இனிய தொடக்கம்

வளரும் சமுதாயத்தின் எந்தவொரு மாற்றமும் கீழிருந்துதான் தொடங்க வேண்டும். தமிழ்நாட்டுப் பள்ளிக் கல்வித் துறையின் அண்மைச் செயல்பாடுகள் நம்பிக்கையளிக்கத் தொடங்கி உள்ளன.சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித் துறையின் முப்பத்தேழு அறிவிப்புகள் தமிழ்ச் சமூகத்தின் எதிர்கால வளர்ச்சிக்குக் கட்டியம் கூறுகின்றன.புதிய தொடக்கப் பள்ளிகள், காலிப் பணியிடங்களை நிரப்புதல், கலை, இலக்கியம், நுண்கலைகளை வளர்க்கும் கலைத் திருவிழாக்கள், காணொலிப் பாடங்கள், கணினிவழித் தேர்வுகள், கைபேசி செயலிகள், புதுமைப் பள்ளி, கனவு ஆசிரியர் விருதுகள், கல்விப் பயணம், பெண் குழந்தைகளுக்கு நாப்கின் வழங்குதல் என உடனடி ஊக்கம் தரும் பல முடிவுகள்.தமிழ்மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்கு நீண்டகாலப் பலன்தரும் அயல் மாநில, அயல்நாடுகளில் தமிழ்க்கல்வி வளர்ச்சி, நூலகங்களுக்கு நூல் கொடைத் திட்டம் ஆகியவை அற்புதமானவை.பொது நூலகங்களுக்கு நூல் வாங்குதல் தொடங்கிக் கிராமப்புற நூலகங்களை மேம்படுத்துதல், மாவட்டம் தோறும் நூல் கண்காட்சிகள், கீழடி உள்ளிட்ட பண்பாட்டு அடையாளமிக்க இடங்களில் காட்சிக் கூடங்கள் போன்ற அறிவிப்புகள் தமிழ் வரலாற்றில் இடம்பெறத் தக்கவை.இந்தக் கல்வியாண்டின் தொடக்கமே இனியதாக அமைந்தது. பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் முன்னிலைப் பெற்றவர்களை அறிவிக்காதது நல்லதொரு முடிவு. ஊடகப் பரபரப்பும், பள்ளிகளின் கூச்சலும், கல்வி வணிகத்துக்கும், மாணவர்களின் மன நெருக்கடிகளுக்குமே வித்திடும்.தேர்தலுக்கு இணையாக உருவாக்கப்பட்ட தேர்வு முடிவு அறிவிப்புப் பிம்பங்கள் விழுந்து நொறுங்கின. அடுத்து பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வு பல பள்ளிகளில் நேரடியாக பன்னிரண்டாம் வகுப்புப் பாடங்களே நடத்தப்பட்டது என்பதுதான் உண்மை.தொடர்ந்து 10, 11, 12 ஆகிய மூன்று பொதுத் தேர்வுகள் மாணவர்களுக்குச் சுமைதான் என்றாலும் காலப்போக்கில் இவை சராசரி வகுப்புத் தேர்வுகள் போல ஆகிவிடும். மேலும் பன்னிரண்டாம் வகுப்புப் பாடங்கள், மதிப்பெண்கள் குறைந்து விடுவதும் மாணவர்களுக்கு ஆக்கம் தரும்.கல்வி என்பது அறிவின் நுழைவாயில். பகுத்தறியும் மரபறிவைப் பட்டைத் தீட்டும் பாங்கியல். எண்ணும், எழுத்தும் தானே பண்டையக் கல்வியின் தொடக்கப் பள்ளி. ஆனால் இன்று கல்வி என்பது வேலையோடு தொடர்புடையதாகிவிட்டது.கல்வி, வேலைவாய்ப்புக்கான அடிப்படையாக மாற்றப்பட்டதே சிக்கல்களுக்குக்காரணம். கல்வியையும்,தொழில் பழகுதல் சார்ந்த நுட்பங்களையும் பிரித்தறிய முற்படுவதுதான் இதற்குத் தீர்வு.இந்தியாவின் விடுதலைக்கு முன்னும் பின்னும் கல்வி சார்ந்து தொடர்ந்து விவாதிக்கப்படுகிறது. பல கல்விக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 'பழைய மொந்தையில் புதிய கள்' என்பதாகவே அவை அமைந்துவிட்டதுதான் சோகம்.