உங்கள் உயிர் பத்திரமாக இருக்க வேண்டுமா? இதைப் படியுங்கள்!

ஐந்து வயது சிறுமி செய்யக் கூடிய வேலைகளைக் கூட முப்பது வயது சுனிதாவால்
உங்கள் உயிர் பத்திரமாக இருக்க வேண்டுமா? இதைப் படியுங்கள்!

ஐந்து வயது சிறுமி செய்யக் கூடிய வேலைகளைக் கூட முப்பது வயது சுனிதாவால் இப்போதெல்லாம் செய்ய முடிவதில்லை. வீட்டு வேலைகளைப் பார்த்தாலே ஒரேடியாக மலைப்பு ஏற்படுகிறது. அதிக வேலை இருக்கிறது ஆனால் அதை செய்து முடிக்க முடியாமல் போகும் பலவீனமும் சேர்ந்து அவரை ஒருவித மனஅழுத்தத்தை சுனிதாவுக்கு ஏற்படுத்துகிறது.

சிறுநீரக பாதிப்பால் அவதியுறும் சுனிதாவின் வலது கழுத்து நரம்பினூடே ஒரு கதீடரைச் செலுத்தி டயாலிஸ் செய்யப்பட்டுத்தான் தினமும் அவரது ரத்தம் சுத்தீகரிக்கப்படுகிறது. வாழ்நாள் முழுவதும் சுனிதாவால் 100 கிராம் எடையைக் கூட தூக்க முடியாது என்பது தான் சுனிதாவின் இன்றைய நிலை. தில்லியில் வாழும் சுனிதா மருத்துவமனைக்குச் சென்று வாரம் மூன்று முறை இந்த டயாலிஸ் செய்து கொண்டால் மட்டுமே உயிரைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். சிறுநீரக பாதிப்புக்களைத் தவிர சுனிதாவுக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்னைகளும் உண்டு. இதற்கெல்லாம் காரணம் என்ன? அந்த மூன்று எழுத்து அவள் வாழ்க்கையில் இப்படியா வாழ்வுக்கும் மரணத்துக்குமிடையே போராட வைக்க வேண்டும்? அந்த மூன்று எழுத்து மனித உயிருக்கு ஆதாரமான ‘உப்பு’ என்பது அதிர்ச்சியளிக்கிறது அல்லவா? உண்மைதான், நம் உடம்பில் உப்பின் அளவு அதிகமானாலும் ஆபத்துதான், குறைந்தாலும் பிரச்னைதான்.

சிறுநீரகம் செயல் இழக்கும் முன் சுனிதா இப்படி இருந்ததில்லை. மிகவும் ஆரோக்கியமானவராகவே இருந்திருக்கிறார். ஆனால் அதிகப்படியான உப்புச் சுவை அவரை ஈர்த்ததால் நான்கு வருடங்களுக்கு முன்னால் 26 வயதே நிரம்பியிருந்த சமயத்தில் தான் சுனிதாவுக்கு இரண்டு சிறுநீரகமும் செயல் இழந்துவிட்டது.

இந்திரப்ரஸ்தா அப்போலோ மருத்துவமனையின் சிறுநீரக நோய் பிரிவின் சீனியர் மருத்துவரான டாக்டர் சஞ்சீவ் ஜசூஜா சுனிதாவின் மருத்துவராவார். அவர் சுனிதாவைப் பற்றிக் கூறுகையில், ‘சுனிதா மருத்துவர்களின் எச்சரிக்கையை கவனத்தில் வைத்து, அதிகப்படியான உப்பை உணவில் தவிர்த்திருந்தால், இந்த நிலை அவருக்கு நிச்சயம் ஏற்பட்டிருக்காது, மற்றவர்களைப் போல அவரும் சாதாரண வாழ்க்கையை வாழ்ந்திருக்கலாம்’ என்றார்.

