தியாகிகள், ஓய்வூதியர்களுக்கு கலைஞர் காப்பீட்டுத் திட்டம்
First Published : 31 Jul 2010 12:23:44 PM IST
Last Updated :
சிவகங்கை, ஜூலை 30: உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம் சுதந்திரப் போராட்டத் தியாகிகள், ஓய்வூதியர்களுக்கும் வழங்கப்பட உள்ளது. இருதய அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை போன்ற உயர் சிகிச்சைகள் ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்துக்கும் கீழ் உள்ளவர்களுக்கு தற்போது வழங்கப்படுகிறது. இதே வருமான வரம்பு உள்ள ஓய்வூதியம் பெறும் முன்னாள் கிராம முன்சீப், சுதந்திரப் போராட்டத் தியாகிகள், போக்குவரத்துக் கழகம், பால் உற்பத்தியாளர் சங்கம் மற்றும அரசு பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் இத் திட்டம் பொருந்தும் வகையில் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் இதன் மூலம் பயன்பெற விரும்புவோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஸ்டார் இன்சூரன்ஸ் நிறுவன மையத்துக்குச் சென்று தங்களை உறுப்பினராகப் பதிவு செய்து அடையாள அட்டை பெற்றுக் கொள்ளலாம். இம் மையம் ஆகஸ்ட் 1 முதல் செப்டம்பர் 30 வரையில் செயல்படும். ஓய்வூதியம் பெறுபவர்கள் அதற்கான அட்டை மற்றும பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர் அதற்கான அடையாள அட்டை, வருமானச் சான்றிதழ், குடும்ப அட்டை நகல் மற்றும் அனைத்து குடும்ப உறுப்பினர்களுடன் சென்று புகைப்படம் மற்றும் கைவிரல் ரேகைகளைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். காப்பீடு அட்டை பெறும் வரை சிகிச்சை தேவைப்படுவோர் தங்களது அடையாள அட்டைகள், வருமானச் சான்று, குடும்ப அட்டை நகல் ஆகியவற்றை சமர்ப்பித்து அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம் என ஆட்சியர் அலுவலகச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.