தண்ணீரைத் தடுப்பதே நோக்கம்!

'பொது மேற்பார்வைக் குழுவின் கட்டுப்பாட்டிலும், தமிழகத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தாத வகையிலும் கருநாடக அரசு புதிய அணை கட்டிக்கொள்ளலாம்,
தண்ணீரைத் தடுப்பதே நோக்கம்!

'பொது மேற்பார்வைக் குழுவின் கட்டுப்பாட்டிலும், தமிழகத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தாத வகையிலும் கருநாடக அரசு புதிய அணை கட்டிக்கொள்ளலாம், அணைப் பராமரிப்பு, நீர் திறப்பு உள்ளிட்டவற்றை பொது மேற்பார்வைக் குழுவே முடிவு செய்ய வேண்டும்' என உச்சநீதிமன்றம் 17.8.2017 அன்று தெரிவித்துள்ள கருத்து தமிழ்நாட்டு விவசாயிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. பல்வேறு கட்சித் தலைவர்களும் விவசாய சங்கங்களின் தலைவர்களும் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இக்கருத்தைத் தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு காவிரிப் பிரச்னையின் கடந்த கால வரலாற்றினை தமிழகம் சார்பில் வாதாடியவர்கள் சரிவர எடுத்துச் சொல்லவில்லை என்பது தெரிகிறது.
தமிழ்நாட்டின் எல்லைக்கு உள்பட்ட ஒகேனக்கல்லில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் 'மேக்கேதாட்டு என்னும் இடத்தில் புனல் மின் உற்பத்தி நிலையம் ஒன்றினை அமைக்கப் போவதாக 1982-ஆம் ஆண்டு சனவரி முதல் தேதியன்று அப்போது கருநாடக முதலமைச்சராக இருந்த குண்டுராவ் அறிவித்தார்.
6-2-1982 அன்று ஆளுநர் உரையின்மீது நடைபெற்ற விவாதத்தில் நான் பேசும்போது 1961-ஆம் ஆண்டிலிருந்து தமிழகம் திட்டமிட்டுள்ள ஒகேனக்கல் புனல் மின் திட்டம் இதனால் பாதிக்கப்படும் என்பதைச் சுட்டிக்காட்டினேன். மேக்கேதாட்டு திட்டம் நிறைவேற்றப்பட்டால் ஒகேனக்கல் திட்டத்திற்கு தண்ணீர் வராது. அத்திட்டத்தை கைவிட வேண்டிய நிலை ஏற்படும்.
அத்துடன் மேட்டூருக்கு வரும் தண்ணீரும் அடியோடு தடுக்கப்படும். தமிழகம் மின்சாரப் பற்றாக்குறை மாநிலமாகும். கருநாடகம் மின்சாரத்தில் தன்னிறைவு பெற்ற மாநிலமாகும். தமிழ்நாட்டிற்கு காவிரி ஒன்றே பெரிய ஆறு ஆகும். தமிழ்நாட்டின் நிலப்பகுதியில் 34% பகுதி காவிரிப் படுகையிலேயே அமைந்துள்ளது. கருநாடகத்தில் காவிரிப் படுகையின் பரப்பளவு அதன் நிலப்பகுதியில் 17% மட்டுமே.
தமிழ்நாட்டு ஆற்றுப்பாசன நிலத்தில் 60 விழுக்காடு காவிரி ஆற்றின் நீரையே நம்பியுள்ளது. ஆனால், கருநாடகத்தில் காவிரி மட்டுமின்றி, கிருஷ்ணா ஆறு, கோதாவரி ஆற்றின் கிளை ஆறுகள், துங்கபத்திரா கிளை ஆறு மற்றும் மேற்கு நோக்கிப் பாயும் பல ஆறுகள் உள்ளன.
இந்த ஆறுகளில் இருந்து கருநாடகம் 5500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இருப்பினும் 1400 மெகாவாட் மின்சாரம்தான் இதுவரை அம்மாநிலத்தில் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது.
மேலும் 4100 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய வழிவகை இருந்தும்கூட பற்றாக்குறை மாநிலமான தமிழகத்திற்குக் கேடுவிளைவிக்கும் வகையில் மேக்கேதாட்டு அணையைக் கட்டுவதற்கு முயற்சி செய்கிறது. தமிழக எல்லையில் இருந்து 15 கி.மீ. தொலைவில் இந்த அணை கட்டப்படுமானால் ஒகேனக்கல் அணையை நாம் கட்ட முடியாது. நமது திட்டத்தை கைவிட நேரிடும்' எனக்கூறினேன்.