சுனிதா மட்டுமல்ல. அவரைப் போல எண்ணற்றவர்கள் இதே பிரச்னையை சமீப காலமாக எதிர்கொள்கின்றனர். ஜார்ஜ் இன்ஸ்டிட்யூட் ஃபார் க்ளோபல் ஹெல்த் (Institute for Global Health) எனும் நிறுவனம் உப்பு குறித்த ஒரு ஆராய்ச்சியினை மேற்கொண்டு கவலைத்தரத்தக்க பல உண்மைகளை வெளியிட்டுள்ளது. நாம் அன்றாட உணவில் பயன்படுத்தும் இந்த உப்பு தான் பலரின் உயிரை உறிஞ்சி குடித்துள்ளது என்பது துயர்மிக்க செய்தி.

சோடியம் க்ளோரைடு என்ற ரசாயனப் பொருளைத்தான் நாம் தினமும் உணவில் பயன்படுத்தும் உப்பு என்கிறோம். உடலில் உள்ள நீரின் அளவு, ரத்தத்தின் அளவு இரண்டும் குறையாமல் இருக்கவும், இதயத்தின் செயல்பாடு சீரான முறையில் இயங்கவும், நரம்புகளின் மூலமாக செய்திகளை உடலின் ஒரு பகுதியிலிருந்து மற்ற பகுதிக்கு அனுப்பவும், உப்பிலுள்ள ரசாயனப் பொருட்கள்தான் பெரும் உதவி செய்கின்றன.

உலக சுகாதார நிறுவனம் (WHO) நாளொன்றுக்கு ஒரு மனிதனுக்கு சராசரியாக 5 கிராம் உப்பு போதுமானது’ என்று பரிந்துரைத்துள்ளது. ஆனால் இந்தியர்களைப் பொருத்தவரை தினமும் 10.98 கிராம் வரையில் உப்பை உணவில் பயன்படுத்துகின்றனர். இது பரிந்துரைக்கப்பட்ட அளவை விட 119 சதவிகிதம் அதிகம். 2,27,214 இந்தியர்களில் 19 வயதுள்ளவர்களும் அதற்கு மேற்பட்ட வயதினரிடம் இந்த ஆய்வினை மேற்கொண்டனர்.

உயர் ரத்த அழுத்த நோய், இதய நோய்கள், சிறுநீரக கோளாறுகள், மூளைச் செயலிழப்பு, தைராய்டு போன்ற பல பிரச்னைகளுக்கான முதல் காரணம், உணவில் அன்றாடம் சேர்த்துக் கொள்ளும் அதிகப்படியான உப்பு என்று ஆணித்தரமாக நம்புகிறது உலக சுகாதார நிறுவனம்.

அதிகப்படியாக ரத்தத்தில் சேரும் உப்பு எப்படி வெளியேற முடியும்?  வியர்வை, சிறுநீர் மற்றும் மலம் மூலம் தான் உடலிலிருந்து அது வெளியேறுகிறது.  ஒரு லிட்டர் சிறுநீரில் இரண்டு கிராம் உப்பு வெளியேற்றப்படுகிறது. இதனால் உடலில் நீர்த்தன்மை குறைந்து விடும். இதனால் உடலின் தட்ப வெப்ப நிலை மாறுபடும். பல உடலியக்க பிரச்னைகளின் மூலக் கூறு இதுதான்.

நீரின்றி அமையாது உலகம் என்பது போலத்தான் மனித உடலும் நீரின்றி அமையாது. அதுவும் அது உடலுக்குத் தேவையான அளவு மிகச் சரியாக இருக்கவேண்டும். உடல் 70 சதவிகிதம் நீரால் ஆனது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. இதில் ரத்தமும் திரவம் எனும் போது தண்ணீரின் அளவு ரத்தத்தில் சரியான விகிதத்தில் இருக்க வேண்டும். இந்த அளவு மாறுபட்டால் ரத்த ஓட்டத்தின் வேகமும் அதிகரித்து விடும். இதயத்திலிருந்து ரத்தக் குழாய்கள் வழியாக உடல் உறுப்புகளுக்கு ரத்தம் அனுப்பப்படும். இந்த ரத்த ஓட்டம் இதயத்துக்கு வரும்போது ஒரு குறிப்பிட்ட வேகத்திலும், இதயத்திலிருந்து வெளியேறும் போது வேறு ஒரு வேகத்திலும் செல்லும். இப்படிச் செல்லக்கூடிய இந்த வேகத்தை தான் ரத்த அழுத்தம் என்கிறார்கள்.

