வீர் சாவர்க்கர் - வீரத் தியாகி!

சுதந்திரம் பெற்றுத் தந்தந்தாக மார்தட்டிக்கொள்ளும் தேசிய தலைவர்களில் யாராவது ஒருவர் இத்தகைய சோதனைகளை கடந்து வந்திருப்பாரா?
வீர் சாவர்க்கர் - வீரத் தியாகி!

மே 28, 2017, வீர சாவர்க்கரின் 134-வது பிறந்த தினம். யார் இந்த சாவர்க்கர்? என்ற கேள்விக்கு, தமிழகத்தின் பெரும்பாலானவர்களுக்கு பதில் தெரிவதில்லை. இந்திய சுதந்திரத்துக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு வீரத் தியாகியை நமக்குத் தெரியவில்லை என்பது மன்னிக்க முடியாத தவறு. இதற்கு சரித்திரத்தை தன் போக்குக்கு  இழுத்துச் சென்ற காங்கிரஸே காரணம். சுதந்திரம் என்ற வார்த்தையை சொன்னவுடன் தாத்தா காந்தி, மாமா நேரு போன்ற தலைவர்களை மட்டும் தேசியமயமாக்கிவிட்டு, மற்றவர்களை அந்தந்த மாநிலங்களுக்குச் சொந்தமாக்கிய காங்கிரஸின் பாடத் திட்டமே இதற்குக் காரணம். அடுத்தவரை குறை சொல்லி பிரயோஜனமில்லை. வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லாத நமக்கும் அதில் பங்கு உண்டு.

எந்த ஒரு வேலையைச் செய்தாலும் அதற்கான பலன் நமக்குக் கிடைக்க வேண்டும். இதுதான் நம் ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பாக இருக்கும். அப்படி பலனை பெறுவதிலும் இரண்டு வகை உண்டு. சிலர் எந்த ஒரு சிறிய வேலையைச் செய்தாலும் அதற்கு மிகப் பெரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அவர்கள் எதிர்பார்த்ததுபோல அவருக்குப் புகழும், பெருமையும் வந்து குவியும். இது முதல் வகை. சிலர் மலையையே புரட்டிப்போட்டாலும், அவரை கண்டுகொள்ள யாரும் இருக்கமாட்டார்கள். இது இரண்டாவது வகை. இந்த இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்தான் வினாயக் தாமோதர் சாவர்க்கர். பிரிட்டிஷ் அரசின் கண்களில் விரலைவிட்டு ஆட்டியவர். சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தவர். பிறவிப் போராளி. பயம் என்ற வார்த்தையை அறியாதவர்.

பிரிட்டிஷ் அரசு அவருக்கு 31 ஜனவரி, 1911-ம் ஆண்டு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது. அவர் ஐம்பது ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும். பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தில் ஒரு நபருக்கு இரண்டு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது சாவர்க்கருக்கு மட்டுமே. மற்றவர்கள் துவண்டபோது தைரியமாக எதிர்கொண்டார் சாவர்க்கர். அவரின் மன உறுதிக்கு ஒரு சான்றுதான் இந்த நிகழ்வு.

சிறையில் சாவர்க்கரின் கழுத்தில் ஒரு இரும்புத் தகடு மாட்டப்பட்டது. அதில் கைதிகள் விடுதலையாகும் வருடம் எழுதப்பட்டிருக்கும். அதில் ‘1960' என்று எழுதப்பட்டிருந்தது. இன்னும் ஐம்பது ஆண்டுகள் அதைச் சுமக்க வேண்டும். உடன் இருந்தவர்கள் கண்கலங்கி நின்றார்கள்.

அப்போது பிரிட்டிஷ் சிறை அதிகாரி அங்கு வந்தான். சாவர்க்கரைப் பார்த்து கிண்டலாக பேசினான்.

‘சாவர்க்கர், நீங்கள் பயப்படத் தேவையில்லை. காருண்யமிக்க பிரிட்டிஷ் அரசு உங்களை 1960-ல் வெளியே விட்டுவிடுவார்கள். அதாவது ஐம்பது ஆண்டுகள் கழித்து' என்றான் கிண்டலாக.

‘பிரிட்டிஷ் அரசைவிட காருண்யம் மிக்கது சாவு. அது அதற்கு முன்பே என்னை வெளியே விட்டுவிடலாம் அல்லவா?' என்று சொல்லிவிட்டு சிரித்தார் சாவர்க்கர்.

