எக்கணமும் தேவை சிக்கனம்

சிறு துளி பெரு வெள்ளம் என்பதின் முக்கியத்துவத்தை சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். சிக்கனமாக இருப்பதற்கு குழந்தைப் பருவத்திலேயே கற்றுக் கொள்கிறவர்கள்

சிறு துளி பெரு வெள்ளம் என்பதின் முக்கியத்துவத்தை சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். சிக்கனமாக இருப்பதற்கு குழந்தைப் பருவத்திலேயே கற்றுக் கொள்கிறவர்கள் அந்தப் பழக்கத்தை பெரியவர்களானாலும் அப்படியே தக்க வைத்துக் கொள்கிறார்கள்.
பெரும்பாலான இளைஞர்கள் சிக்கனமாக இருப்பதை கேவலமாகவும், மற்றவர்கள் மத்தியில் அவர்களின் மதிப்பு குறைவதாகவும் கருதுகிறார்கள். இன்னும் கணக்கு பார்த்து செலவு செய்பவர்களுக்கு கஞ்சன் என்ற பட்டப்பெயரையும் சூட்டுகிறார்கள். பணத்தின் அருமை தெரியாமல் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வளர்ப்பதே இதற்கு காரணமாக அமைகிறது.
சிக்கனம், ஊதாரித்தனம், கஞ்சத்தனம் ஆகிய மூன்று பழக்கங்களுக்கிடையே உள்ள வித்தியாசத்தை அவர்களுக்குப் புரியும்படி சொல்லிக் கொடுக்க வேண்டும். ஊதாரித்தனம் வறுமையில் கொண்டு போய் விடும் அல்லது கடன் வாங்கி செலவு செய்யத் தூண்டும்.
பெற்றோர்களும், பெரியவர்களுமே வீட்டில் குழந்தைகளுக்கு வழிகாட்டியாகத் திகழ்கிறார்கள். நம் பழக்க வழக்கங்களே அவர்களின் வாழ்க்கையில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பதால் நாம் சிக்கனத்தைக் கடைபிடிப்பது அவசியம். சிறிய விஷயம் தானே என்று நிறைய நேரங்களில் அலட்சியம் பாராட்டுகிறோம்.
பொதுவாகவே சிக்கனம் என்றால் பணத்தை மிச்சப்படுத்துவது என்று எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் பணம் மட்டுமின்றி எல்லா விஷயங்களிலும் சிக்கனத்தை கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். அவற்றுள் தண்ணீர், மின்சாரம், வாகன எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு போன்றவை முக்கியமானதாகும்.
சமையல் அறையிலோ, குளியல் அறையிலோ தண்ணீர்க் குழாயைத் திறக்கும் பொழுது தண்ணீர் தேவைப்படும் அளவுக்கே திறக்க வேண்டும். முழுவதுமாகத் திறந்து பாத்திரம் கழுவுவது, வாளி நிறைந்து தண்ணீர் வழிந்து ஓடினாலும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
தண்ணீர் தாராளமாகக் கிடைக்கும் பொழுது ஒரு நிலைப்பாடு குறைவாகக் கிடைக்கும் பொழுது ஒரு நிலைப்பாடு என்றில்லாமல் எப்பொழுதும் சிக்கனத்தைக் கடைபிடிக்கவேண்டும். தண்ணீர் நம் வாழ்க்கைக்கு மட்டுமல்லாது எதிர்கால சந்ததியருக்கும் இன்றியமையாதது என்பதை நம் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.
ஒரு அறைக்குள் செல்லும் பொழுது மறக்காமல் மின்விளக்கு, மின்விசிறி ஸ்விட்சுகளை போடுபவர்கள் வெளியில் வரும்பொழுது அவற்றை மறக்காமல் அணைத்து விடவேண்டும்.
அடுப்பில் பாலையோ அல்லது வேறு உணவுப் பொருட்களையோ வைத்து விட்டு அது பற்றய ஞாபகமே இன்றி மணிக்கணக்கில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருப்பது, அல்லது அலை பேசியில் அரட்டை அடிப்பது பெரும்பாலான இல்லத்தரசிகளின் வாடிக்கையாக இருக்கிறது. இதனால் இதனால் எரிபொருள் விரயமாவதுடன், உணவுப் பொருளும் வீணாகப் போய்விடுகிறது.
பெண்கள் கடைகளில் பார்க்கும் தட்டு, முட்டு சாமான்களை வாங்கி பரண்களில் தூங்க விடக் கூடாது. புழங்குவதற்கு என்ன அவசியமோ அவை மட்டும் வீட்டில் இருந்தால் போதுமானது. வீட்டில் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கேற்ப உணவு தயாரிக்க வேண்டும்.
அளவுக்கதிகமாக சமைத்து குப்பையில் போடுவதும், குளிர்சாதனப் பெட்டியில் வைத்து இரண்டு மூன்று நாட்களுக்கு உபயோகிப்பதும் தவறான பழக்கங்களாகும். குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுக்கும் பொழுது வயிறு முட்ட, முட்ட கொடுக்கக் கூடாது.
எவ்வளவு சுவையான உணவாக இருந்தாலும் இரைப்பையில் அரை பாகம் சாப்பாடு, கால் பாகம் தண்ணீர், கால் பாகம் காலியாக வைத்திருப்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். அடிக்கடி வெளியில் வாங்கி சாப்பிடுவதற்குப் பதிலாக வீட்டிலேயே உணவு தயாரித்துக் கொடுப்பதால் பணம் மிச்சப்படுவதுடன் குடும்ப ஆரோக்கியத்தையும் உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.
உடை விஷயத்திலும் சிக்கனத்தைக் கடைபிடிக்க வேண்டும். குழந்தைகளுக்கான உடைகளை அலமாரி முழுக்க அடுக்கி வைத்து அவர்கள் ஓரிரு முறை பயன்படுத்திய பின் அல்லது பயன்படுத்தாமலே உடை சிறியதாகி விட்டதென்று கழிக்கும் நிலை நிறைய வீடுகளில் உள்ளது.
நமக்கு வசதி இருந்தாலும் ஆடம்பரமான விலை உயர்ந்த உடைகளை அவர்கள் கேட்கிறார்கள் என்பதற்காக வாங்கித்தரக்கூடாது.
எடுத்ததெற்கெல்லாம் இரு சக்கர வாகனத்தைப் பயன்படுத்தக் கூடாது. குழந்தைகள் படிக்கும் பள்ளியோ, கடை வீதிகளோ அருகில் இருக்கும் பொழுது அவர்களையும் கூட்டிக்கொண்டு நடந்ததே செல்ல வேண்டும். இதனால் எரிபொருள் சேமிப்புடன் நடக்கவே சலித்துக்கொள்ளும் இந்த காலத்துக்கு குழந்தைகளுக்கு நடை பயிற்சியும் கொடுத்த மாதிரி இருக்கும்.
ஆடம்பரம், பகட்டு, படாடோப வாழ்க்கை வாழ விரும்புபவர்களால் வறுமையில் வாடும் மக்களின் துயரத்தை உணர முடியாது. அவர்களிடம் தன்னலமே மிகுந்து காணப்படும். எளிமையாகவும், சிக்கனமாகவும் வாழ்பவர்களின் உள்ளங்கள் என்றும் ஆடம்பரத்தை விரும்பா.
கடைசியாக, பேசும் வார்த்தைகளிலும் சிக்கனம் வேண்டும். பேச்சில் சிக்கனம் காட்டுவதால் நம் ஆற்றல் பெருகும், சக்தி மிச்சமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com