பொதுவாக, ரத்த அழுத்தத்தை 120/80 mm Hg என்ற அளவில் குறிப்பிடும்போது, இதில், 120 என்பது சிஸ்டாலிக் அழுத்தத்தை (Systolic Pressure) குறிக்கும். இது, இதயம் சுருங்கி ரத்தத்தை வெளியில் தள்ளும்போது ஏற்படுகிற அழுத்தம். 80 என்பது டயஸ்டாலிக் அழுத்தத்தை (Diastolic pressure) குறிக்கும். இது, இதயம் தன்னிடம் இருந்த ரத்தத்தை வெளியேற்றிய பிறகு, தன் அளவில் விரிந்து உள்ளே வருகின்ற ரத்தத்தைப் பெற்றுக் கொள்ளும்போது ஏற்படுகிற அழுத்தம் தான் இயல்பான அழுத்தம்

ரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்தி நிர்வகிப்பதில் சிறுநீரகங்கள், அட்ரினல் சுரப்பிகள், மூளை மற்றும் நரம்பு மண்டலம் போன்றவை மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்தத் தொடர் சங்கிலி அமைப்பில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் இரத்த அழுத்தம் அதிகரித்துவிடும். இது சிலருக்கு தற்காலிகமாகவும், பலருக்கு நிரந்தரமாகவும் அதிகரிக்கக்கூடும். ஒரு நபருக்கு 100/70 mm Hg முதல் 140/90 mm Hg வரை உள்ள ரத்த அழுத்தத்தை ‘நார்மல்’ என்று உலக சுகாதார நிறுவனம் வரையறை செய்துள்ளது. 140/90 mm Hg க்கு மேல் அதிகரித்தால் அது உயர் ரத்த அழுத்தம்.

இந்தியன் கவுன்சில் ஆஃப் மெடிக்கல் ரிசர்ச்சில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் சராசரியாக 25 – 30 சதவிகித நபர்கள் உயர் ரத்த அழுத்தத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது ஆய்வு.  இந்த உயர் ரத்த அழுத்தப் பிரச்னையால் இதயக் குழாய் பாதிப்புக்கள் பலருக்கு ஏற்படுகிறது. 2010 – 2013 ஆண்டுகளில் 23 சதவிகித இறப்பு விகிதம் இத்தகைய பிரச்னையால் ஏற்பட்டுள்ளது. தில்லியிலுள்ள சர் கங்கா ராம் மருத்துவமனை இதய நோய் சிகிச்சைப் பிரிவின் தலைவரான டாக்டர் ஜெ.பி.சாய்னி கூறுகையில், ‘உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகையில், கொழுப்பானது இதயத்தின் ரத்த குழாய்களில் படிந்து விடுகின்றது. அதனால் ரத்தக் குழாய்கள் தடித்து ரத்தம் செல்லும் பாதை குறுகலாகின்றது. மேலும் ரத்த வரத்து இதயத்தினுள் சரிவர புகாமல் போவதால் ரத்த உறைவு (blood clot), அடைப்பு (block) போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. இதன் நீட்சியாக இதயம் செயலிழக்கிறது.