பதில் பேசமுடியாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் அதிகாரி.

குழந்தைப் பருவம் முதல், உயிர் பிரியும் தருவாய் வரை போராடியவர் சாவர்க்கர். தன்னுடைய உழைப்பை பிறர் அபகரித்தபோதும் அதைக் கண்டு வருத்தப்படாதவர். சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்ததில் பெரும்பங்கு சாவர்க்கருக்கு உண்டு. ஆனால், பதவியையும், பெருமையையும் காங்கிரஸ் வளைத்துப் போட்டது.

அந்தமான் செல்லுலார் சிறையில் சாவர்க்கருக்கு அளிக்கப்பட்ட தண்டனை, சிறையின் சரித்திரத்தில் எந்த ஒரு கைதிக்கும் அளிக்கப்பட்டிருக்காது. மனிதாபிமானமற்ற கொடுமைகள் அவை.

  • தொடர்ந்து ஆறு மாதங்கள் இருட்டு அறையில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
  • நான்கு மாதங்கள் யாரும் பார்க்க முடியாதபடி சிறையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டார்.
  • கைகளும், கால்களும் கட்டப்பட்டு தொடர்ந்து ஏழு நாட்கள் நிற்க வைக்கப்பட்டார். இதுபோல் இரண்டு முறை அவருக்கு தண்டனை வழங்கியது. மொத்தம் பதினான்கு நாட்கள்.
  • கிராஸ் பார் என்று சொல்லப்படும் பலகையில், கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் தொடர்ந்து பத்து நாட்கள் நிறுத்தப்பட்டார். இது சிலுவையில் அறையப்பட்டது போன்ற நிலை இது.
  • கை, கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு தொடர்ந்து நான்கு மாதங்கள், கனத்த இரும்பு சங்கிலியுடன் இருந்தார்.

இன்னும் செக்கிழுத்தது, அடிபட்டது, கையிறு திரிப்பது என்று அனுபவித்த தண்டனைகளின் பட்டியல் வளர்ந்துகொண்டே போகும். சுதந்திரம் பெற்றுத் தந்தந்தாக மார்தட்டிக்கொள்ளும் தேசிய தலைவர்களில் யாராவது ஒருவர் இத்தகைய சோதனைகளை கடந்து வந்திருப்பாரா?

உலகத்தில் எந்த ஒரு தனிமனிதனுக்கும் இது போன்ற கஷ்டங்கள் வரக்கூடாது. சாவர்க்கரின் நினைவாக, அந்தமான் விமான நிலையத்திற்கு வீர சாவர்க்கர் சர்வதேச விமான நிலையம் என்று பெயரிட்டது, அவரது தியாகங்களுக்கு கிடைத்த ஒரே அங்கீகாரம்.

சுதந்திரம் கிடைத்த பிறகு காங்கிரஸ், தாங்கள்தான் சுதந்திரத்துக்குக் காரணம் என்று பிரபலப்படுத்திக்கொண்டிருந்தனர். மனம் வெறுத்த சாவர்க்கர், 1961-ல் ஒரு கட்டுரை எழுதினார். அந்தக் கட்டுரையின் சில வரிகளை படிப்போம்.

‘காந்திஜியின் காங்கிரஸ்தான் ஆங்கிலேய ஆட்சியாளர்களிடமிருந்து, கத்தியின்றி, ரத்தமின்றி போராடி சுதந்திரத்தை அடைந்தது என்று குழந்தைகள் படிக்கும் பாடப் புத்தகங்களில் பாடங்களை அரசாங்கம் வடிவமைத்துள்ளது. ஆனால், உண்மையில் நம்முடைய புரட்சியாளர்களின் தூண்டுதலால் பலம் வாய்ந்த நம் சேனை வாளை உருவி, வீரத்துடன் போராடியது. ஆங்கிலேயர்களை வெட்டிக் குவித்தும், மற்றவர்களையும் போராட தூண்டியது. இதனால்தான், ஆங்கிலேயர்கள் பயந்து போய் சுதந்திரம் கொடுக்க, பேச்சுவார்த்தை துவங்கினர். இந்தச் சரித்திரப் புகழ் வாய்ந்த உண்மையை, பிரிட்டிஷ் பிரதம மந்திரியே பார்லிமென்ட்டில் ஒப்புக்கொண்டிருக்கிறார்'.

