் தெரிவிக்கவில்லை. மும்பை தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானிடம் இந்தியா பல தடவை ஆதாரங்களை அளித்தது. எனினும், நடவடிக்கை எடுக்க இந்தியா அளித்த ஆதாரங்கள் போதுமானதாக இல்லை என்று பாகிஸ்தான் கூறிவந்தது. இதையடுத்து பாகிஸ்தானின் வேண்டுகோளின்படி கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி மும்பை தாக்குதல் தொடர்பாக மேலும் சில முக்கிய ஆதாரங்கள் அடங்கிய ஆவணங்களை இந்தியா அளித்தது. அந்த ஆவணத்தில் மும்பை தாக்குதலுக்கு காரணகர்த்தாவான ஜமாத்-உத்-தவா அமைப்பின் நிறுவனர் முகமது சயீத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியிருந்தது. ஆதாரம் போதாது: இந்தியாவிடம் இருந்து ஆதாரத்தைப் பெற்றுக்கொண்ட பாகிஸ்தான், இந்தியா அளித்துள்ள ஆதாரத்தின் அடிப்படையில் முகமது சயீத்துக்கு எதிராக நடவடிக்கை எடுத்திட முடியாது என்று தொடர்ந்து கூறிவந்தது. இதை இந்தியா கடுமையாகக் கண்டித்தது. இதுபோன்ற நிலையில் சில தினங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் உள்ள காவல்நிலையம் ஒன்றில் முகமது சயீத்துக்கு எதிராக இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மதத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களுக்கு எதிராக புனிதப் போர் நடத்த வேண்டும் என்று மக்களை சயீத் தூண்டினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இப்படி சயீத்துக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டதை அடுத்து மும்பை தாக்குதல் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்த பதில் ஆவணத்தை பாகிஸ்தான் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும், மும்பை தாக்குதலுக்கும் சயீத்துக்கும் தொடர்பிருக்கிறதா என்பதை தொடர்ந்து விசாரித்து வருவதாகவே பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக் தெரிவித்தார்.