இதயம் தொடர்பான நோய்கள் இந்தியாவில் அச்சமூட்டும் அளவுக்கு பெருகி வருகிறது. அதுவும் இளைஞர்கள்தான் பெரும்பாலும் அதிகளவில் பாதிக்கப்படைகின்றனர். 100 இதய நோயாளிகளில் 5 நபர்கள் 15 லிருந்து 30 வயதுக்கு உட்பட்டவர்கள் என்கிறார் டாக்டர் சாய்னி. இதற்கு முக்கிய காரணம் அவர்களின் உணவுத் தேர்வுதான். இதய நோய்களுக்கு முக்கிய காரணம், உணவில் அன்றாடம் சேர்த்துக் கொள்ளும் சோடியம் குளோரைடு உப்பு தான். அதிகளவு உப்பு நிறைந்த உணவுப் பொருட்கள், நொறுக்குத் தீனிகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகள், துரித உணவுகள், கொழுப்பு உணவுகளை மற்றும் குளிர் பானங்கள்தான் இதயத்தின் எதிரிகள். இந்திரப்ரஸ்தா அப்போலோ மருத்துவமனையின் சீனியர் கார்டியாலஜிஸ்ட் டாக்டர் முகேஷ் கோயல் கூறுகையில், ரத்த அழுத்தத்தைக் குறைத்துவிட்டால் இதய நோய்களை 30 சதவிகிதம் வரை குறைத்துவிடலாம் என்கிறார். பத்து இருபது வருடங்களுக்கு முன்னால் 20 வயதுள்ள நோயாளி யாரேனும் வியர்வை, பதற்றத்துடன் கூடிய இதய வலியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது அவர்களுக்கு இதயச் செயலிழப்பு ஏற்படும் என்று உடனே நினைத்திருக்க வேண்டியதில்லை. காரணம் அது போன்ற பிரச்னைகள் அந்த காலகட்டத்தில் 50 முதல் 70 வயதினரையே தாக்கிக் கொண்டிருந்தது. ஆனால் தற்போதைய நிலை வேறு. 35 லிருந்து 50 வயது இளைஞர்களில் தொடங்கி தற்போது பதினெட்டு வயது நபர்கள் கூட இதயத்தில் வலி அல்லது ஏதேனும் பிரச்னை என்று மருத்துவரை நாடும் போது அவருக்கு இதய நோய் இருப்பதாகவே கருதி, அதற்குரிய சோதனைகளை மேற்கொள்ளத் தொடங்குகிறோம்.

இதய நோய் சிறப்பு சிகிச்சை மருத்துவரான டாக்டர் பிரபீர் அகர்வால் இக் கருத்தினை ஆமோதிக்கிறார். அதிகப்படியான இளம் வயதினருக்கு இதய நோய்கள் ஏற்படுவது வருத்தத்துக்குரிய விஷயம். படித்த மக்களிடையே இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது மிகவும் முக்கியம் என்று குறிப்பிட்டுள்ளார் பப்ளிக் ஹெல்த் பவுண்டேஷன் ஆஃப் இந்தியாவை சேர்ந்த டாக்டர் பிரபாகரன். தினமும் ஒரு கிராம் அளவேனும் உணவில் உப்பைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்று வலியுறுத்துகிறார். இதனால் ஒருவருக்கு இதயம் தொடர்பான பிரச்னைகள் 4.8 சதவிகிதம் வரையில் குறைய வாய்ப்புள்ளது என்கிறார்.

சிறுநீரக செயல் இழப்புக்கும், மூளையில் ஏற்படும் ஸ்ட்ரோக் போன்ற பிரச்னைகளுக்கு காரணம் உயர் ரத்த அழுத்தம் என்கின்றனர் சிறுநீரகம் மற்றும் நரம்பியல் துறை நிபுணர்கள். கரோனரி ஆர்டரி நோய்களினாலும் மூளையில் ஸ்ட்ரோக் ஏற்படுவதாலும் 13 சதவிகிதத்தினர் இறக்கிறார்கள் என்பது உண்மை. ஸ்ட்ரோக் ஏற்பட காரணம் மூளைக்குச் செல்ல வேண்டிய ஆக்ஸிஜன் கிடைக்கப் பெறாமல் அதன் செல்கள் பாதிக்கப்பட்டு இறுதியில் மூளை செயல் இழந்து இறக்க நேர்கிறது.