‘இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பான் ராணுவம் சிங்கப்பூரின் மீது குண்டுகளை போட்டது. இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் ராணுவமும் போரில் குதித்தது. அந்தச் சமயத்தில் தளபதி ராஷ்பிஹாரி போஸின் ஆஜாத் ஹிந்த் படை, ஆங்கிலேயர்களுடன் போரிட்டது. சுதந்திரம் அடைவதற்காக ஐம்பதாயிரம் வீரர்கள் போரிட்டனர். அதில் இருபத்தி ஐந்தாயிரம் பேர் வீரமரணமடைந்தனர். மீதமிருந்தவர்களில் பெரும்பகுதியினர் சுபாஷ் சந்திர போஸின் INA-வில் சேர்ந்துவிட்டார்கள். இந்த நிகழ்வை ஜே.ஜி. ஒஹஸாவா என்பவர் எழுதிய ‘தி டூ க்ரேட் இண்டியன் இன் ஜப்பான்' என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார். இந்தியர்களின் வீரப்போர், ஆங்கிலேயர்களை நடுங்கவைத்ததாக அதில் தெரிவித்துள்ளார்.

பார்லிமெண்டில், பிரிட்டிஷ் அரசு ‘தி இண்டிபெண்டென்ஸ் ஆஃப் இந்தியா ஆட்' சட்டத்தை நிறைவேற்றியது. இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டவுடன் பிரிட்டிஷ் அரசின் சாம்ராஜ்யவாதியான சர் வின்ஸ்டன் சர்ச்சில் வருத்தமடைந்தார். ‘இந்தச் சட்டத்தை நிறைவேற்றுவதைத் தவிர வேறுவழி இல்லையா? இந்தியாவுக்கு  சுதந்திரம் கொடுக்காமல் நம் பிடியிலேயே வைத்துக்கொள்ள முடியாதா?' என்று கேட்டார்.

‘இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுப்பதற்கான காரணம், அங்குள்ள ராணுவம் இப்பொழுது வெறும் ரொட்டிக்காக ஏங்கிக்கொண்டு இல்லை. மேலும், பிரட்டனுக்கு தற்போதய நிலையில், இந்திய ராணுவத்தை அடக்கிவைக்கும் சக்தியும் இல்லை' என்று பதிலளித்தார் பிரதமர் கிளமென்ட் அட்லி.

அட்லியின் கருத்தையே பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர்களும் வெளிப்படுத்தினர். ஆகையால், சுதந்திரம் என்பது புரட்சிக்காரர்களின் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி என்று சாவர்க்கர் தனது கட்டுரையில் தெரிவித்தார். சாவர்க்கரின் கருத்தில் உண்மை இருப்பதை யாரும் மறுக்க முடியாது.

இந்திய தேசிய காங்கிரஸைச் சேர்ந்தவர்கள், சுதந்திரம் கிடைத்தவுடன் பதவிக்கு வந்தனர். ஆனால், சாவர்க்கர் தனக்கு பதவி எதுவும் வேண்டாம் என்று வெளிப்படையாகவே அறிவித்தார்.

‘தேசபக்திக்கு கைம்மாறாக பதவி, பட்டம், கோட்டா, பர்மிட் இவற்றையெல்லாம் பெறக்கூடாது. எனக்கு ஆட்சியில் எந்தப் பதவியும் கொடுக்கவில்லை. அதுமட்டுமல்ல, ஆங்கிலேய அரசு ஆட்சியில் என்னிடமிருந்து பறிக்கப்பட்ட வீட்டைக்கூட திருப்பித் தரவில்லை. அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. எனக்கு எந்தவிதமான பட்டம், பதவியில் விருப்பமில்லை. மூன்று, நான்கு வருடங்களிலேயே சுதந்திரமடைந்த பாரதத்தை பார்த்துவிட்டோம். ஒரு காலத்தில் புரட்சிக் கருத்துகளை வழிபடுதல் பைத்தியக்காரத்தனம் என்று சொன்னர்கள். ஆனால், அந்தச் சயமத்தில் புரட்சிக்காரர்களாகிய நாங்கள் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டோம். எண்ணற்ற இளைஞர்கள் தூக்கில் தொங்கினர். அவர்களுக்கு எந்தப் பொருளின் மீதும் நாட்டமில்லை. அவர்கள்தான் உண்மையான சிறந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள். சுதந்திரம் அடைந்த பிறகு மந்திரி பதவி கிடைக்கும், கோட்டா, பர்மிட் அல்லது நிலம் கிடைக்கும் என்கிற எண்ணமெல்லாம் அவர்களுக்கு இல்லை. உயிருடன் இருந்து சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டும் என்கிற விருப்பம்கூட அவர்களுக்கு இல்லை.

