“சென்னை மக்கள் ஏன் நாகரீக வளர்ச்சியில் இன்னமும் பின்தங்கியே உள்ளனர்? மற்ற மெட்ரோபாலிடன் நகர மக்களின் அளவிற்குத் திறந்த மனம் படைத்தவர்களாக ஏன் இல்லை?” என்று இணையத்தில் ஒருவர் கேட்ட கேள்விக்குத் தக்க பதிலடியைக் கொடுத்துள்ளார்கள் நெட்டிசன்கள்.
இணையத்தில் மக்களிடையே எழும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் பதில் தேடி தெரிந்துகொள்ளும் ஒரு தளமாக 'குவோரா' (Quora) உள்ளது. இதில் ஒருவர் மெட்ரோபாலிடன் நகரமான சென்னை மற்ற மெட்ரோபாலிடன் நகரங்களைப் போன்று நாகரீகத்தில் ஏன் வளர்ச்சி அடையவில்லை? என்று கேலியாக எழுப்பிய கேள்விக்கு, சென்னை மேல் அதீத பற்று வைத்துள்ள பலரும் பதிலளித்துள்ளனர்.
அவற்றில் சில;
நீங்கள் எதை நாகரீகம் என்று கருதுகிறீர்கள்?
- குட்டைப் பாவாடை அணிந்து, முடியில் கலர் அடித்து, கிழிந்த ஜீன்களை அணிவதா?
- வன்முறையை ஊக்குவிப்பதா?
- நைட் கிலப் என்கிற பெயரில் அதி காலை 5 மணி வரை பார்ட்டி செய்வதா?
- பொது இடங்களில் கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்துக்கொள்வதா?
- போதை பொருட்களை சர்வ சாதாரணமாக பயன்படுத்துவதா?
- பாலியல் தொழில் செய்வதற்காகத் தனி இடம் வரையறுப்பதா?
தமிழ்நாடு கலாச்சாரம், சுய ஒழுக்கம், மரபுகளைப் பின்பற்றுவது மற்றும் சக மனிதர்களை மதிப்பது போன்ற பல பெருமைகளைக் கொண்ட மாநிலம். அப்துல் கலாம், சுந்தர் பிச்சை, ஷிவ் நாடார், இந்திரா நோயி போன்ற பலரும் இந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களே. இவ்வாறு பல சிறப்புகளைக் கொண்ட மாநிலத்தில் இருக்கும் மெட்ரோபாலிட்டன் நகரமானாலும் அதற்குரிய பண்பை இழந்துவிட முடியாது. சென்னை வெள்ளத்தின் போது எவ்வளவு வேகமாக அந்தத் துயரிலிருந்து சென்னை மீண்டது என்று அறிவீர்களா? இதில் நாகரீகத்திற்கு என்ன தேவையுள்ளது, மனித நேயமே தேவை.
பழமையை விடுத்து வாழ்க்கை முறையையே மாற்றிக் கொள்வதற்கு பெயர் நாகரீகம் இல்லை. புதுமையை வரவேற்றாலும் அதே சமயத்தில் பழமையை மறக்காமல் மரபு தவறாமல் வாழ்வதே உண்மையான நாகரீக வளர்ச்சி ஆகும். அந்த வகையில் பார்த்தால் தமிழ் நாட்டைச் சேர்ந்த சென்னை நாகரீக வளர்ச்சியில் உலகிற்கே ஒரு முன்னோடி என்றே கூறலாம்.