பாகிஸ்தான் ராணுவத் தலைமையகம் தாக்குதல் சம்பவம்: முக்கிய தீவிரவாதி கைது
First Published : 29 Oct 2009 10:30:00 PM IST
Last Updated :
லாகூர், அக். 28: பாகிஸ்தான் ராணுவத் தலைமையகத்தின் மீது சமீபத்தில் தலிபான்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக முக்கிய தீவிரவாதி ஒருவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார். கடந்த 10-ம் தேதி ராவல்பிண்டியில் உள்ள பாகிஸ்தான் ராணுவத் தலைமையகத்தின் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில் தொடர்புடைய முக்கியத் தீவிரவாதி கியாரி இஷ்தியாக் என்பவரை பஹவல்பூர் மாவட்டத்தில் போலீஸôர் கைதுசெய்துள்ளனர். இவரிடமிருந்து 400 கிலோ எடையுள்ள வெடிபொருள்கள், 4 துப்பாக்கிகள், 11 கையெறிகுண்டுகள் உள்ளிட்டவற்றை போலீஸôர் கைப்பற்றியுள்ளனர். இஷ்தியாக்கின் கூட்டாளிகள் 7 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் ராணுவத் தலைமையகத் தாக்குதல் சம்பவம் மட்டுமின்றி கடந்தாண்டு இஸ்லாமாபாத்தில் உள்ள மேரியாட் ஹோட்டலில் நடந்த கார்குண்டுவெடிப்பு, இம்மாதம் 15-ம் தேதி லாகூரில் போலீஸ் பயிற்சி மையங்கள் மற்றும் மத்திய புலனாய்வு அலுவலகம் ஆகியவற்றில் நடத்தப்பட்ட தாக்குதல்களிலும் இஷ்தியாக்கிற்கு தொடர்பிருப்பதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மனவான் பகுதியில் உள் போலீஸ் பயிற்சி மையத் தாக்குதல் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட ஹிஜ்ரத்துல்லா கொடுத்த தகவல் அடிப்படையில் கியாரி இஷ்தியாக் கைதுசெய்யப்பட்டார் என அவர் மேலும் தெரிவித்தார். பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் தெற்கு பகுதி தலிபான்கள் நிறைந்த இடமாகும். இப்பகுதியில் முக்கியத் தீவிரவாத இயக்கங்களான லஷ்கர்-இ-ஜான்வி, சிபா-இ-சஹாபா மற்றும் ஜெய்ஷ்-இ-முகம்மது ஆகியன செயல்பட்டு வருகின்றன. கியாரி இஷ்தியாக் இப்பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.