ரத்தத்தில் உள்ள கழிவுப் பொருட்களையும், நச்சுப்  பொருட்களையும் வெளியேற்றும் வேலையை சிறுநீரகம் செய்கிறது. சிறுநீரகத்தில் உள்ள பல லட்சக் கணக்கான சிறுநீர் வடிகட்டிகள் (நெப்ரான்கள்) இதயம் தொடர்ந்து துடித்துக் கொண்டே இருப்பது போலவே சிறுநீரகங்களும் தொடர்ந்து தன் வடிகட்டும் பணியை இடைவிடாது செய்து கொண்டே இருக்கின்றன. ஒவ்வொன்றாக பழுது அடைந்து கொண்டே வரும். சிறுநீரகத்தில் 10 மில்லியன் நெஃப்ரான்கள் உள்ளன. ஆயினும் இந்த இழப்புகள் குறித்து சிறுநீரகங்கள் சோர்வடையாமல் தொடர்ந்து தன் பணியை செய்து கொண்டே இருக்கின்றன. ஒரு சிறுநீரகம் முழுவதும் செயல் இழந்துவிட்டாலும் கூட மற்றது தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருக்கும். இதனால் தான் நோயாகிகளுக்கு 90 சதவிகிதம் பாதிப்பு ஏற்பட்ட பின்பே சிறுநீர் வெளியேற்றத்தின் அளவு குறைந்து பிற அறிகுறிகளும் வெளியே தெரிய ஆரம்பிக்கின்றன.

உடலில் உள்ள கழிவுப் பொருட்களையும் அதிகப்படியான நீர்ச்சத்தையும் வெளியேற்றுவதே சிறுநீரகத்தின் முக்கிய பணியாகும். ஆனால் அவற்றின் பணி இதனுடன் முடிந்து விடுவதில்லை. உடலின் கார அமில சம நிலை பராமரிப்பு, ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருப்பது, ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்ய உதவுவது, எலும்புகளின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வது, உடலில் எந்த அளவுக்கு நீர்ச்சத்து இருக்கலாம் எனத் தீர்மானிப்பது போன்ற பல முக்கியமான செயல்களையும் சிறு நீரகங்கள் செய்கின்றன. நிரந்தர சிறுநீரகச் செயல் இழப்புக்கு நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் இவையே முக்கிய காரணங்களாக உள்ளன, நீரிழிவு நோய் வந்தவருக்கு இன்சுலின், தேவையை விடக் குறைவாகச் சுரக்கிறது. இதனால் ரத்தத்தில் குளூக்கோசின் அளவு கூடுதலாகிறது. இதை வெளியேற்ற சிறுநீரகங்கள் அதிக வேலை செய்ய வேண்டியுள்ளன. இப்படி அளவுக்கு மேல் வேலை செய்வதால் சிறுநீரகங்கள் செயல் இழக்கின்றன. இதன் அறிகுறி சிறுநீரில் புரதச்சத்து அதிக அளவில் வெளியேறுவதாகும் என்கிறார்கள் மருத்துவர்கள். ஒரு ஸ்பூன் உப்பை உணவில் குறைத்துக் கொண்டால் எத்தகைய பேராபத்திலிருந்து தற்காத்துக் கொள்ளலாம் என்று இதிலிருந்து புரிந்து கொள்ளலாம் அல்லவா?

உயர் ரத்த அழுத்தம் காரணமாக இரண்டு விதமான ஸ்ட்ரோக்குகள் ஏற்படுகின்றன. ஒன்று ஐசெமிக் ஸ்ட்ரோக்ஸ் ischemic strokes மற்றது ஹெமராகிக் ஸ்ட்ரோக்ஸ் haemorrhagic strokes. இவை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் உயர் ரத்த அழுத்தமே என்கிறார் எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த மூத்த சிறுநீரக மருத்துவர்.