எதிர்க்கட்சி வரிசையில் இருந்த பலரும்கூட ஆதரவு தெரிவித்தனர். மேக்கேதாட்டு திட்டத்திற்கு தமிழக அரசின் எதிர்ப்பை இந்திய அரசுக்கு அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். தெரிவித்தார். தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினைத் தொடுத்தார். இதன் விளைவாக மேக்கேதாட்டு திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை.
தமிழகத் திட்டத்தின்படி காவிரியில் இரண்டு அணைகள் கட்டப்படும். முதலாவதாக இராசிமணல் என்ற இடத்தில் அணை கட்டப்படும். இங்கு அமைக்கப்படும் புனல் மின் உற்பத்தி நிலையத்தின் மூலம் 360 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.
இந்த அணைக்குக் கீழே 5 கி.மீ. தொலைவில் ஒகேனக்கல் அணை கட்டப்பட்டு அங்கு 120 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இந்த இரண்டு அணைகளின் மூலம் 480 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்குக் கிடைக்கும்.
இதற்காக மேட்டூர் அணையின் உயரம் 10 அடி அதிகரிக்கப்படும். ஒகேனக்கல் மின் உற்பத்தித் திட்டத்தின் கீழ் கட்டப்படும் இரண்டு அணைகளின் விளைவாக இப்பகுதியில் பாசன வசதி எதுவும் செய்யப்படாது. மின்சார உற்பத்திக்காக மட்டுமே இந்த அணைகள் கட்டப்படும். இந்த அணைகளிலிருந்து வெளியேறும் நீர் மேட்டுர் அணையில் வந்து நிறையும்.
இந்த இரண்டு அணைகள் கட்டப்படுவதின் மூலம் காவிரிப் பாசனப் பகுதியில் வெள்ள அபாயம் நிரந்தரமாக நீங்கும். தமிழகத்தின் மின்சாரப் பற்றாக்குறை இதன் மூலம் தீர்க்கப்படும். இத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் இந்தியாவின் மற்ற மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து கிடைக்கக்கூடிய வருமானத்தைவிட அதிகமானதாகும்.
இப்பகுதி வன விலங்கு சரணாலயமாகவும், சுற்றுலா இடமாகவும் மாறி அந்நிய செலவாணி பெருகுவதற்கும் வழி ஏற்படும். உள்நாட்டு மீன் வளமும் பெருகும். இப்படிப் பலவகையிலும் ஒகேனக்கல் திட்டம் சிறந்தத் திட்டமாகும்.
தமிழகத்தின் இடைவிடாத முயற்சியின் காரணமாக மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் ஒகேனக்கல் புனல் மின் திட்டத்தை நிறைவேற்றலாம் என தேசிய புனல் மின்னுற்பத்தி ஆணையம் பரிந்துரை செய்தது. ஆனால், இத்திட்டத்திற்கு கருநாடக மாநிலத்தின் ஒப்புதலைப் பெற்றால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்தது.
ஆனால், கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக இத்திட்டங்களுக்கு கருநாடகம் ஒப்புதல் அளிக்காததால் மத்திய அரசு அனுமதி அளிக்க மறுத்து வருகிறது.
ஒகேனக்கல் திட்டத்தை தமிழகம் தயாரித்து மத்திய அரசு, தேசிய புனல் மின் உற்பத்தி ஆணையம் ஆகியவற்றின் ஒப்புதலுக்காக 25.8.1961-இல் அனுப்பிய காலக்கட்டத்தில் கருநாடக அரசு மேக்கேதாட்டு திட்டம் குறித்துச் சிந்திக்கக்கூட இல்லை. 1982-ஆம் ஆண்டில் அதாவது 21 ஆண்டுகள் கழித்து மேக்கேதாட்டு திட்டத்தை கருநாடகம் அறிவித்தது.
ஒகேனக்கல் திட்டத்தை நிறைவேற்றவிடக் கூடாது என்ற உள்நோக்கத்துடனும், கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிறைந்து வழிந்தோடி வரும் நீர், எவ்வித தடையும் இல்லாமல் நேரடியாக மேட்டூர் அணைக்கு வந்து சேருவதைத் தடுக்கும் நோக்கத்துடனும்தான் மேக்கேதாட்டு அணையை கட்டுவதில் கருநாடகம் முனைந்து நிற்கிறது.
