ஹாக்கி கேப்டன் ராஜ்பால் சிங்குக்கு எதிர்ப்பு
First Published : 09 Feb 2010 12:00:00 AM IST
Last Updated :
புது தில்லி, பிப். 8: உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கு இந்திய அணியின் கேப்டனாக ராஜ்பால் சிங் (படம்) நியமிக்கப்பட்டுள்ளதற்கு அணியின் மற்ற வீரர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.பிரப்ஜோத் சிங்கை கேப்டனாக அறிவிக்க வேண்டுமென்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.அண்மையில் ஹாக்கி வீரர்கள் சம்பளம் தொடர்பான பிரச்னை ஏற்பட்ட போது ராஜ்பால் சிங் தங்கள் தரப்புக்கு ஆதரவாக இல்லை என்று ஹாக்கி வீரர்கள் குறை கூறியுள்ளனர்.இது குறித்து வீரர்கள் தரப்பில் கூறப்படுவது: உலகக் கோப்பை ஹாக்கி அணி அறிவிக்கப்படுவதற்கு முன்னர் நடைபெற்ற அணி வீரர்கள் கூட்டத்தில் தலைமை பயிற்சியாளர் ஜோஸ் பிராஸô, "பிரப்ஜோத் சிங் கேப்டனாக நியமிக்கப்படுவார். 4 பேர் துணை கேப்டன்களாக இருப்பார்கள்' என்று கூறியிருந்தார்.ஆனால் இப்போது ராஜ்பால் சிங் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இது எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. ஏற்கெனவே கூறியது போல பிரப்ஜோத் சிங்கை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று வீரர்கள் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தலைமை பயிற்சியாளர் ஜோஸ் பிராஸôதான் பிரப்ஜோத் சிங்கை கேப்டனாக நியமிக்க விடாமல் தடுத்து விட்டார் என்றும் வீரர்கள் கருதுகின்றனர்.இது குறித்து கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ராஜ்பால் சிங் கூறியதாவது: கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதால் வீரர்களிடையே எந்த கருத்து வேறுபாடும் இருக்கக் கூடாது என்றுதான் விரும்புகிறேன். பிரப்ஜோத் சிங் உள்பட அனைத்து வீரர்களும் ஒற்றுமையாக விளையாடி இந்தியாவுக்கு உலகக் கோப்பையை வென்று தர வேண்டும் என்றார் அவர்.தில்லியில் பிப்ரவரி 28-ம் தேதி முதல் மார்ச் 13-ம் தேதி வரை உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்நிலையில் இந்திய ஹாக்கி அணியில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.