24 மொழிகளில் பாடகர்கள்
First Published : 30 Jul 2010 01:35:53 AM IST
Last Updated :
மிதுன்-சுனுலட்சுமி
லைட்ஸ் அண்ட் ஷேடோஸ் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் "ஈசல்'. மிதுன் கதாநாயகனாக நடிக்க, "சிரித்தால் ரசிப்பேன்' படத்தில் நடித்த சுனுலட்சுமி கதாநாயகியாக நடிக்கிறார். மணிவண்ணன், கஞ்சா கருப்பு, அலெக்ஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இயக்குநர் சசியிடம் பல படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய விஜய் ஆதித்யா இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்துக்காக சமீபத்தில் 24 மொழிகளில் எழுதப்பட்டிருந்த பாடலை 24 பாடகர், பாடகிகள் பாடியுள்ளனர். இப்பாடல் உருவான விதம் குறித்து இயக்குநரிடம் கேட்ட போது....""தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, குஜராத்தி, கொங்கணி, காஷ்மீரி, ராஜஸ்தானி, பஞ்சாபி, ஒரியா உள்ளிட்ட 24 இந்திய மொழிகளில் உள்ள வார்த்தைகளைப் பயன்படுத்தி இந்தப் பாடல் எழுதப்பட்டிருக்கிறது. இப்பாடலை மாஸ் வெங்கட் மற்றும் ராய் ஆகியோர் எழுதியுள்ளனர். "வந்தே மாதரம்' பாடலைப் போன்று தேசப்பற்று மிக்க பாடலாக இந்தப் பாடல் வந்துள்ளது. அறிமுக இசையமைப்பாளர் மிதுன் ஈஸ்வர் இசையமைப்பில், 24 மொழிகளில் உள்ள பாடகர்களின் குரலில் சமீபத்தில் இப்பாடல் பதிவு செய்யப்பட்டது. மலையாள மொழிகளில் இடம் பெறும் பாடல் வரிகளை நடிகர் பார்த்திபன் பாடினார். தமிழ் வரிகளை மலையாள நடிகர் சுரேஷ்கோபி பாடினார். இவர்களைத் தவிர பாடகர்கள் கார்த்திக், சாதனா சர்கம், ஜாஸி கிப்ட், உன்னி கிருஷ்ணன், உன்னிமேனன், கிருஷ்ணா அய்யர், பிஜி நாராயணன், சில வங்காள மொழி வரிகளை நானும் பாடியிருக்கிறேன். பாடலுக்கானக் காட்சிகளும் அந்தந்த ஊர்களிலேயே படமாக இருக்கிறது. இதைத் தவிர படத்தில் வரும் மூன்று பாடல் காட்சிகளையும் வித்தியாசமாக படமாக்க இருக்கிறோம்'' என்றார்.