தண்ணீருக்கும் நினைவாற்றல் உண்டு !

கடந்த சில வருடங்களாக, நீர், நீரின் ஆற்றல் குறித்து முனைப்புடன் ஆராய்ச்சிகள்
தண்ணீருக்கும் நினைவாற்றல் உண்டு !

நம் வாழ்வின் அடித்தளமாக உள்ள பொருட்களில் மிக முக்கிய பங்கு வகிப்பது தண்ணீர். திட நிலை, திரவ நிலை, வாயு நிலை போன்ற மூன்று தன்மைகளிலும் இருக்கின்ற, மிகச் சிலவற்றுள் நீரும் ஒன்றாக இருக்கின்றது. இந்த தண்ணீருக்கும் நினைவாற்றல் உண்டு என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். இப்படிப்பட்ட நீரின் மறைஞானத்தை விளக்குகிறது இக்கட்டுரை…

கடந்த சில வருடங்களாக, நீர், நீரின் ஆற்றல் குறித்து முனைப்புடன் ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. உலகில் எங்கு பார்த்தாலும் ஒரு நபருக்குத் தேவையான குறைந்தபட்ச தண்ணீர் கிடைப்பது கூட குறைந்துகொண்டே செல்வதால் இந்த நடவடிக்கை தொடங்கியுள்ளது. உதாரணமாக, இந்தியாவில் 1947-இல், ஒரு நபருக்குக் கிடைத்த நீரில், இப்போது சராசரியாக 20 சதவிகித அளவு நீர்தான் கிடைக்கிறது. 2025ஆம் ஆண்டுவாக்கில், மேலும் குறைவாக ஒரு நபருக்கு ஏழு சதவிகித நீர்தான் கிடைக்கும் என்று கூறுகின்றனர். இதனால் நீர் மேலாண்மை குறித்த ஆராய்ச்சிகள் பல முனைகளிலும் நடக்கிறது. குறிப்பிடத்தக்க வகையில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகள், இந்தப் பூமியில் நாம் வாழும் விதத்தையே மாற்றிவிடக்கூடும் என்று விஞ்ஞானிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

நீருக்கு ஞாபகசக்தி இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். நீர் தன்னுடன் தொடர்பு கொள்வது எதுவாக இருந்தாலும் அதை நினைவில் வைத்துக்கொள்கிறது. இன்றைய நீர் விநியோக அமைப்பில், மிகுந்த ஆற்றல் வாய்ந்த இயந்திரங்கள் மூலம் நீரை குழாய்களில் ஏற்றுகிறோம். ஏற்றப்படும் நீர் ஐம்பது வளைவு, நெளிவுகளுக்குப் பின்னரே உங்களது வீட்டுக் குழாயை அடைகிறது. இதனால், அறுபது சதவிகித நீர், உங்கள் வீட்டை அடைவதற்குள் விஷத்தன்மை அடைகிறது. ரசாயன மாற்றங்களால் அல்ல, நீரின் மூலக்கூறின் கட்டமைப்பு மாறிவிடுவதே இதற்கான காரணம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

வழக்கமாக நீரிலுள்ள நுண்கிருமிகளின் அளவு அதிகரித்தால், அது மாசுபட்டிருப்பதை நீங்கள் அறியமுடியும். அதற்கு மாறாக, நீர் குழாய்களில் பயணிக்கும் வேகத்தின் காரணத்தினால், அதன் மூலக்கூறு மாறிவிடுகிறது. இதனால், அது பயன்படுத்துவதற்கு ஏற்றதாக இல்லாமல் போவதுடன், விஷத்தன்மை உடையதாகிறது. இந்த மாசுபட்ட நீரை ஒரு தாமிரப் பாத்திரத்தில் சேமித்து, பத்து அல்லது பன்னிரண்டு மணி நேரம் வைத்திருந்தால், நீருக்கு ஏற்பட்ட பாதிப்பு தானாகவே நீங்கிவிடும். இந்த நீரை குழாயிலிருந்து நேரடியாகப் பருகினால், ஒரு குறிப்பிட்ட அளவு விஷம் உங்களுக்குள் செல்கிறது. மக்கள் இதுபோன்ற அறியாமையில் வாழ்ந்துவிட்டு, பிறகு 'எனக்கு ஏன் புற்றுநோய் ஏற்பட்டது? எனக்கு எப்படி இது நடந்தது?' என்று திகைத்து நிற்கின்றனர். வாழ்க்கை குறித்த எந்த அறிதலும் இல்லாமல், உங்களை உருவாக்கும் மூலப்பொருட்கள் குறித்த எந்தக் கவனமும் செலுத்தாமல் வாழ்கிறீர்கள், ஆனால் எல்லாம் சுமுகமாக நடக்கவேண்டும் என்றும் எதிர்பார்க்கிறீர்கள். எப்படி சாத்தியமாகும்?

