தமிழகத்தின் குறிப்பிடத்தக்க ஓவியக் கலைஞர்களில் ஒருவராகத் திகழ்ந்த ஓவியர் வீர சந்தானம் நேற்று மறைந்தார். தமிழ் ஈழ மக்களின் பிரச்னைகளுக்காக, தமிழ்த் தேசிய இயக்கங்களுடன் இணைந்து தொடர்ந்து குரல் எழுப்பி வந்தவர்களில் இவர் குறிப்பிடத்தக்கவர். ஈழ இனப்படுகொலையை தமிழர் வரலாற்றில் ஆறாத வடுவாக ஆவணப்படுத்தும் நோக்கில் தஞ்சையில் கட்டமைக்கப்பட்ட ‘முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்’ இவரது கைவண்ணத்தால் உருப்பெற்றதே, இன்று அவை சிதைக்கப்பட்டிருந்தாலும் கூட தமது தமிழினம், சிங்களரது அரசாங்கத்தில் அனுபவித்து வரும் சொல்லொணாத் துயரங்களுக்கும், கொடுமைகளுக்கும் வடிவம் தந்து அவற்றை சிற்பங்களாக ஆக்கி உலகத்தின் முன் வைக்கும் தைரியம் மிக்க கலைஞர்களில் ஒருவரான வீர சந்தானத்தை இழந்தது ஓவியக்கலைக்கு ஒரு பேரிழப்பே!
தமிழ்நாட்டின் உப்பிலியப்பன் கோயில் எனும் சிற்றூரில் பிறந்த ஓவியர் வீர சந்தானம் சென்னையில் தம் மனைவி மற்றும் இரு மகள்களுடன் வசித்து வந்தார். அவருக்கு வயது 71. நேற்று திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பலனளிக்காமல் மறைந்தார். மறைந்த வீர சந்தானமும், தமிழகத்தின் சிறந்த ஓவியர்களில் மற்றொருவருமான காலஞ்சென்ற ஓவியர் ஆதிமூலமும், இந்திரா காந்தியின் ஆதரவுடன் பப்புல் ஜெயகரால் கொண்டு வரப்பட்ட நெசவாளர் சேவை சங்கத்தில் இணைந்து செயலாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக கோயில் திருத்தலங்களில் வரையப்பட்டுள்ள சுவரோவியங்கள் மற்றும் பாவைக்கூத்து கலை மூலம் ஈர்க்கப் பட்டு தான் ஓவியரானதாக பல்வேறு சந்தர்பங்களில் வீர சந்தானம் தெரிவித்திருப்பதாக அவரது நெடுநாள் நண்பரும் ஓவியருமான ஓவியர் ட்ராட்ஸ்கி மருது கூறினார்.
ஓவியர் வீர சந்தானத்தின் உடல் பொதுமக்கள் இறுதி அஞ்சலிக்காக, தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
ரோஜர் மூர் மறைந்தார்... ஆனால் 007 பாண்ட்... ஜேம்ஸ் பாண்ட்க்கு எப்போதும் மரணமே இல்லை!
அப்துல் ரகுமானின் பால்வீதி வெளியும்... நானும்...
“வாணியம்பாடி வானம்பாடி மறையலாம்; ஆனால் அது விட்டுச் சென்ற கவிதைகள் என்றென்றும் நம்மோடு!”
தெலுங்குத் திரையுலகின் ‘கே. பாலசந்தரான’ தாசரி நாராயண ராவ் பற்றிய அறியாத செய்திகள்...