வெளிநாடுகளில் செயல்படும் எல்டிடிஇ ஏஜெண்டுகளுக்கு எதிராக வேட்டை: இலங்கைத் தகவல்
First Published : 09 Oct 2009 12:00:00 AM IST
Last Updated :
கொழும்பு, அக். 8: வெளிநாடுகளில் செயல்படும் விடுதலைப்புலிகள் அமைப்பின் ஏஜெண்டுகளுக்கு எதிரான வேட்டையை பல்வேறு நாடுகளின் உளவு அமைப்புகள் மேற்கொண்டுள்ளன என இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடும் சண்டை நடத்தி விடுதலைப்புலிகள் அமைப்பை ஒழித்த இலங்கை, தற்போது எஞ்சியுள்ளவர்களையும் அந்த அமைப்புக்கு ஆதரவானவர்களையும் ஒழித்துக் கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது. வெளிநாடுகளில் செயல்பட்டுவரும் விடுதலைப்புலிகள் அமைப்பின் ஏஜெண்டுகள் போதை மருந்து கடத்தல், பெண்கள் கடத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவதாகவும் அவர்களுக்கு பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாகவும் தனது இணையதளத்தில் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அந்நிய நாடுகளில் ரகசியமாக செயல்படும் இந்த ஏஜெண்டுகள் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவதாகவும் அது குற்றம்சாட்டியுள்ளது. இவர்களுக்கு எதிரான வேட்டை, பல்வேறு நாடுகளில் உள்ள உளவு அமைப்புகளுடன் இணைந்து தொடங்கப்பட்டுள்ளது. இதில் அந்தந்த நாடுகளின் சட்ட அமலாக்க பிரிவுகளும் இணைந்துள்ளன என முக்கிய வட்டாரங்களை மேற்கோள் காட்டி பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உளவு அமைப்புகளின் இடைவிடாத முயற்சிகள் காரணமாக அந்த ஏஜெண்டுகளுக்கு எங்குமே இடமில்லாமல் போய்விட்டது என்றும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.