காஷ்மீரில் பயங்கரவாதிகள் மூவர் சுட்டுக்கொலை
First Published : 11 Oct 2009 11:35:00 PM IST
Last Updated :
ஸ்ரீநகர், அக். 10: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எல்லைப் பகுதி வழியாக பயங்கர ஆயுதங்களுடன் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் மூவரை ராணுவ வீரர்கள் சுட்டுக்கொன்றனர். பந்திபோரா மாவட்டத்தை ஒட்டிய எல்லைப் பகுதியில் சனிக்கிழமை காலை இச்சம்பவம் நடந்தது. பந்திபோரா மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகிக்கும் வகையில் மூவர் உலா வந்தனர். அவர்களை ராணுவ வீரர்கள் சரணடையுமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால் அவர்கள் மறுத்து, ராணுவ வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து உடனடியாக உஷாராகிக் கொண்ட ராணுவ வீரர்கள் அந்த மூவரையும் சுட்டு வீழ்த்தினர். அவர்களை சோதித்தபோது அவர்கள் பயங்கரவாதிகள் என்பதும் ஏதோ சதித்திட்டத்துடன் பயங்கர ஆயுதங்களுடன் எல்லைப் பகுதி வழியாக ஊடுருவ முயன்றதும் தெரியவந்தது. ஆனால் அந்த பயங்கரவாதிகள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர் உள்பட அவர்கள் குறித்து எவ்விதத் தகவலும் தெரியவில்லை. பயங்கரவாதிகள் சுட்டுவீழ்த்தப்பட்ட பகுதியில் இன்னும் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்றும் ராணுவ வீரர்கள் சந்தேகிக்கின்றனர். இதனால் அங்கு தொடர்ந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.