செக்கிழுத்து எண்ணெய் எடுக்கும் வேலை எனக்குக் கொடுக்கப்பட்டது. ‘இவ்வளவு கஷ்டப்படுவதினால் எனக்கு என்ன பலன்?' என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன். நான் எண்ணெய் எடுத்துக் கொடுத்தால், இந்த அயல் நாட்டுக்காரர்கள் அதை சாப்பிட்டுவிட்டுப் போவார்கள். அந்த ஒவ்வொரு எண்ணெய்த் துளியிலும், பாரதத்தின் நெருப்பு கொழுந்துவிட்டு எரிகிறது. அந்தமானில் பலர் தூக்கிலேற்றப்பட்டார்கள்; பலர் கொடுமைகளை அனுபவித்தார்கள். ஆனாலும் அவர்கள் தங்கள் பாதையிலிருந்து ஒரு நாளும் பிறழவில்லை. சுதந்திர யுத்தத்தில் தியாகிகளின் தியாகத்தினால்தான் இன்று சிலர் மந்திரிகளாகவும், தலைவர்களாகவும், அரசாட்சியில் அதிகாரம் செலுத்துபவர்களாக உட்கார்ந்து இருக்கிறார்கள். ஆனால், நாங்கள் தெளிவாக இருக்கிறோம். பட்டம், பதவி, மற்றும் சுய நலத்திற்காகவா இவ்வளவு புரட்சிகளையும், தியாகங்களையும் செய்தோம்?

இன்று ராஷ்ட்டிரபதி டாக்டர் ராஜேந்திர பிரஸாத் எவ்வளவு சுகமாக இருக்கிறாரோ, அதைவிட அதிக சுகமாக நான் இருக்கிறேன். என்னை தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் தரிசிக்க வேண்டும் என்று அடம்பிடிக்கிறார்கள். மக்களின் இணையற்ற அளவிடமுடியாத அன்பு, அரசாங்கப் பதவியைவிட உயர்ந்தது' என்றார் சாவர்க்கர்.

இவையெல்லாம், 1961-ம் ஆண்டு சாவர்க்கரின் கட்டுரையில் காணப்பட்ட வரிகள்.

பதினான்கு ஆண்டுகள் அந்தமான் சிறையில் இருந்தார். பிறகு இருபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் பொது வாழ்க்கையில் கலந்துகொள்ளக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில், கிட்டத்தட்ட வீட்டுக்காவலிலும், கண்காணிப்பிலும் நாட்களை நகர்த்தினார்.

அந்தமான் என்ற ஊர் இருக்கும் வரை, அதன் சிறையும், சாவர்க்கரையும் யாரும் மறக்கமாட்டார்கள். ஆனால், இந்தியா சுதந்திரமடைந்த பிறகு, பிரதமர் ஜவர்ஹர்லால் நேரு, அந்தமான் சிறையை இடிக்க வேண்டும் என்றும், அந்த இடத்தில் ஒரு மருத்துவமனை கட்ட வேண்டும் என்றும் பரிந்துறை செய்தார். பிறகு அது கைவிடப்பட்டது. சில மாதங்களில் உள்துறை அமைச்சர் ஒய்.பி. சவாண், அந்தமானுக்கு சென்றார். ஆனால் சாவர்க்கர் தங்கியிருந்த சிறைக்குச் செல்ல மறுத்துவிட்டார். பல வருடங்களுக்குப் பிரதமர் மொரார்ஜி தேசாய் அந்தமான் சென்றார். அவரும் சிறையில் சாவர்க்கர் தங்கியிருந்த அறைக்குச் செல்ல மறுத்துவிட்டார். 2004-ம் ஆண்டு, இவர்களையெல்லம் மிஞ்சிவிடும் அளவில் செயல்பட்டார் பெட்ரோலியத் துறை அமைச்சர் மணிசங்கர் ஐயர். அந்தமானில் சுதந்திர ஜோதி பீடத்தில் அவருடைய பொன்மொழி எழுதப்பட்டிருந்தது. அதை அந்த இடத்திலிருந்து அகற்றினார். காங்கிரஸின் பணி இதோடு நிற்கவில்லை. இந்தியப் பாராளுமன்றத்தில் சாவர்க்கரின் ஓவியத்தை நிறுவக்கூடாது என்று கடைசிவரை போராட்டங்களையும் நடத்தினார்கள்.