குழந்தைகளின் நடத்தை உருவாக்கம்தான் கல்வியின் முதலும் முடிவுமான நோக்கம். அது இன்று கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. மதிப்பெண்கள் ஈட்டும் பந்தயக் குதிரைகளாகக் குழந்தைகளை மாற்றிவிட்டோம்.மருத்துவம் அல்லது பொறியியல் என்ற இரட்டை இலக்குகள்தான் பெரும்பான்மையரின் இலட்சியம். இன்றைய நீட், ஜேஇஇ தேர்வுகளின் முக்கியத்துவம்கூட மீண்டும் இதைத்தான் நிரூபிக்கின்றன.அண்மைக் காலங்களில் பள்ளிக் குழந்தைகள் தற்கொலை, கொலை, வன்முறை போன்ற செயல்களில் ஈடுபடுவது பரவலாகி வருகின்றது. இதற்கு குழந்தை வளர்ப்பும், கல்விச் சூழலுமே காரணம்.கல்வி சார்ந்த விளையாட்டு, கைத்திறன் பயிற்சி, ஓவியம், நுண் கலைகள், பொது நடத்தையியல் போன்ற செயல்பாடுகளை பள்ளிகளில் அதிகப்படுத்த வேண்டும். உண்டு, உறைவிடப் பள்ளிகளைத் தவிர்த்து அருகமைப் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்க வேண்டும்.வளர்ந்த நாடுகளின் கல்வியில் மக்களும் மாணவர்களும் இயற்கை அறிவியல், மொழி, இலக்கியம், மேலாண்மையியல், மானிடவியல் போன்ற துறைகளையே பெரிதும் நாடுவதை நோக்க வேண்டும்.அடுத்து முக்கியமானது, கல்வியில் மொழிப் பயன்பாடு. ஒருவர் எத்தனை மொழிகளையும் கற்கலாம். ஆனால் பாடங்களை எந்த மொழியில் கற்கிறோம் என்பது முக்கியம். உலகின் பல நாடுகளின் அறிவுத்துறையின் வெற்றி தாய்மொழிக் கல்வியில் அடங்கி இருக்கிறது.உப்புக்கும் அதன் சுவைக்கும் உள்ளத் தொடர்பு குழந்தைக்கும் தாய்மொழிக்குமான உறவு என்பார் காந்தியடிகள். தமிழ்நாட்டில் பதின்மப் பள்ளிகளின் வருகை 1970}களில் தொடங்குகிறது. இதற்குப் பின்னர்தான் பள்ளிக் கல்வி இறங்குமுகத்துக்கு வருகிறது. அதுவரை தமிழ்வழிப் பள்ளிகளில் பயின்றவர்கள்.தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் திறன் பெற்றவர்களாகத் திகழ்ந்தார்கள். பல தமிழறிஞர்கள் ஆங்கிலத்தில் வல்லவர்களாகவும், மொழிபெயர்ப்பாளர்களாகவும் விளங்கினார்கள். இன்று ஆங்கிலமும், தமிழும் சரியாகத் தெரியாத ஒரு தலைமுறை உருவாகிவிட்டது.நம் அண்டை மாநிலங்களிலெல்லாம் கூட தாய்மொழி வழிக்கல்வியும், அந்தந்த மாநில மொழிகளைக் கட்டாயம் கற்பிக்கும் நிலையும் உருவாகிவிட்டப் பின்பும் தமிழ்நாட்டில் உறுதியான நிலைபாடு இல்லை.மொழிக்கல்வி, தாய்மொழிக் கல்வி, பிற மொழிகள் கற்றல் ஆகியன குறித்து அரசும், மக்களும், கல்வியாளர்களும் சிந்திக்க வேண்டிய காலமிது.கல்வி, குழந்தைகள் பற்றிய அக்கறை மட்டுமே எதிர்காலவியலின் அடிப்படை. தமிழ்நாட்டில் பல்லாண்டுகளாக ஆட்சிமாறும்போது பாடப்புத்தகங்களில் சில காட்சிகள் மட்டுமே மாறுவது வாடிக்கையாக இருந்தது.தமிழ்நாட்டு அரசியல் இந்திய, உலக ஊடகங்களில் எள்ளல்படும் இத்தருணத்தில் பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகள் இதம் தருகின்றன. எங்கிருந்து தொடங்குவது என்பதுதான் சிக்கல்.தனி மனித, சமூக நெருக்கடிகளுக்குத் தீர்வு, நம் வீடுகளிலிருந்தும் குழந்தைகளிடமிருந்தும் மாற்றங்களை உருவாக்குவதுதான்; பெற்றோரின் மனநிலைகளிலும் மாற்றம் வந்தாக வேண்டும். 

