காசோலை மோசடி: வியாபாரிக்கு ஓராண்டு சிறை
First Published : 11 Mar 2010 10:28:58 AM IST
Last Updated :
போடி, மார்ச், 10: காசோலை மோசடி செய்த வியாபாரிக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து செவ்வாய்க்கிழமை போடி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. போடி கருப்பசாமி கோயில் தெருவைச் சேர்ந்தவர் கணபதி மகன் கோபால் (48). விவசாயி. இவரிடம் போடி குலாம் மைதீன் தெருவைச் சேர்ந்த ஏலக்காய் வியாபாரி, நாகலிங்கம் மகன் ராமச்சந்திரன் (60) என்பவர் தனது குடும்பச் செலவுக்காகவும், சில்லறைக் கடன்களைத் தீர்க்கவும் ரூ. 90 ஆயிரத்தை கடந்த 2003-ம் ஆண்டு கடனாகப் பெற்றாராம். இந்தக் கடன்தொகையை கோபால் திருப்பித் தருமாறு கேட்டுள்ளார். ராமச்சந்திரன் தான் கணக்கு வைத்துள்ள தி செüத் இந்தியன் வங்கியின் போடி கிளையின் காசோலையை கோபாலுக்கு 1.2.2003-ம் தேதி வழங்கி, அதில் போதிய பணம் உள்ளதாக உறுதி கூறியுள்ளார். இதனையடுத்து, கோபால் மேற்படி காசோலையை, தான் கணக்கு வைத்துள்ள போடி நகர கூட்டுறவு வங்கியில் வசூலுக்குச் செலுத்தியுள்ளார். ஆனால், ராமச்சந்திரனின் வங்கிக் கணக்கில் பணமின்றி காசோலை திரும்பி வந்துவட்டது. இதுகுறித்து கோபால் போடி, மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தாக்கல் செய்தார். வழக்கு விசாரணை நடைபெற்றதில், காசோலை மோசடி செய்த வியாபாரி ராமச்சந்திரனுக்கு ஓராண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து, மாஜிஸ்த்ரேட் ஏ.கே. மெகபூப் அலிகான் தீர்ப்புக் கூறினார்.