அதிகப்படியான உப்பு சிறுநீரகம் மற்றும் இதயத்தை பாதிப்பதுடன் வயிற்றில் புற்றுநோயையும் ஏற்படுத்தும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். 7000 புது புற்றுநோயாளிகளை ஆய்வுக்கு உட்படுத்திய போது அவர்களில் பெரும்பான்மையானவர்களுக்கு அதிகப்படியான உப்பை சேர்மானத்தால் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது என்று கண்டறிந்துள்ளனர். ஹெலிகோபாக்டர் பைலோரி (Helicobacter pylori) எனும் பாக்டீரியா வயிற்றுப்  பகுதிகளில் காணப்படும். ஆனால் இது பொதுவாக எவ்வித பிரச்சனையும் தானாக ஏற்படுத்துவதில்லை. ஆனால் அதிகப்படியான உப்புடன் சேரும் போது இந்த பாக்டீரியாவின் செயல்பாடு மாறுபட்டு வயிற்றில் பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது என்கிறது இந்த ஆய்வு.

அதிகபப்டியான உப்பினால் ஏற்படும் மற்றொரு நோய் ஆஸ்டியோபொராஸிஸ் (Osteoporosis). எலும்பின் அடர்த்தி குறைய ஆரம்பிக்கும். இதனால் அடிக்கடி எலும்புமுறிவு உண்டாகும். உயர் ரத்த பிரச்னை இதன் ஆரம்பம் என்றால் அதற்கு ஆணிவேரான அதிகப்படியான உப்பு உட்கொள்வது தான் என்கிறார் தில்லியிலுள்ள ராக்லேண்ட் மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் டாக்டர் ஆஷா ஷர்மா. மேலும் அவர் கூறுகையில் இந்த பிரச்னை வயதாவதாலும், மாதவிடாய் நின்ற பெண்களுக்கும் வருகிறது. வலியால் உடல் இயக்கங்களை குறைத்துக்

கொள்ளும்போது மேலும் தொந்தரவு அதிகமாகிறது. பெண்களுக்கு ஏற்படும் ஈஸ்ட்ரோஜன் குறைபாடுகளை தற்போது 35-45 வயதுகளிலேயே காண முடிகிறது. முன்பு இது 50-55 வயதில் தான் இருந்து வந்தது என்றார் டாக்டர் ஷர்மா.   

உப்பின் நுண்சத்தான அயோடின் உணவில் அதிகமாகிவிட்டால் ஹைபர் தைராயிடு ஏற்படும். கடந்த பத்து வருடங்களில் 20 லிருந்து 30 சதவிகிதத்தினர் இந்தப் பிரச்னையில் பாதிப்படைந்துள்ளனர் என்று பதிவு செய்கிறார் அப்பல்லோ மருத்துவமனை எண்டோக்ரைனாலஜிஸ்ட் டாக்டர் எஸ்.கே.வங்கானு.

உப்பு உணவில் அதிகமாகும் போது அது பலவிதமான நோய்களையும் அதற்கான காரணங்களையும் ஏற்படுத்திவிடுகின்றன. ஸ்ட்ரோக், டிமென்ஷியா, மூளைச் செயல்பாட்டுக் குறைகள், ஆஸ்துமா, நீரிழிவு, உடல்பருமன் உள்ளிட்ட பல நோய்களும் இதனால் ஏற்படுகிறது. உடலின் மெட்டபாலிஸம் குறைந்து மேலும் பல பிரச்னைகளுக்கும் வழி வகுக்குகிறது என்கிறது மருத்துவ ஆய்வுகள்.

