தமிழ்நாடு கால்பந்து கழக பவள விழா: காட்சிப் போட்டியில் மலேசியாவை வென்றது தமிழகம்
First Published : 08 Feb 2010 10:04:33 AM IST
Last Updated :
08 Feb 2010 10:43:06 AM IST
திண்டுக்கல், பிப். 7: தமிழ்நாடு கால்பந்து கழகத்தின் பவள விழா ஆண்டு நிறைவையொட்டி, திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் ஞாயிற்றுக்கிழமை மாலை தமிழக அணிக்கும், சிலாங்கூர் மலேசிய விளையாட்டு ஆணைய கால்பந்து அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியில், தமிழக அணி 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது. தமிழ்நாடு கால்பந்து கழகத்தின் 75-ம் ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடும் வகையில், திண்டுக்கல், நாகர்கோவில், சென்னை ஆகிய இடங்களில் சிலாங்கூர் மலேசிய கால்பந்து அணிக்கும், தமிழக கால்பந்து அணிக்கும் இடையே காட்சிப் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதனடிப்படையில், முதல் போட்டி திண்டுக்கல்லில் நடைபெற்றது. ஆட்டத்தின் 12 மற்றும் 16-வது நிமிடத்தில், தமிழக அணி வீரர் ரமேஷ் கோல் அடித்தார். பின்னர் 50-வது நிமிடத்தில் இதே அணி வீரர் ராஜேஷ் மற்றொரு கோல் அடித்தார். ஆட்டத்தின் இடைவேளை வரை சிலாங்கூர் மலேசிய அணி கோல் ஏதும் போடாமல் இருந்தது. பிற்பகுதியில் 88-வது நிமிடத்தில் மலேசிய அணி வீரர் சர்மா ராவ் தனது அணிக்கான முதல் கோலை அடித்தார். இதன் பின்னர், இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. எனவே, 3-1 என்ற கோல் கணக்கில் தமிழக அணி வெற்றி பெற்றது. இதையடுத்து, வரும் 10-ம் தேதி நாகர்கோவிலில் தமிழக-மலேசிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டியும், சென்னையில் வரும் 14-ம் தேதி மூன்றாவது காட்சிப் போட்டியும் நடைபெற உள்ளது. பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மா. வள்ளலார் தலைமை வகித்தார். தமிழ்நாடு கால்பந்து கழகத் துணைத் தலைவர் ஜி. சுந்தரராஜன் வரவேற்றார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எம். முத்துச்சாமி முன்னிலை வகித்தார். வெற்றி பெற்ற அணிக்கும், காட்சிப் போட்டியில் பங்கேற்ற மலேசிய அணிக்கும் மாநில வருவாய்த் துறை அமைச்சர் இ. பெரியசாமி நினைவு பரிசுகளை வழங்கினார். தமிழ்நாடு கால்பந்து கழகத் தூதுவர் ஐ. லியோனி, தென்மண்டல ஐ.ஜி. எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு கால்பந்து கழகத் தலைவர் எஸ். கிளிட்டஸ் பாபு, திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலர் எஸ். முருகன், மாவட்ட கால்பந்து கழகத் துணைத் தலைவர்கள் கே.ஏ.ஆர். மொய்தீன், எஸ்.பி.டி. கனகசபை, பொருளாளர் பி. மோகன், நடுவர்கள் கழகச் செயலர் ஏ. ராஜேந்திரகுமார், மாவட்ட கூடைப்பந்துக் கழகத் தலைவர் எஸ். ரத்தினபாண்டியன், திண்டுக்கல் பெண்கள் கால்பந்து ஒருங்கிணைப்பாளர் எஸ். ஈசாக்கு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். திண்டுக்கல் கால்பந்து கழகச் செயலர் எஸ். சண்முகம் நன்றி கூறினார்.