வளரும் சமுதாயத்தின் எந்தவொரு மாற்றமும் கீழிருந்துதான் தொடங்க வேண்டும். தமிழ்நாட்டுப் பள்ளிக் கல்வித் துறையின் அண்மைச் செயல்பாடுகள் நம்பிக்கையளிக்கத் தொடங்கி உள்ளன.
சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித் துறையின் முப்பத்தேழு அறிவிப்புகள் தமிழ்ச் சமூகத்தின் எதிர்கால வளர்ச்சிக்குக் கட்டியம் கூறுகின்றன.
புதிய தொடக்கப் பள்ளிகள், காலிப் பணியிடங்களை நிரப்புதல், கலை, இலக்கியம், நுண்கலைகளை வளர்க்கும் கலைத் திருவிழாக்கள், காணொலிப் பாடங்கள், கணினிவழித் தேர்வுகள், கைபேசி செயலிகள், புதுமைப் பள்ளி, கனவு ஆசிரியர் விருதுகள், கல்விப் பயணம், பெண் குழந்தைகளுக்கு நாப்கின் வழங்குதல் என உடனடி ஊக்கம் தரும் பல முடிவுகள்.
தமிழ்மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்கு நீண்டகாலப் பலன்தரும் அயல் மாநில, அயல்நாடுகளில் தமிழ்க்கல்வி வளர்ச்சி, நூலகங்களுக்கு நூல் கொடைத் திட்டம் ஆகியவை அற்புதமானவை.
பொது நூலகங்களுக்கு நூல் வாங்குதல் தொடங்கிக் கிராமப்புற நூலகங்களை மேம்படுத்துதல், மாவட்டம் தோறும் நூல் கண்காட்சிகள், கீழடி உள்ளிட்ட பண்பாட்டு அடையாளமிக்க இடங்களில் காட்சிக் கூடங்கள் போன்ற அறிவிப்புகள் தமிழ் வரலாற்றில் இடம்பெறத் தக்கவை.
இந்தக் கல்வியாண்டின் தொடக்கமே இனியதாக அமைந்தது. பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் முன்னிலைப் பெற்றவர்களை அறிவிக்காதது நல்லதொரு முடிவு. ஊடகப் பரபரப்பும், பள்ளிகளின் கூச்சலும், கல்வி வணிகத்துக்கும், மாணவர்களின் மன நெருக்கடிகளுக்குமே வித்திடும்.
தேர்தலுக்கு இணையாக உருவாக்கப்பட்ட தேர்வு முடிவு அறிவிப்புப் பிம்பங்கள் விழுந்து நொறுங்கின. அடுத்து பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வு பல பள்ளிகளில் நேரடியாக பன்னிரண்டாம் வகுப்புப் பாடங்களே நடத்தப்பட்டது என்பதுதான் உண்மை.
தொடர்ந்து 10, 11, 12 ஆகிய மூன்று பொதுத் தேர்வுகள் மாணவர்களுக்குச் சுமைதான் என்றாலும் காலப்போக்கில் இவை சராசரி வகுப்புத் தேர்வுகள் போல ஆகிவிடும். மேலும் பன்னிரண்டாம் வகுப்புப் பாடங்கள், மதிப்பெண்கள் குறைந்து விடுவதும் மாணவர்களுக்கு ஆக்கம் தரும்.
கல்வி என்பது அறிவின் நுழைவாயில். பகுத்தறியும் மரபறிவைப் பட்டைத் தீட்டும் பாங்கியல். எண்ணும், எழுத்தும் தானே பண்டையக் கல்வியின் தொடக்கப் பள்ளி. ஆனால் இன்று கல்வி என்பது வேலையோடு தொடர்புடையதாகிவிட்டது.
கல்வி, வேலைவாய்ப்புக்கான அடிப்படையாக மாற்றப்பட்டதே சிக்கல்களுக்குக்காரணம். கல்வியையும்,தொழில் பழகுதல் சார்ந்த நுட்பங்களையும் பிரித்தறிய முற்படுவதுதான் இதற்குத் தீர்வு.
இந்தியாவின் விடுதலைக்கு முன்னும் பின்னும் கல்வி சார்ந்து தொடர்ந்து விவாதிக்கப்படுகிறது. பல கல்விக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 'பழைய மொந்தையில் புதிய கள்' என்பதாகவே அவை அமைந்துவிட்டதுதான் சோகம்.
குழந்தைகளின் நடத்தை உருவாக்கம்தான் கல்வியின் முதலும் முடிவுமான நோக்கம். அது இன்று கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. மதிப்பெண்கள் ஈட்டும் பந்தயக் குதிரைகளாகக் குழந்தைகளை மாற்றிவிட்டோம்.