இதுபோன்ற விஷயங்களை விவாதிப்பதில் அர்த்தமில்லை. வரலாற்றுச் சம்பவங்களைப் படிப்பது ஒரு உன்னதமான செயல். அதிலுள்ள சாதக, பாதகங்களை படிப்பதும், புரிந்துகொள்வதும் சற்று சிக்கலான விஷயம். நாம் வாழும் இந்த உலகத்தில் வேகமான நகரக்கூடிய பல வாகனங்களை பார்க்கிறோம். அவை எல்லாவற்றையும்விட, அதிவேகமானது மனம் என்ற குதிரை. கிழப்பருவத்தில் இருப்பவனை, சில நொடிகளில் குழந்தைப் பருவ நினைவுகளுக்குக் கொண்டுசெல்லும் ஆற்றல் அதற்கு உண்டு. இது கடவுள் கொடுத்த வரம். இந்தக் கருத்தை பீஷ்மர், மகாபாரதத்தில் சொல்கிறார். மனம் என்ற அந்த குதிரையை பாஸிடிவான விஷயங்களுக்குப் பயன்படுத்துவோம். யார் நம்மை ஏமாற்றினார்கள், யார் இந்தியாவை ஏமாற்றினார்கள் என்ற சிந்தனையெல்லாம் நமக்கு வேண்டாம். சில வரலாற்று உண்மைகளை தெரிந்துகொள்ளும் முயற்சி இது. அவ்வளவுதான்.

சாவர்க்கரின் மரணத்துக்குப் பிறகும் அவருக்கு கொடுக்கப்பட வேண்டிய மரியாதை கொடுக்கப்படவில்லை. அவரின் உடலை ராணுவ ஊர்தியில் கொண்டு செல்லப்பட வேண்டும் என்று மக்கள் விரும்பினர். அரசுக்கு கோரிக்கை வைத்தனர். உள்துறை மந்திரி ஒய்.பி. சவாண் அவர்களது கோரிக்கையை மறுத்துவிட்டார். அதைவிட வருத்தமான விஷயம், மகாராஷ்டிரா அமைச்சரவையிலிருந்து ஒரு அமைச்சர்கூட மயானத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தவில்லை. இந்தியப் பாராளுமன்றத்தில் அஞ்சலி செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் சபாநாயகரால் நிராகரிக்கப்பட்டது.

காங்கிரஸுக்கு சாவர்க்கரின் மீதான வெறுப்பு, தலைமுறை தாண்டியும் நீடிப்பது ஆச்சரியமான விஷயம். ‘சாவர்க்கருக்கு பாரத் ரத்னா கொடுக்க வேண்டும்' என்று யாராவது கோரிக்கை வைத்தால், அடுத்த சில நிமிடங்களில் காங்கிரஸ் பொங்கி எழும். சாவர்க்கரைப் பற்றி தாறுமாறான கருத்துகளை வெளியிடும்.

சாவர்க்கருக்கு ‘பாரத் ரத்னா விருது' வழங்க வேண்டும் என்று பலதரப்பிலிருந்தும் கோரிக்கை வரும்போதெல்லாம், ஆட்சியிலிருந்த காங்கிரஸ் வேண்டுமென்றே தவிர்த்தது; நிராகரித்தது. ஆனால், தற்போதைய பிஜேபி அரசு அந்த கோரிக்கையை நிராகரிக்கவில்லை. அதே நேரத்தில், உருப்படியான எந்த நடவடிக்கையை எடுத்ததாகவும் தெரியவில்லை. சாவர்க்கரின் தியாகம், சுதந்திர வேட்கை, தேசபக்தி ஆகியவற்றை எந்த ஒரு போராளியுடனும் ஒப்பிட முடியாது. அவருக்கு விருது அளிக்கப்படாமல் இருப்பது பாரத மாதாவுக்கு செய்யும் அவமரியாதை.

மரியாதைக்குறிய பிரதமர் மோடி அவர்களே, அறுபது ஆண்டுகளாக காங்கிரஸ் செய்த தவறுகளை, பாஜக அரசும் தொடர வேண்டாம். இந்திய தேசத்துக்காகப் போராடிய காங்கிரஸ் அல்லாத தலைவர்களையும் போற்றுவோம். அவர்களின் வரலாற்றை எல்லா மக்களிடமும் கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சாது ஸ்ரீராம் (saadhusriram@gmail.com)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com