வாஷிங்டன், நவ. 10: இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையை உடனடியாகத் தொடங்க வேண்டும் என, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அழைப்பு விடுத்தார். பாலஸ்தீனப் பகுதிகளில் பொருளாதார நிலைமையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க இஸ்ரேல் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
வட அமெரிக்காவில் உள்ள யூதர்கள் அமைப்புகளின் உறுப்பினர்கள் மத்தியில் திங்கள்கிழமை அவர் மேலும் பேசியதாவது:
இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையிலான பேச்சுவார்த்தையை எந்தவித நிபந்தனையும் இன்றி உடனடியாகத் தொடங்க வேண்டும்.
அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடருவதில் இனியும் காலதாமதம் செய்வது சரியல்ல. முடிவு ஏதும் இல்லாமல் பேச்சுவார்த்தையைத் தொடருவது எனது நோக்கமல்ல. பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என்பதற்காக, பேச்சுவார்த்தை நடத்துவது எனது நோக்கமல்ல என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையிலான பிரச்னைக்கு நிரந்தரமான அமைதித் தீர்வு ஏற்பட வேண்டும் என்பதுதான் எனது நோக்கம்.
இஸ்ரேலின் பாதுகாப்பை விட்டுக் கொடுக்காமல், அமைதித் தீர்வுக்கு எந்தச் சலுகையையும் அளிக்கத் தயாராக உள்ளேன் என்றார் பெஞ்சமின் நேதன்யாகு.
ஆனால், மேற்குக் கரைப் பகுதியில் இஸ்ரேலியர்களை குடியமர்த்தும் நடவடிக்கையை அந்த நாடு நிறுத்தினால் மட்டுமே, அந்த நாட்டுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க முடியும் என பாலஸ்தீனம் நிபந்தனை விதித்துள்ளது.