கலால் வரி உயர்வின் எதிரொலியால் தீப்பெட்டி விலை உயர்வு
First Published : 10 Mar 2010 11:15:04 AM IST
Last Updated :
சிவகாசி, மார்ச் 9: கலால் வரி உயர்வாலும், தீப்பெட்டி தயாரிக்கப் பயன்படும் வேதிப் பொருள்களுக்கான கலால் வரி உயர்வாலும் தீப்பெட்டின் விலை உயர்த்தப்பட்டுள்ளது என அகில இந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் எஸ். ஹரிராம் சுந்தரவேல் செவ்வாய்க்கிழமை கூறியுள்ளார்.இது குறித்து அவர் கூறியதாவது:தீப்பெட்டி விற்பனை கலால் வரி 8 சதமாக இருந்ததை, மத்திய அரசு 10 சதமாக உயர்த்தியுள்ளது. வேதிப் பொருள்களுக்கு 12 சதமாக இருந்த கலால் வரி 14 சதமாக நிதி நிலை அறிக்கையில் உயர்த்தப்பட்டுள்ளது.தீப்பெட்டி தயாரிக்கப் பயன்படும் மூலப் பொருள்களான குச்சி, காகிதம், காகித அட்டை, பாஸ்பரஸ், குளோரைடு, மெழுகு உள்ளிட்டவற்றின் விலை கடந்த மூன்று மாத காலமாக கூடிக்கொண்டே போகிறது. குறிப்பாக, காகித அட்டை கடந்த 3 மாதத்தில் டன் ஒன்றுக்கு ஆயிரம், ஆயிரமாக அதிகரித்து ரூ.4,000 வரை விலை உயர்ந்துள்ளது.பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் லாரி வாடகை உயர்ந்துள்ளது.இதனால் தீப்பெட்டி விலையை உயர்ந்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.600 கொண்ட தீப்பெட்டி பண்டல் ஒன்றுக்கு தற்போது விற்கப்படும் விலையில் இருந்து ரூ. 25 விலை உயர்த்த சங்கக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.இந்த விலை உயர்வுக்கு கோவில்பட்டியிலுள்ள தென் இந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம், குடியாத்தம் தீப்பெட்டி தயாரிப்பாளர்கள் சங்கம், சாத்தூரில் உள்ள வர்த்தகச் சங்கம் ஆகியவை ஒப்புதல் வழங்கியுள்ளது என்றார் அவர்.