இந்தியா - பாகிஸ்தான் மீண்டும் பேச அமெரிக்கா உதவும்: ஹிலாரி கிளிண்டன்
First Published : 30 Oct 2009 10:46:00 PM IST
Last Updated :
இஸ்லாமாபாத், அக். 29: காஷ்மீர் பிரச்னை உள்பட பல்வேறு பிரச்னைகளுக்கு சுமுகத் தீர்வு காண்பதற்கு இந்தியா - பாகிஸ்தான் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை தொடர அமெரிக்கா உதவும் என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் கூறினார். அதேநேரத்தில், பிரச்னைகளை இருதரப்பு பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இரண்டு நாள் பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள ஹிலாரி கிளிண்டன் அங்கு பிரதமர் யூசுப் ரஸô கிலானியை சந்தித்துப் பேசினார். அப்போது, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள பிரச்னைகளுக்கு சுமுகத் தீர்வுகாண அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் கிலானி வேண்டுகோள் விடுத்தார். இதற்குப் பதிலளித்த கிளிண்டன், இரு நாடுகளும் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க அமெரிக்கா அனைத்து உதவிகளையும் செய்யும் என்று உறுதி கூறினார். பிரதமர் கிலானியை ஹிலாரி கிளிண்டன் இஸ்லாமாபாதில் புதன்கிழமை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு தொடர்பாக பாகிஸ்தான் அரசு தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. காஷ்மீர் பிரச்னை, நதிநீர்ப் பங்கீடு உள்பட இந்தியாவுடனான பிரச்னைகளுக்கு சுமுகத் தீர்வுகாண அமெரிக்கா உதவ வேண்டும் என்று கிலானி கேட்டுக்கொண்டார். மேலும் இந்த பிராந்தியத்தில் ராணுவ சமநிலையை பேணும் வகையில் இந்தியாவுக்கு இணையாக பாகிஸ்தானுக்கும் உரிய ராணுவ உதவிகள் அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். இந்தியாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடர பிரதமர் கிலானி எடுத்து வரும் முயற்சிகளை ஹிலாரி பாராட்டினார். இந்தியா, பாகிஸ்தான் இடையே உள்ள பிரச்னைகள் சிக்கலானவை என்பதை அறிவேன். இருப்பினும் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்க அமெரிக்கா அனைத்து உதவிகளையும் அளிக்கும் என்று ஹிலாரி மீண்டும் உறுதிப்படுத்தினார்.பொருளாதார வளர்ச்சிக்கு...: பின்னர் லாகூரில் கல்லூரி மாணவர்களிடையே ஹிலாரி கிளிண்டன் வியாழக்கிழமை கலந்துரையாடினார். பாகிஸ்தானின் பொருளாதாரம் வளர்ச்சி பெற வேண்டுமானால் இந்தியாவுடனான பிரச்னைகளை பேசி சுமுகமாக தீர்த்துக் கொள்ள வேண்டும். இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களுக்குள் உள்ள பிரச்னைகளை பேசித் தீர்த்துக்கொள்ள முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அமைதி நிலவினால் தான் பாகிஸ்தானின் பொருளாதாரம் ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி பெறும் என்று அவர் கூறினார். பாகிஸ்தானின் வர்த்தகம் அபார வளர்ச்சி பெற எல்லா வாய்ப்புகளும் உள்ளன. ஆனால் இந்தியாவுடன் சுமுகமாக இருந்தால்தான் அதெல்லாம் சாத்தியப்படும் என்றார். அமெரிக்க நிர்வாகம் எப்போதும் இந்தியாவை ஆதரிப்பது ஏன் என்று மாணவர் ஒருவரின் கேள்வியை ஹிலாரி மறுத்தார். இரு நாடுகளுடனும் நல்ல உறவையே அமெரிக்கா விரும்புகிறது. பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும் உள்ள நெருங்கிய உறவை அவர் சுட்டிக்காட்டினார்.பலத்த பாதுகாப்பு: பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பாகிஸ்தான் வந்த ஹிலாரிக்கு வரலாறு காணாத பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.