எல்லாரும் விளையாடுவோம்

உலகத்தில் ஓட்டம் என்பதே இயக்கத்தைக் குறிப்பதாகும். இரத்தநடை என்று யாரும் குறிப்பிடுவதில்லை.

உலகத்தில் ஓட்டம் என்பதே இயக்கத்தைக் குறிப்பதாகும். இரத்தநடை என்று யாரும் குறிப்பிடுவதில்லை. இரத்த ஓட்டம் என்பதுதான் வழக்கு. அதுபோலவே நீரோட்டம் தொடங்கி எண்ணவோட்டம் வரை நீள்கிறது ஓட்டம்.
கிராமப்புறங்களில் ஏதோ வண்டி ஓடுது என்று கூறுவது வாழ்வின் இயக்கத்தைப் பற்றித்தான் என்பதை எல்லாரும் அறிவார். கையில் ஓட்டம் இல்லை என்பது பொருளாதாரத்தைக் குறிக்கும் அதே வழக்குத்தான். ஆக மொத்தம் வாழ்வியலின் இயக்கமே ஓட்டம்தான்.
இன்றைய ஓட்டம் பெரும்பாலும் உட்கார்ந்த படியேதான் இருக்கிறது. விளையாட்டுக்குக் கூட யாரும் ஓடி விளையாடுவதைக் காணோம். ஓட்டத்தின் ஊற்றுக்கண்ணே விளையாட்டுத்தான். அது இன்றைக்கு முடங்கிப் போய்க் கிடக்கிறது.
மைதானங்களிலும், வயல் வரப்புகளிலும் ஓடி விளையாடுகிற சிறுவர்களைக் கூடக் காண முடிவதில்லை.
அதனால் கைகளில் செல்லிடப் பேசியை வைத்துக் கொண்டோ அல்லது மடியில் மடிக்கணியைச் சுமந்து கொண்டோ ஏதோ ஓர் உருவத்தை ஓட வைத்துக் கொண்டிருக்கிற வேடிக்கையை எல்லா இடங்களிலும் காண முடிகிறது.
ஓடுதலும் குதித்தலும் தாண்டுதலும் மரமேறுதலும் நீந்துதலும் ஆகிய பல விளையாட்டுகள் மெல்ல மெல்ல மறக்கப்பட்டு வருகின்றன.
அவை வெறும் விளையாட்டல்ல, அவற்றுக்குப் பின்னால் கதைகளும் பாடல்களும் உடற்கூற்று நுட்பங்களும் இயற்கையியலோடு பின்னிப் பிணைந்திருக்கின்றன.
நாந்தான் வீரன்டா நல்லமுத்து பேரன்டா வெள்ளிச் சிலம்பெடுத்து விளையாட வாரன்டா தங்கச் சிலம்பெடுத்துத் தாலிகட்ட வாரன்டா சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு என்ற பாடலோடு குறிப்பிட்ட கோடுகளுக்குள் எதிராளியைத் தொட்டு விட்டு வருவதும் தன்னைத் தொட வருகிற எதிராளியை மடக்கிச் சாமர்த்தியமாய்த் தரை சாய்ப்பதும் உடல் மற்றும் உளத்திற்கு உவகை ஊட்டும் அற்புதமான விளையாட்டல்லவா?
ஒத்தையா ரெட்டையா என்னும் விளையாட்டு- பருவ காலங்களில் எங்கும் பரவிக் கிடக்கும் புளிய முத்து(விதை)களை ஒன்று சேர்த்து ஆடும் ஆட்டம். கணக்கீட்டிற்கு உகந்த அருமையான விளையாட்டு.
கைப்பிடிக்குள் இருக்கின்ற முத்துகள் ஒற்றை இலக்கமா, இரட்டை இலக்கமா என்று அனுமானித்துச் சொல்லுகிற விளையாட்டு.
"ஒத்தையா ரெட்டையான்னச் சொல்லு முத்தையா தப்பா இருந்தா தரணும் ரெட்டிப்பு சரியா இருந்தா நாந்தாரேன் ரெட்டிப்பு' என்று சொல்லிக் கொண்டே மூடிய கைகளுக்குள் இருக்கிற முத்தைக் காட்டுவோரிடம் ஒத்தை என்றோ ரெட்டை என்றோ சொன்னால் விடை பின்னால் கணக்கிடப்பட்டு முத்துகள் வெற்றி பெற்றவருக்கு இரட்டிப்பாய் வந்து சேரும்.