மருத்துவம் அல்லது பொறியியல் என்ற இரட்டை இலக்குகள்தான் பெரும்பான்மையரின் இலட்சியம். இன்றைய நீட், ஜேஇஇ தேர்வுகளின் முக்கியத்துவம்கூட மீண்டும் இதைத்தான் நிரூபிக்கின்றன.
அண்மைக் காலங்களில் பள்ளிக் குழந்தைகள் தற்கொலை, கொலை, வன்முறை போன்ற செயல்களில் ஈடுபடுவது பரவலாகி வருகின்றது. இதற்கு குழந்தை வளர்ப்பும், கல்விச் சூழலுமே காரணம்.
கல்வி சார்ந்த விளையாட்டு, கைத்திறன் பயிற்சி, ஓவியம், நுண் கலைகள், பொது நடத்தையியல் போன்ற செயல்பாடுகளை பள்ளிகளில் அதிகப்படுத்த வேண்டும். உண்டு, உறைவிடப் பள்ளிகளைத் தவிர்த்து அருகமைப் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்க வேண்டும்.
வளர்ந்த நாடுகளின் கல்வியில் மக்களும் மாணவர்களும் இயற்கை அறிவியல், மொழி, இலக்கியம், மேலாண்மையியல், மானிடவியல் போன்ற துறைகளையே பெரிதும் நாடுவதை நோக்க வேண்டும்.
அடுத்து முக்கியமானது, கல்வியில் மொழிப் பயன்பாடு. ஒருவர் எத்தனை மொழிகளையும் கற்கலாம். ஆனால் பாடங்களை எந்த மொழியில் கற்கிறோம் என்பது முக்கியம். உலகின் பல நாடுகளின் அறிவுத்துறையின் வெற்றி தாய்மொழிக் கல்வியில் அடங்கி இருக்கிறது.
உப்புக்கும் அதன் சுவைக்கும் உள்ளத் தொடர்பு குழந்தைக்கும் தாய்மொழிக்குமான உறவு என்பார் காந்தியடிகள். தமிழ்நாட்டில் பதின்மப் பள்ளிகளின் வருகை 1970}களில் தொடங்குகிறது. இதற்குப் பின்னர்தான் பள்ளிக் கல்வி இறங்குமுகத்துக்கு வருகிறது. அதுவரை தமிழ்வழிப் பள்ளிகளில் பயின்றவர்கள்.
தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் திறன் பெற்றவர்களாகத் திகழ்ந்தார்கள். பல தமிழறிஞர்கள் ஆங்கிலத்தில் வல்லவர்களாகவும், மொழிபெயர்ப்பாளர்களாகவும் விளங்கினார்கள். இன்று ஆங்கிலமும், தமிழும் சரியாகத் தெரியாத ஒரு தலைமுறை உருவாகிவிட்டது.
நம் அண்டை மாநிலங்களிலெல்லாம் கூட தாய்மொழி வழிக்கல்வியும், அந்தந்த மாநில மொழிகளைக் கட்டாயம் கற்பிக்கும் நிலையும் உருவாகிவிட்டப் பின்பும் தமிழ்நாட்டில் உறுதியான நிலைபாடு இல்லை.
மொழிக்கல்வி, தாய்மொழிக் கல்வி, பிற மொழிகள் கற்றல் ஆகியன குறித்து அரசும், மக்களும், கல்வியாளர்களும் சிந்திக்க வேண்டிய காலமிது.
கல்வி, குழந்தைகள் பற்றிய அக்கறை மட்டுமே எதிர்காலவியலின் அடிப்படை. தமிழ்நாட்டில் பல்லாண்டுகளாக ஆட்சிமாறும்போது பாடப்புத்தகங்களில் சில காட்சிகள் மட்டுமே மாறுவது வாடிக்கையாக இருந்தது.
தமிழ்நாட்டு அரசியல் இந்திய, உலக ஊடகங்களில் எள்ளல்படும் இத்தருணத்தில் பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகள் இதம் தருகின்றன. எங்கிருந்து தொடங்குவது என்பதுதான் சிக்கல்.
தனி மனித, சமூக நெருக்கடிகளுக்குத் தீர்வு, நம் வீடுகளிலிருந்தும் குழந்தைகளிடமிருந்தும் மாற்றங்களை உருவாக்குவதுதான்; பெற்றோரின் மனநிலைகளிலும் மாற்றம் வந்தாக வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com