அதிகளவிலான உப்பு உடலில் பலவிதமான அசெளரியங்களை விளைவிக்கிறது. உடல் உப்பிசமடைந்து அதிகப்படியான தாகம் ஏற்படுகிறது. ஒருவர் அதிகமாக தண்ணீர் குடிக்கிறார் எனும் போதே அவர்கள் அளவுக்கதிகமாக உப்பை உணவின் மூலம் உட்கொள்கிறார் எனத் தெரிந்து கொள்ளலாம். அதிகளவு உப்பை உட்கொள்வதின் மற்றொரு பக்க விளைவு உடல் பருமன். உடலின் மெட்டாபாலிஸம் குறைந்து சத்துக்கள் குறைபாடு ஏற்படும். சக்தியாக மாற வேண்டிய கொழுப்பானது உடலில் தேங்கிவிடுவதால் உடல் ஒருகட்டத்தில் பருமனாகிப் போகிறது. ஏற்கனவெ அதிகப்படியான உப்பு தாகத்தை ஏற்படுவத்துவதால் இனிப்பு பானங்களை குடிக்கத் தொடங்குவார்கள். இதனால் உடல் எடை மேலும் அதிகரிக்கும் என்கிறார் சோனியா ரவாட். இவர் சர் கங்காராம் மருத்துவமனையின் இயக்குநர் மற்றும் ஆலோசகர் ஆவார்.

நாம் சாப்பிடும் உணவில்தான் பல ஆபத்துக்கள் மறைந்துள்ளன. நாம் உண்ணும் உணவில் கிட்டத்தட்ட 70 சதவிகிதம் சோடியம் பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகள், துரித உணவுகள், கொழுப்பு உணவுகளில் மறைந்துள்ளது. ரொட்டி, வெண்ணெய், கஞ்சி இது போன்ற உணவுகளில் உப்பு அதிகம் இல்லை என்று நாம் தவறாக எண்ணுவோம். உண்மையில் அவற்றில் அதிகளவு உப்பு நிறைந்துள்ளது என்கிறார் முக்தா வசிஷ்ட். இவர் சர் கங்காராம் மருத்துவமனையின் மூத்த உணவுச் சத்து நிபுணர் ஆவார். உப்பின் அளவைக் குறைக்க தினமும் சிறிதளவு முயற்சியையேனும் நாம் எடுத்தாக வேண்டும் என்றார் இவர்.

அயோடின் அதிகளவு உள்ள தூள் உப்பினை உணவில் மேலதிகமாகச் சேர்ப்பதால் இதயநோய்கள், ரத்த அழுத்தம், பக்கவாதம் போன்ற நோய்கள் எளிதில் வர வாய்ப்புகள் உள்ளன என்கின்றன ஆய்வுகள். அதிகப்படியான உப்பை குறைக்க ஒரு எளிய வழி தூள் உப்பை பயன்படுத்தாமல் இருப்பதுதான். பழங்கள், காய்கறிகளில் தயாரிக்கப்படும் சாலட் போன்ற உணவுகளில் உப்பைச் சேர்க்காமல், அவற்றை அப்படியே சாப்பிட வேண்டும். வீடுகளில் சமைக்கப்படும் உணவுகளில் கூட அளவாக உப்பை பயன்படுத்த வேண்டும். நகரத்தில் இப்படியென்றால் கிராமப்புறங்களில் உணவில் அன்றாடம் சேர்த்துக் கொள்ளும் சோடியம் குளோரைடு உப்பை ஊறுகாய், அப்பளம், கருவாடு, உப்புக்கண்டம், போன்ற உணவுப் பொருட்களை அதிகப்படியாக பயன்படுத்துகிறார்கள். இவற்றை குறைவாக உட்கொள்ள வலியுறுத்தவேண்டும்.

துரதிர்ஷடவசமாக அரசாங்கம் பாக்கெட் உணவுகள், துரித உணவுகள் ஆகியவற்றில் இந்த உப்பின் தரம் மற்றும் அளவுகோல்களை துல்லியமாக நிர்ணயிக்கவில்லை. ஒவ்வொரு உணவுத் தயாரிப்பாளரும் வெவ்வேறு அளவுகோலைப் பயன்படுத்துகின்றனர். அரசாங்கம் ஒரு ஒழுங்கினைப் பின்பற்றச் சொல்லி இதனை இன்னும் நெறிப்படுத்தியிருக்கவில்லை. இந்த சீர்கேடுகளால் ஏற்படும் உடல் ஆரோக்கிய பாதிப்புகளைத் தெரிந்து கொள்ளாமல் மக்கள் ருசிக்கு அடிமைப்பட்டு இத்தகைய உணவுகளை அடிக்கடி சாப்பிடுகிறார்கள்; நாளாவட்டத்தில் நோயில் வீழ்கிறார்கள். உணவு குறித்த விழிப்புணர்வு நம் மக்களிடையே போதுமான அளவு இல்லை என்பது வருந்தத்தக்க விஷயம். உணவே விஷமாக மாறிவிடுகிறது என்பதை மிகவும் காலதாமதமாக புரிந்து கொள்வதால் என்ன பயன்? வாழ்நிலை சூழல்களில் நல்ல உணவு எது உடலுக்கு கெடுதல் செய்யும் உணவு எது என்று ஒவ்வொருவரும் பகுத்தாய்ந்து தான் செயல்பட வேண்டும்.