கணக்கு விளையாட்டு இது. ஆழ்மனப் பயிற்சிக்கு வித்திடுகிற விளையாட்டு.
பளிங்குகளால் ஆன குண்டுகளைக் கொண்டு விரல்களுக்கும் கண்களுக்கும் ஒருசேர விசைதந்து ஆடும் ஆட்டம் கோலி எனப்படும் குண்டு விளையாட்டு.
இடது கைக் கட்டை விரலை நிலத்தில் அழுந்தப் பதித்து, அதே கையின் நடுவிரலின் நுனியில் கோலியைப் பொருத்திக் கொண்டு வலது கையின் நடுவிரலாலும் துணைப்பகுதிகளைக் கொண்டும் குறி வைத்துத் தூரத்தில் இருக்கிற மற்றொரு குண்டை அடிக்கிற விளையாட்டு.
"அடிக்கிற குண்டுல அம்பாரி செதறும் விடுக்கிற விசையில வெம்பாறை நொறுங்கும் என் விரலு வில்லாக கோலி அம்பாக குறி பாத்து அடிப்பேன் உங்கோலி பொடிப்பேன்' என்று பாடிக் கொண்டே ஆடும் ஆட்டம்.
எல்லாருக்கும் பிடித்ததான கண்ணாம்பூச்சி என்னும் கண்பொத்தி விளையாட்டு கண்களுக்கு மட்டுமல்ல உடலில் இருக்கும் காந்தப் புலத்துக்கே நல்ல பலனைத் தரும் விளையாட்டு.
எந்தத் திசையில் நிற்கிறோம் என்பதை மனத்தாலே ஊகித்துக் கொண்டு நகர்ந்து தன்னைப் பழிப்புக் காட்டுகிற எதிராளியைத் துரத்திப் பிடிக்கிற விளையாட்டு.
"கண்ணு ரெண்டும் கட்டிக்கிட்டு, கையை மட்டும் நீட்டிக்கிட்டு காத்துக் குதிரையேறி களவாணியப் பிடிக்கப் போறேன் பாத்து இருந்துக்கோ பதுங்கி இருந்துக்கோ தொட்டாப் போதும் தோட்டாத் தேவையில்லை சுட்ட மாதிரியே சுருண்டு விழுந்திரணும்' என்று சொல்லிக் கொண்டே துரத்தி ஓடி விளையாடுகிற விளையாட்டு இந்த ஆட்டம். ஞான திருஷ்டிக்கு உரிய நல்ல ஆட்டம் இது.
சிறுதேர் உருட்டி விளையாடுவதும் சங்க கால விளையாட்டுத்தான். அது இன்றைக்குக் கிராமப்புறங்களில் நொங்கு வண்டி, டயர் வண்டி என்ற பெயர்களில் மறைந்து கொண்டு வருகிறது. ஓட்டத்துக்கும் நுட்ப ஒழுங்குக்கும் கைவினைக்கும் எடுத்துக்காட்டு இந்த விளையாட்டு.
பன நுங்கினை உறிஞ்சிக் குடித்தபின் அதனை நன்றாகச் செதுக்கி வாகனங்களின் அச்சினைப் போல டயராகச் செய்து இடையில் ஒரு கழியால் இணைப்புக் கொடுத்து கவட்டை என்னும் பெரியகழியால் ஸ்டியரிங் செய்து கொண்டு ஊர்முழுக்க வலம் வருகிற அந்த விளையாட்டு நடையும் ஓட்டமுமாய் இருக்கும்.
மேற்சொன்ன எல்லா விளையாட்டுகளுமே ஓட்டத்தை அடிப்படையாகக் கொண்டவைதான். சிறுவர்களுக்குத் தரப்பட்ட தண்டனை கூட விளையாட்டை அடிப்படையாகக் கொண்டவைதான். தோப்புக்கரணம், முழங்காலிடல், கொக்குப் பிடித்தல், மைதானத்தைச் சுற்றி வருதல் இவையெல்லாம் தண்டனையா? உடற்பயிற்சியல்லவா?
இவை ஏதோ சிறுவர்களுக்கானது என்றில்லை. விளையாட்டுகள் வாழ்க்கையைப் போலவே விதியை அடிப்படையாகக் கொண்டவை. அவை வாழ்க்கையைச் சிறுவயதிலிருந்தே தெளிவாகக் கற்றுத் தருகின்றன. பாரதியார் ஓடி விளையாடு என்று சொன்னது பாப்பாக்களுக்கு மட்டுமில்லை; எல்லா வயதினருமே ஓடி விளையாட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com