நீரின் ரசாயனக் கலவையை மாற்றாமல், அதன் நுண்ணணுக் கட்டமைப்பை, மறுகட்டமைப்பு செய்வதன் மூலம் நீரை முற்றிலும் வேறுவிதமான தன்மையில் செயல்படச் செய்ய முடியும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, நான் ஒரு குவளை நீரை என் கைகளில் எடுத்து, அதை ஒரு குறிப்பிட்ட விதமாகப் பார்த்து, பிறகு உங்களுக்குக் கொடுத்தால், அதனால் நீங்கள் நலம் அடைவீர்கள். அதையே நான் வேறு விதமாகப் பார்த்து உங்களுக்குக் கொடுத்தால், நீங்கள் ஒரே இரவில் உடல்நலம் குன்றிவிடுவீர்கள். ‘நீங்கள் அறிமுகமற்றவர்களது கைகளிலிருந்து நீரை வாங்கிப் பருகுவதும், உணவு வாங்கிச் சாப்பிடுவதும் கூடாது. உங்கள் மீது அன்பும், அக்கறையும் கொண்டவர்களிடமிருந்தே எப்போதும் இவற்றைப் பெற்றுக் கொள்ளவேண்டும்,’ என்று உங்களுடைய பாட்டி கூறியிருப்பார்கள். உணவுப் பொருட்களை எல்லா இடங்களிலிருந்தும் பெறுவது கூடாது. ‘உங்கள் பாட்டி இப்படிக் கூறியபோது, அது உங்களுக்கு மூடநம்பிக்கையாகத் தோன்றியது. இதே விஷயத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் கூறினால், அது உங்களுக்குப் பெரிய விஷயமாக இருக்கும். இது ஒரு விதமான அடிமைத்தனம்.

நீருக்கு ஞாபகசக்தி இருக்கிறது என்பதை நம் கலாச்சாரத்தில் நாம் அறிந்து வைத்திருக்கிறோம். இதன் அடிப்படையில்தான் நீரை, தீர்த்தம் என்று அழைக்கிறோம். கோவிலில் வழங்கப்படும் ஒரு சொட்டு தீர்த்தத்திற்கு அனைவரும் போட்டியிடுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள் அல்லவா? தெய்வீக சக்தியின் பதிவுகளைக் கொண்டுள்ள அந்த நீர் உங்களுக்கு உன்னதமான விஷயமாக இருப்பதால், கோடீஸ்வரராகவே இருந்தாலும், அந்த ஒரு சொட்டு நீர் கிடைக்க நீங்கள் பிரயத்தனப்படுவீர்கள்.

தமிழ்நாட்டில், பாரம்பரிய பழக்கங்கள் உயிர்ப்புடன் உள்ள வீட்டிற்குச் சென்றால், தண்ணீரை பித்தளை அல்லது செம்புப் பாத்திரத்தில் குறிப்பிட்டவிதமாக வைத்திருப்பதைக் காணமுடியும்.

ஒரு காலத்தில் பாரத தேசம் முழுவதும் இது வழக்கத்தில் இருந்தது. ஆனால் நாட்டின் பிற பகுதிகளில் இந்த வழக்கம் பெருமளவு மறைந்தேவிட்டது. அதிகாலையில், அந்தப் பாத்திரத்தை புளியினால் தேய்த்து பளபளப்பாக்கி, அதன் மீது விபூதி, குங்குமம் இட்டு பூஜை செய்வார்கள். இதன்மூலம் அந்தத் தண்ணீருக்கு ஒருவிதமான சக்தி ஊட்டுகிறார்கள். அதன் பிறகே அதில் நீர் நிரப்பப்படுகிறது. அதிலுள்ள நீர் இந்த செயல்முறைகளின் பதிவை தன்னுடன் தக்க வைத்துக் கொள்வதால், சக்தியூட்டப்பட்ட நீரினை மட்டுமே பருகுகினர்.

ஒரு குவளை நீரை, உங்களது ஒரு எண்ணமோ அல்லது பார்வையோ இனிப்பாக மாற்றக்கூடுமென்றால், சரியான மனோபாவம், முனைப்பு மற்றும் கவனம் செலுத்துவதன் மூலம், இந்த உடல் என்ற பாத்திரத்தில் உள்ள நீரை உங்களால் இனிப்பாக மாற்ற முடியாதா என்ன? அந்த நீரை நீங்கள் இனிப்பாக மாற்றிவிட்டால், நீங்கள் 72% இனிமையானவராகிறீர்கள்.

நன்றி : சத்குரு ஜக்கிவாசுதேவ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com