Saturday, July 31, 2010 4:05 AM IST
Click
முக்கியச் செய்திகள்
மகளிர் இட ஒதுக்கீடு: மாநிலங்களவையில் நிறைவேறியது மசோதா

First Published : 10 Mar 2010 01:09:43 AM IST

Last Updated : 10 Mar 2010 02:58:09 AM IST

மாநிலங்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியதற்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் பிருந்தா காரத், பாஜக தலைவர்கள் சுஷ்மா
புதுதில்லி, மார்ச் 9: மக்களவை, மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் அரசமைப்புச் சட்ட திருத்த மசோதா மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமான உறுப்பினர்களின் ஆதரவுடன் செவ்வாய்க்கிழமை மாநிலங்களவையில் நிறைவேறியது.

சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8ம்தேதி (திங்கள்கிழமை) இந்த மசோதாவை நிறைவேற்றுவது என்பதில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி முனைப்புடன் இருந்தது. எனினும் அது நிறைவேறாமல் போகவே அதை எப்படியாவது நிறைவேற்றியாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து அதில் வெற்றி கண்டது ஆளும் கூட்டணி. மசோதா நிறைவேறியாக வேண்டும் என்பதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் பிரதமர் மன்மோகன் சிங்கும் முழு முயற்சி மேற்கொண்டனர்.

இந்த தினம் வரலாற்றுச் சிறப்புமிக்க தினம் என்றும் இந்த மசோதாவால் சிறுபான்மையினருக்கு எந்த பாதிப்பும் வராது என்றும் பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார்.

தற்போதைய வடிவில் இந்த மசோதாவை நிறைவேற்றினால் கூட்டணி அரசுக்கு வெளியிலிருந்து கொடுத்துவரும் ஆதரவை விலக்கிக் கொள்வோம் என்று முலாயம் சிங்கின் சமாஜவாதி கட்சியும் லாலு பிரசாதின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியும் அறிவித்தபோதிலும் அதைப் பொருட்படுத்தாமல் மசோதா நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தது ஐக்கிய முற்போக்குக்கூட்டணி அரசு.

மாநிலங்களவையில் மசோதாவுக்கு ஆதரவாக 186 வாக்குகளும் எதிர்த்து 1 வாக்கும் பதிவாகின. சில கட்சிகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன.

தமக்கு முன்கூட்டியே எதையும் தெரிவிக்காமல் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தாமலே மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தியதை கண்டித்து  திரிணமூல் காங்கிரஸ் கட்சி வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இக்கட்சிக்கு மாநிலங்களவையில் 2 உறுப்பினர்கள் உள்ளனர்.

மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த 12 உறுப்பினர்களும், தாம் கேட்டுக்கொண்ட திருத்தங்கள் மசோதாவில் இடம்பெறவில்லை என்று எதிர்ப்பு தெரிவித்து வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் வெளிநடப்பு செய்தனர்.

1996 முதல் இந்த மசோதாவை நிறைவேற்ற முயற்சி எடுக்கப்பட்டு நிறைவேறாமல் போனது. 14 ஆண்டுக்குப்பிறகு தற்போதுதான்  பிரதான எதிர்க்கட்சியான பாஜக, இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன்  காங்கிரஸ் தலைமையிலான ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் இந்த மசோதா நிறைவேறியுள்ளது.

மகளிருக்கு மக்களவை, மாநில சட்டப்பேரவைகளில் 33 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு வகை செய்யும் அரசமைப்பு சட்ட 108வது திருத்த மசோதா திங்கள்கிழமை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டபோதே சமாஜவாதி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் மாநிலங்களவைத் தலைவர் ஹமீது அன்சாரியின் இருக்கை அருகே சென்று அங்கு இருந்த மசோதா பிரதியை பறித்துக் கிழித்து அன்சாரியை தாக்கவும் முற்பட்டனர்.

அவையில் தொடர்ந்து அமளி தொடரவே திங்கள்கிழமை அவை நாள் முழுவதுக்கும் ஒத்திவைக்கப்பட்டது.

செவ்வாய்க்கிழமை பிற்பகலில் இந்த மசோதா விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த விவாதத்தில் மாநிலங்களவை எதிர்க்கட்சித்தலைவர் அருண் ஜேட்லி (பாரதிய ஜனதா கட்சி), பிருந்தா காரத் (மார்க்சிஸ்ட்), சதீஷ் மிஸ்ரா (பகுஜன் சமாஜ் கட்சி), ஜெயந்தி நடராஜன் (காங்கிரஸ்) உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.

விவாதத்தை தொடங்கிவைத்து அருண் ஜேட்லி பேசுகையில், மகளிர் மசோதாவுக்கு பாஜக முழு ஆதரவு அளிப்பதாகவும் அதே நேரத்தில் மாநிலங்களவையில் நடந்த வெட்கித்தலைகுனியக் கூடிய சம்பவங்கள் இந்த நல்லதொரு தருணத்தை மழுங்கடித்துவிட்டதாகவும் குறிப்பிட்டார்.

இந்த மசோதா மூலமாக தலித்துகள், பழங்குடிகளுக்கு பாதிப்பு வராது. அவர்களுக்கு நியாயமான ஒதுக்கீடு இந்த மசோதா மூலம் கிடைக்கும் என்று ஜெயந்தி நடராஜன் தெரிவித்தார்.

முன்னதாக, திங்கள்கிழமை நடந்த அமளியில் தொடர்புடையதாக 7 உறுப்பினர்களை, பட்ஜெட் கூட்டத் தொடரின் எஞ்சிய காலத்துக்கு சஸ்பென்ட் செய்ய அன்சாரி நடவடிக்கை எடுத்தார்.

அவைத்தலைவர் அன்சாரி விவாதமின்றி மசோதாவை வாக்கெடுப்புக்கு விடுவதாக அறிவித்தார். இந்த நடவடிக்கைக்கு பாஜக, இடதுசாரி உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். முதலில் விவாதம் நடத்தி அதன்பிறகே வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று வலியுறுத்தினர்.

 இருப்பினும் முதலில் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேறி அடுத்ததாக மசோதா மீது விவாதம் நடைபெறும் நிலை எப்போதும் இல்லாதவகையில் உருவானது.

இந்த மசோதா சிறுபான்மையினருக்கோ அல்லது தலித்துகளுக்கோ எதிரானது அல்ல என்றும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவகை செய்யும் உன்னத நடவடிக்கை என்று பிரதமர் மன்மோகன் வர்ணித்தார்.

மசோதாவுக்கு ஆதரவளித்த மாநிலங்களவை எதிர்க்கட்சித்தலைவர் அருண் ஜேட்லி, மற்றும் பிற கட்சிகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

முன்னதாக, மசோதாவை ஒத்திவைத்து அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டி விவாதிக்கவேண்டும் என்று செவ்வாய்க்கிழமை காலையில் பிரதமர் மன்மோகன் சிங்கை லாலு பிரசாதும் முலாயம் சிங்கும் சந்தித்து கோரிக்கை விடுத்தனர். அதற்கு பிரதமர் சம்மதிக்கவில்லை.

இந்த மசோதா நிறைவேறுவதன் மூலம் 545 பேரைக் கொண்ட மக்களவையில் பெண் உறுப்பினர்கள் 181 பேர் இடம்பெறுவார்கள். 28 மாநில சட்டப்பேரவைகளில் மொத்தமுள்ள 4109 இடங்களில் 1370 இடங்கள் பெண்களுக்கு கிடைக்கும்.

கருத்துக்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்