ஐ.நா.வில் காஷ்மீர் பிரச்னை குறித்து விவாதம்: பாகிஸ்தான் நடவடிக்கைக்கு இந்தியா கடும் எதிர்ப்பு
First Published : 12 Oct 2009 10:39:00 PM IST
Last Updated :
நியூயார்க், அக். 11: காஷ்மீர் பிரச்னையை ஐ.நா.வில் பாகிஸ்தான் எழுப்பியதற்கு இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி. இதில் சமரசத்துக்கே இடமில்லை என்று இந்தியப் பிரதிநிதி அனுபம் ராய் கண்டனம் தெரிவித்தார். ஐ.நா. பொதுச் சபையின் சிறப்புக் குழு கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் பிரதிநிதி அம்ஜத் ஹூசைன் பேசினார். ஆக்கிரமிப்பு பகுதிகளை காலனி ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கும் பணி இன்னும் பூர்த்தியாகவில்லை. காஷ்மீர் மாநில பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட்டால்தான் உலக அளவில் காலனி ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று பாகிஸ்தானுக்கான ஐ.நா. பிரதிநிதி அம்ஜத் ஹூசைன் கூறினார். பாகிஸ்தானின் இந்த கூற்றுக்கு இந்திய உறுப்பினர் அனுபம் ராய் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். ஜம்மு - காஷ்மீர் இந்தியாவின் ஓர் அங்கம். காஷ்மீர் மாநிலத்தில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்பட்டு மக்களால் தேந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடைபெற்று வருகிறது என்று அவர் கூறினார். காஷ்மீர் பிரச்னை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள இருதரப்புப் பிரச்சனை. இதில் மூன்றாம் தரப்பு தலையிட அனுமதிக்க முடியாது என்று கூறினார். பாகிஸ்தானின் இந்த நிலைக்கு இந்திய உறுப்பினர் அனுபம் ராய் வருத்தம் தெரிவித்தார். மனித குலத்தையே அழிக்கும் முனைப்போடு செயல்பட்டு வரும் தீவிரவாதத்தை ஒடுக்குவது குறித்து பேச வேண்டிய தருணம் இது. அதைப்பற்றி பேசாமல் பழைய பல்லவியை இந்தியா பாடி வருகிறது என்று அவர் கூறினார். காஷ்மீர் இந்தியாவின் பகுதி அல்ல. இரு நாடுகளுக்கு இடையே உள்ள சர்ச்சைக்குரிய பகுதி என்று ஐ.நா. பாதுகாப்பு சபையும் பொது சபையிலும் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. காஷ்மீர் மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப காஷ்மீர் பிரச்னை தீர்க்கப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதிநிதி அம்ஜத் ஹூசைன் கூறினார். சுய நிர்ணய உரிமை அனைவருக்கும் உண்டு என்று 1960-ம் ஆண்டில் ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தை நிறைவேற்றும் வகையில் காலனி ஆதிக்கத்திலிருந்து அடிமை நாடுகளை விடுவிடுப்பதற்காக ஐ.நா. பொது சபை ஆதரவுடன் 1962-ம் ஆண்டு சிறப்புக் குழு அமைக்கப்பட்டது.