கசாப் உள்பட 14 பேர் தேடப்படும் குற்றவாளிகள்
First Published : 01 Nov 2009 10:05:00 PM IST
Last Updated :
இஸ்லாமாபாத், அக். 31: அஜ்மல் கசாப் உள்பட 14 பேரை மும்பை தாக்குதலில் தேடப்படும் குற்றவாளிகளாக பாகிஸ்தான் பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம் சனிக்கிழமை அறிவித்துள்ளது. மும்பை தாக்குதல் வழக்கை விசாரித்து வரும் பாகிஸ்தான் பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம் முன்பாக மும்பை தாக்குதல் வழக்கு சனிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மாலிக் முகமது அக்ரம், அஜ்மல் கசாப் உள்பட 14 பேரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, வழக்கு விசாரணையை நவம்பர் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். மும்பை தாக்குதலில் உயிருடன் கைது செய்யப்பட்ட ஒரே குற்றவாளி அஜ்மல் கசாப்தான். அவர் மும்பை நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் பாகிஸ்தான் நீதிமன்றம் அறிவித்துள்ள மற்ற 13 குற்றவாளிகள் யார் என்பதும், அவர்கள் குறித்த விவரம் பற்றியும் உடனடியாகத் தெரியவரவில்லை. மும்பை தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகளாக இதுவரை பாகிஸ்தான் 7 பேரை கைது செய்துள்ளது. இந்த 7 பேர் மீதான விசாரணையை பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம் மேற்கொண்டுள்ளது. ""பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றத்தில் இரு மனுக்களை தாக்கல் செய்துள்ளோம். அந்த மனுக்கள் மீது நவம்பர் 7-ம் தேதி விசாரணை நடத்தப்படும்'' என்று லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு கமாண்டர் ஜாகிர் ரெஹ்மான் லக்வி தரப்பு வழக்கறிஞர் வாஜா சுல்தான் தெரிவித்தார்.