காந்தியக் கொள்கைகளைப் பின்பற்றிய நால்வருக்கு விருது
First Published : 09 Feb 2010 08:24:52 AM IST
Last Updated :
09 Feb 2010 09:56:42 AM IST
தஞ்சாவூர், பிப். 8: காந்தியக் கொள்கைகளைப் பின்பற்றி வாழ்ந்ததற்காக பட்டுக்கோட்டை காந்தியடிகள் மனிதநேய மன்றம் சார்பில் நால்வருக்கு காந்தி விருதுகள் அண்மையில் வழங்கப்பட்டன. பட்டுக்கோட்டையில் அண்மையில் நடைபெற்ற தியாகிகள் தினக் கொண்டாட்டத்தில், திண்டுக்கல் காந்தி கிராம-கிராமியப் பல்கலை. முன்னாள் துணைவேந்தர் ந. மார்கண்டன், காந்தியக் கொள்கைகளைப் பின்பற்றி வாழ்ந்த கறம்பக்குடியைச் சேர்ந்த ஊரக வளர்ச்சித் துறை முன்னாள் கூடுதல் இயக்குநர் ப. உமாபதி (படம்), சேலம் தமிழக லட்சியக் குடும்ப அமைப்பின் நிறுவனர் சிற்பி கொ. வேலாயுதம், டாக்டர் சி. பிராங்ளின் ஆசாத் காந்தி, சென்னை வழக்குரைஞர் ஆர். சம்பத்குமார் ஆகியோருக்கு காந்தி விருதுகளை வழங்கியும், காந்திய நடைமுறையைப் பின்பற்றி வாழ்ந்த பட்டுக்கோட்டை வழக்குரைஞர் சங்கத் தலைவர் எம். ராமையன், தையல் தொழிலாளர் சங்கத் தலைவர் குருமகராஜன் ஆகியோருக்கு பாராட்டுப் பத்திரத்தையும் வழங்கிப் பாராட்டினார். விழாவில் கக்கன் கஸ்தூரிபாய், நகர்மன்றத் தலைவர் பிரியா இளங்கோ, வழக்குரைஞர் ராம. செல்லமுத்து ஆகியோர் பேசினர். மன்றத் தலைவர் ரெ. சண்முகம் தலைமை வகித்தார். முன்னாள் நகர்மன்றத் தலைவர் சீனி. இளங்கோ முன்னிலை வகித்தார். கோ. ராஜப்பா வரவேற்றார். கல்லூருணிக்காடு பெற்றோர்-ஆசிரியர் சங்கத் தலைவர் குருமகராஜன் நன்றி கூறினார்.