உலகப் புகழ்பெற்ற ஸ்பானிய ஓவியர் பிகாஸோவின் ஓவியம் அபெர்டீன்ஷையர் எனும் இடத்திலுள்ள டஃப் ஹவுஸில் நடைபெறும் கண்காட்சிக்காக தற்காலிகமாக இடம்பெயர்க்கப்பட்டுள்ளது.
‘லெ ஸோல்ஸ்’ (Les Soles) எனும் புகழ்பெற்ற அந்த ஓவியம் மிகவும் அரிதாகவே எடின்பரோவில் உள்ள ஸ்காட்லாண்ட் நேஷனல் காலரியிலிருந்து வெளியே எடுத்துச் செல்லப்படும். கடந்த செய்வாய்கிழமை அன்று டஃப் மாளிகையில் நடைபெறும் கண்காட்சிக்காக இடம்பெயர்க்கப்பட்டது. டஃப் மாளிகைக்கு வருகை தரும் பார்வையாளர்களின் காட்சிக்காக இந்த அரிய கலைப்படைப்பு அக்டோபர் 29, 2017 வரை வைக்கப்பட்டிருக்கும்.
பிகாஸோ ஸ்பெயினிலுள்ள மெலேகாவில் பிறந்து, பார்ஸிலோனாவில் வளர்ந்து, பாரிஸில் வாழ்ந்தவர். முப்பரிமாண ஓவியங்கள் வரைவதில் முன்னோடி அவர்தான். 92 வயது வரை உலகப் புகழ்பெற்று வாழந்தார்.
ரொயன் எனும் நகரின் அருகில் இருக்கும் கடல் பகுதியை மையப்படுத்தி பிகாஸோ லெ ஸோல்ஸ் ஓவியத்தை வரைந்துள்ளார். இந்த ஓவியத்தில் ஒரு நண்டும், இரண்டு மீன்களும் உள்ளது. அது பிகாஸோவும் அவரது இரண்டு மனைவியரைக் குறிப்பதாகும்.
உலகப் புகழ்பெற்ற இந்த ஓவியத்தை பிகாஸோ 1940 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாரிசுக்கு மூன்று மாத பயணம் சென்ற போது வரைந்தார். அதற்கு முன்னர் இரண்டாம் உலகப் போரில் நாஜி துருப்புக்கள் ஆக்கிரமித்த சமயத்தில் கடலோரப் பகுதி ரொயனுக்குத்தான் அவர் தப்பிச் சென்றார்.
டஃப் ஹவுஸ், ஸ்காட்லாந்தின் சிறந்த மாளிகையில் ஒன்று, இரண்டாம் உலகப் போரில் ஒரு காவற்படை முகாமாகவும், போர் கைதி (POW) முகாமுக்காகவும் பயன்படுத்தப்பட்டது. தவிர நோர்வே கூட்டணிகளுக்கான ஒரு தளமாகவும் இருந்துவந்தது.
டஃப் ஹவுஸின் மேலாளரான கிரேம் குர்ரான் இவ்வாறு குறிப்பிட்டார்: ‘டஃப் ஹவுஸில் நவீன காலத்தின் மிகவும் பிரபலமான கலைஞர்களில் ஒருவரான பிகாஸோவின் கலைப்படைப்பை கண்காட்சியில் வைத்திருப்பதை எண்ணி பெருமிதம் அடைகிறோம். கண்காட்சிக்கான பொருத்தமான இடம் டஃப் ஹவுஸ். லெ ஸோல்ஸ் உத்வேகம் தரும் ஒரு உன்னத கலையாக்கம்’ என்றார்.
டஃப் ஹவுஸின் நிர்வாகக் காப்பாளர் ஹன்னா ப்ரக்லெஹர்ஸ்ட் கூறுகையில், ‘இந்த ஓவியம் மிக அரிதாகவே வெளியில் சென்றுள்ளது. அதுவும் பல வருடங்கள் கழித்து எடின்பரோவுக்கு வெளியே செல்வது இதுவே முதல் முறை. டஃப் ஹவுஸ் போன்ற அழகான இடத்தில் பார்வையாளர்களுக்காக இந்தக் கலையம்சம் பயணிப்பது உண்மையில் எங்களுக்குப் பெருமிதம்’ என்றார்.
1700-களில் ஒரு பணக்கார தொழிலதிபருக்காக கட்டப்பட்டது இந்த டஃப் ஹவுஸ். ஆனால் இரண்டாம் உலகப் போரின் போது கடுமையான பாதிப்புக்குள்ளானது. 1995-ஆம் ஆண்டு மீண்டும் புனரமைக்கப்பட்டது.
எல் கிரேகோ, கெய்ன்ஸ் பரோ, ரெய்பர்ன் போன்ற புகழ்பெற்ற கலைஞர்களின் படைப்புக்கள் மற்றும் சமகால கலைஞர்களின் படைப்புக்களும் தற்போது டஃப் ஹவுஸில் பாதுகாக்கப்படுகின்றன.