தற்போதுள்ள வங்கி நடைமுறைகள் காலத்துக்கு ஒவ்வாதவையாக உள்ளன என்று பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா கருத்து தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட அவர் இதுகுறித்து மேலும் தெரிவித்ததாவது:
வங்கிகள் தற்போது தொழிலதிபர்களுக்கும், கடனைத் திரும்ப செலுத்தாதவர்களுக்கு மட்டுமே அதிக அளவில் கடன்களை வழங்கி வருகிறது. தற்போதைய நிதி சேவை முறை சாதாரண நேர்மையான மனிதர்களைத் தண்டிப்பதாகத்தான் உள்ளது. அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி கோடி கோடியாய் கடன் வாங்கியவர்கள் எல்லாம் அதனை திரும்பச் செலுத்தாமல் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் இன்னும் சொகுசாக வாழ்ந்து கொண்டு உள்ளனர். வழக்குப் போடுவதால் மட்டும் வங்கி நடைமுறைகளில் மாற்றங்களை கொண்டு வர இயலாது.
தற்போது இந்தியாவில் உள்ள வங்கிகள் அனைத்தும் காலத்துக்கு ஒவ்வாத விதிமுறைகளை பின்பற்றி வருகின்றன. இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.
குறிப்பாக, பேமெண்ட் வங்கிகள் அந்த அவல நிலையை நிச்சயம் மாற்றும். நிதி சேவை கிடைக்காத லட்சக்கணக்கானோரையும் நிதி சேவை வளையத்துக்குள் கொண்டு வருவதே பேமெண்ட் வங்கிகளின் இலக்கு. பேடிஎம் நிறுவனம் பேமெண்ட் வங்கி தொடங்குவதற்கு கடந்த ஜனவரியில் ரிசர்வ் வங்கி தனது இறுதி ஒப்புதலை அளித்தது. இயக்குநர் குழு அமைப்பு, அவர்களின் ஊதியம் உள்ளிட்டவை குறித்த ஒப்புதல் பெற வேண்டி பேடிஎம் காத்திருக்கிறது என்கிறார் விஜய் சேகர் சர்மா.