மின்உற்பத்தி மட்டுமே அதன் நோக்கம் என்று சொன்னால் கருநாடகத்தில் ஓடும் ஆறுகளில் 4,100 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய வழி இருக்க, அதைச் செய்யாமல் மேக்கேதாட்டு திட்டத்தை கருநாடகம் முன்னிறுத்தி ஒகேனக்கல் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் 35 ஆண்டு காலமாக முட்டுக்கட்டைப் போட்டு வருகிறது என்ற உண்மையை உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுசெல்ல தமிழக அரசு தவறிவிட்டது.
1996-ஆம் ஆண்டிலிருந்து தமிழகமும் கருநாடகமும் புனல் மின் நிலையங்கள் அமைப்பது குறித்துப் பேச்சு வார்த்தை நடத்தின. தமிழகத்தில் ராசிமணல் புனல் மின் திட்டம், ஒகேனக்கல் புனல் மின் திட்டம், கருநாடகத்தில் சிவசமுத்திரம் திட்டம், மேக்கேதாட்டு திட்டம் ஆகிய திட்டங்கள் குறித்து நடைபெற்ற பேச்சு வார்த்தைகள் வெற்றி பெறவில்லை.
2009-ஆம் ஆண்டில் மத்திய அரசு அதிகாரிகளின் முன்னிலையில் இரு மாநில அதிகாரிகளும் நடத்திய முத்தரப்பு பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது. ஒகேனக்கல், இராசிமணல் திட்டங்களை மத்திய அரசே நிறைவேற்றி இரு மாநிலங்களும் மின்சாரத்தைப் பகிர்ந்து கொள்ளலாம் என தமிழகம் கூறிய யோசனையையும் கருநாடகம் ஏற்கவில்லை.
இப்போது தமிழகத்திற்கு வரும் தண்ணீரைத் தடுக்கும் ஒரே நோக்கத்துடன்தான் மேக்கேதாட்டு திட்டத்தைக் கருநாடகம் வலியுறுத்துகிறது.
2007-ஆம் ஆண்டில் காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பில், மேற்கண்ட நான்கு புனல் மின் உற்பத்தித் திட்டங்கள் குறித்து கூறுகையில் 'புனல் மின் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டாலும் அதன் மூலம் அணைகளில் தேக்கப்படும் காவிரி நீரை வேளாண்மைப் பயன்பாட்டிற்காக திறந்துவிடுவது குறித்து நாங்கள் ஏற்கெனவே இட்டுள்ள ஆணைகள் எக்காரணம் கொண்டும் மீறப்படலாகாது' என்று திட்டவட்டமாக கூறியது.
அதாவது தமிழகத்திற்கு அளிக்கப்படவேண்டிய நீர், குறித்த காலங்களில் குறித்தபடி அளிக்கப்பட வேண்டும் என்பதே இதற்குப் பொருளாகும்.
ஆனால், புனல் மின் திட்டங்களுக்கு நடுவர் மன்றம் அனுமதி அளித்துவிட்டதாக கருநாடகம் தவறாகப் பொருள் கொண்டு மேக்கேதாட்டு திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முற்படுகிறது. மேலும் காவிரிப் பிரச்னை உச்சநீதிமன்றத்தின் விசாரணையில் இன்னும் உள்ளது.
தனது முடிவினை உச்சநீதிமன்றம் அறிவிக்காத வகையில் மேக்கேதாட்டு அணைத் திட்டம் உள்பட எத்தகைய திட்டத்தையும் மேற்கொள்ளுவதற்கு கருநாடகத்திற்கு உரிமை கிடையாது.
1961-ஆம் ஆண்டிலிருந்து தமிழகம் திட்டமிட்ட ஒகேனக்கல் திட்டம், கருநாடக மாநிலத்தின் ஒப்புதல் கிடைக்காத காரணத்தினால் நிறைவேற்றப்படவில்லை.
ஆனால், கருநாடகத்தின் மேக்கேதாட்டு திட்டத்திற்கு தமிழகத்தின் ஒப்புதலைப் பெறாமலும் நடுவர் மன்றத்தின் ஆணையை மீறியும், உச்சநீதிமன்றத்தின் பரிசீலனையில் இப்பிரச்னை இருப்பதைப் பொருட்படுத்தாமலும் கருநாடகம் அடாவடித்தனமாக செயல்படுகிறது என்ற உண்மையைக் கணக்கில் எடுத்துக்கொள்ள உச்சநீதிமன்றம் தவறிவிட்டது. அதன் கவனத்திற்கு தமிழக அரசு கொண்டு செல்லத் தவறியதே இதற்குக் காரணமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com