காஷ்மீருக்கு சிறப்புப் பிரதிநிதி: இஸ்லாமிய நாடுகள் நியமனம்
First Published : 03 Oct 2009 10:35:00 PM IST
Last Updated :
நியூயார்க், அக். 2: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு இஸ்லாமிய நாடுகள் அமைப்பு (ஓ.ஐ.சி.) தங்களது சிறப்புப் பிரதிநிதியை நியமித்துள்ளன. இதன் மூலம், ""காஷ்மீர் என்பது இந்தியாவின் மாநிலம் அல்ல, பிரச்னைக்குரிய பகுதி, அதை இந்தியாவிடமிருந்து மீட்க வேண்டும்'' என்கிற பாகிஸ்தானின் நிலையைத் தங்கள் அமைப்பு ஆதரிக்கிறது என்பதையே இச் செயல் மூலம் ஓ.ஐ.சி. உணர்த்தியுள்ளது. 57 நாடுகளை உள்ளடக்கிய இஸ்லாமிய நாடுகளின் அமைப்பு (ஓ.ஐ.சி.) நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமை அலுவலகத்தில் கூடி காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதித்தது. இதையடுத்து தங்களது தரப்பில் காஷ்மீருக்கான சிறப்புப் பிரதிநிதி நியமனத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. சவூதி அரேபிய நாட்டைச் சேர்ந்த அப்துல்லா பின் அப்துல் ரஹ்மான் அல் பாக்கர் சிறப்புப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. சீனா செல்லும் காஷ்மீர் மக்களுக்கு அந்நாடு தனி விசாவை வழங்கி பிரச்னையை உருவாக்க முயலுகிறது. காஷ்மீர் மக்களுக்கு தனி விசா வழங்குவதன் மூலம் காஷ்மீர் இந்தியாவின் பகுதி அல்ல என்று பிரச்னையை ஏற்படுத்துகிறது சீனா. சீனாவின் இந்தச் செயலால் துணிச்சல் பெற்றே ஓ.ஐ.சி. இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். தூண்டு சக்தி...: இஸ்லாமிய நாடுகளின் இந்த நடவடிக்கையின் பின்னணியில் தூண்டு சக்தியாக பாகிஸ்தான் இருப்பது வெளிப்படை. காஷ்மீருக்கு சிறப்புப் பிரதிநிதியை இஸ்லாமிய நாடுகள் நியமித்ததைத் தங்களுக்குக் கிடைத்த வெற்றியாகவே பாகிஸ்தான் தலைவர்களும், காஷ்மீர் பிரிவினைவாதிகளும் கருதுகின்றனர். இதை, ஐ.நா. சார்பில் காஷ்மீருக்கு சிறப்புப் பிரதிநிதியை நியமிக்க நெருக்குதல் அளிக்க தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பாகவும் நினைக்கின்றனர் என்றும் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். ஹுரியத் மாநாட்டுக் கட்சி வரவேற்பு:காஷ்மீருக்கு இஸ்லாமிய நாடுகள் சிறப்புப் பிரதிநிதியை நியமித்துள்ளதை ஹுரியத் மாநாட்டுக் கட்சி வரவேற்றுள்ளது. சிறப்புப் பிரதிநிதி நியமனம் வரவேற்கத்தக்கது. இது காஷ்மீர் மக்களின் விருப்பத்துக்கு இணங்க நீண்டகால பிரச்னைக்குத் தீர்வு காண பெரும் உதவியாக இருக்கும் என அக்கட்சியின் தலைவர் மிர்வாஸ் உமர் ஃபரூக் தெரிவித்துள்ளார். இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களை மிர்வாய்ஸ் உமர் பரூக் அடுத்தடுத்து சந்தித்து காஷ்மீருக்குச் சிறப்புப் பிரதிநிதி நியமிப்பது குறித்து விவாதித்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.