லாகூர், அக். 27: தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பாகிஸ்தான் சிறையில் அல்லல்படும் இந்தியர் சரப்ஜித் சிங்கை அவரது வழக்கறிஞர் சந்திப்பதற்கு லாகூர் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
சரப்ஜித் சிங்கை சந்திக்க சிறை அதிகாரிகள் அனுமதி தர மறுத்தனர். இதையடுத்து வழக்கறிஞர் அவாயஸ் ஷேக், சரப்ஜித்தை சந்திக்க அனுமதி கோரி லாகூர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். சரப்ஜித் தூக்கு தண்டனை கைதி, அவரைச் சந்திக்க அனுமதிக்க முடியாது என்று சரப்ஜித் அடைக்கப்பட்டுள்ள கோட்லாக்பாத் சிறைக் கண்காணிப்பாளர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஆனால் சரப்ஜித்தை சந்திக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
"சரப்ஜித் தனது குடும்பத்தார் பற்றி அறிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளார். அவரது குடும்பத்தார் பற்றி தெரிவிக்கவும், சரப்ஜித் சிங்கின் தண்டனையை ரத்து செய்யக் கோரி ஒரு லட்சம் இந்தியர்கள் கையெழுத்திட்ட மனுவை அவரிடம் காட்டவும் அவரைச் சந்திக்க உள்ளேன் என்று வழக்கறிஞர் ஷேக் தெரிவித்தார். வழக்கறிஞர் ஷேக் அண்மையில் இந்தியாவுக்கு வந்து சரப்ஜித்தின் குடும்பத்தாரை சந்தித்தார். சரப்ஜித்தின் சகோதரி, பாகிஸ்தான் தலைமை நீதிபதிக்கு ஒரு கடிதம் கொடுத்துள்ளார். அதன் விவரங்களை சரப்ஜித்தை வியாழக்கிழமை சந்தித்த பின்னரே வெளியிடுவேன் என்றும் வழக்கறிஞர் ஷேக் கூறினார். பாகிஸ்தானில் நடந்த குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்ட சரப்ஜித் சிங்குக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அந்நாட்டு பிரதமர் யூசுப் ரஸô கிலானியின் தலையீட்டின் பேரில் அவரது தூக்குத் தண்டனை தாற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.