தில்லி மற்றும் ஹைதராபாத்தில் GIGH அமைப்பு மேற்கொண்ட ஒரு ஆய்வில் ஒன்பது வகையான 5790 எண்ணிக்கை முக்கியமான பாக்கெட் உணவுகளை எடுத்து சோதனை செய்தனர். இவற்றில் ஒவ்வொன்றிலும் உப்பின் அளவு பெருமளவு வேறுபட்டிருந்தது. சிலவற்றில் பத்து மடங்கு அதிகப்படியாகவும் இருந்தது அதிர்ச்சியளித்தது.

மற்ற உலக நாடுகளில் உப்பின் அளவினை தர நிர்ணயம் செய்ய வலுவான சட்டங்கள் உள்ளன. அந்தந்த உணவுப் பொருளில் பாக்கெட்டில் நிச்சயம் அவை பதிவு செய்யப்பட்டிருக்கும். ஆனால் இந்தியாவைப் பொருத்தவரை இன்னும் அது செயலாக்கம் பெறவில்லை. உணவில் சேர்க்கப்படும் உப்பு அல்லது சர்க்கரையின் அளவு கடவுளுக்குத் தான் வெளிச்சம் எனும்படியான போக்கு தான் நடைமுறையில் காணப்படுகிறது.

2015-ல் மாகி (Maggi) பிரச்னை பூதாகரமாகக் வெடித்த போது தான் இது குறித்த சிறிதளவு விழிப்புணர்வு அனைவருக்கும் ஏற்பட்டது. அந்த நூடுல்ஸில் 1000 மடங்கு அதிகப்படியாக மோனோசோடியம் க்ளூடாமேட் (monosodium glutamate (MSG) பயன்படுத்தப்பட்டிருந்தது. அதன் பிறகுதான் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பு உணவில் சேர்க்கப்படக்கூடிய உப்பு மற்றும் சர்க்கரையின் அளவை சோதனை செய்தது. உப்பு மற்றும் சர்க்கரை விபரப் பட்டியலை கட்டாயமாக பாக்கெட்டில் குறிப்பிட வேண்டும் என்று வலியுறுத்தியது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைமை இயக்குநரும், சுகாதார ஆராய்ச்சித் துறை செயலருமான டாக்டர் செளமியா சுவாமிநாதன் தலைமையில் ஹைதராபாத்தில் உள்ள நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் நியூட்ரிஷன் ஆய்வுக் குழுவொன்று, உப்பு குறித்த விழிப்புணர்வு ஆய்வுகளை தொடங்கியுள்ளனர்.

பாக்கெட் உணவுகளில் சேர்க்கப்படும் உப்பு மற்றும் சர்க்கரை அளவுகளை நிர்ணயிக்கும் சட்டம் இயற்றப்படவேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்போம் என்றார் அவர்.  அதுவரை உப்பு என்பது அதிகளவு மக்களை நோயாளிகளாகவும், மரணத்தின் பிடியில் சிக்க வைக்கும் ஒரு வெள்ளை அரக்கனாக அச்சுறுத்திக் கொண்டிருக்கும் என்றார் கூறினார்.

- அனு ஜெயின் ரோஹட்கி  (தமிழில் உமா ஷக்தி)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com