அந்தக்கால குழந்தைகள் VS இந்தக்கால குழந்தைகள்

சிலருக்கு புளியை சதா நேரமும் வாயிலிட்டு சப்பிக் கொண்டே இருக்கப் பிடிக்கும், இல்லையேல் புகையிலை போல கன்னங்களுக்கிடையில் அதக்கிக் கொள்வார்கள்,
அந்தக்கால குழந்தைகள் VS இந்தக்கால குழந்தைகள்

சிலேட்டுக் குச்சி (பல்பம்) தின்னும் பழக்கம் ஆரம்பப் பள்ளியில் வாசிக்கும் போது என்னையும் சேர்த்து என் நண்பர்கள் பலருக்கும் இருந்தது. அதுமட்டுமா பழனி கந்த விலாஸ் விபூதி என்றாலும் கூட அப்போது பலருக்கு அதீத இஷ்டம். ஆட்காட்டி விரலும் கட்டை விரலும் சேர்ந்து அமுக்கிக் கொள்ள சிட்டிகை சிட்டிகையாய் தின்பவர்கள் ஒரு சிலர், என்னவோ ஜீனி தின்பது போல அள்ளி அள்ளி வாயிலிட்டுக் கொள்பவர்கள் சிலர்.

இந்தப் பழக்கம் எங்கிருந்து வந்திருக்கக் கூடும்! என்பதைப் பற்றி அப்போது சிந்தனை ஏதும் இல்லை. ஒரு வேலை அப்பா வழிப் பாட்டி செங்கல் பொடி கொண்டு பல் விளக்குவதைக் கண்டு வந்திருக்கலாம்! இல்லையேல் இட்லிக் கடை அன்னம்மா பாட்டி இட்லி அவித்து முடித்ததும், மூன்று கல் கொண்ட விறகடுப்புச் சாம்பலை நீர் தெளித்து அவித்துப் பின் அதிலுள்ள சாம்பலை இளஞ்சூடாக எடுத்து பல் விளக்குவதைக் கண்டு வந்திருக்கலாம்! அடுத்தவரைக் கண்டு பழகுவதென்றால்?! தாத்தா வேப்பங்குச்சியால் பல் விளக்குவதைக் கண்டு அதையல்லவா நான் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும்?! அதைப் பிடித்துக் கொள்ளாததற்கு முதல் காரணம் வேலங்குச்சி மகா கசப்பு, எந்தப் பிள்ளைகள் தான் கசப்பை விரும்பக் கூடும்?!

திருநீறும், சாம்பலும்... ஏன் சிலேட்டுக் குச்சியும் கூட வாயிலிட்டதும் நடு நாக்கில் சில்லென்று ஒரு விறு விறுப்பைத் தரும் பாருங்கள் கரைவதற்கு முன்பு அதற்கு ஈடாகுமோ கசப்பு! அம்மா வழிப் பாட்டி "1314 பயோரியா பல்பொடி வைத்து பல் விளக்குவார் அன்றைய நாட்களில்... நாட்டு மருந்து போல அந்தப் பல்பொடியும் பிடிக்காது அதன் லேசான கசப்பும் பிடிக்காது. அதை வாயிலிட்டால் சுறு சுறுவென எரியும் நாக்கு. அதே ரோஸும் வெள்ளையும் கலந்த நிறத்தில் ‘கோபால் பல்பொடி’ சின்னப் பிள்ளைகள் எல்லோருக்கும் பிடித்த ஒன்று. ஏனெனில் அதைக் கொண்டு பல் விளக்குவதா முக்கியம்? அதன் இனிப்புச் சுவைக்காக அதைத் தின்று விடும் பல நல்ல பால்ய நண்பர்களை நான் கொண்டிருந்தேன். நான் கூட தின்றிருக்கக் கூடும், இப்போது ஞாபகமில்லை.

சிலேட்டுக் குச்சியில் இருந்து... பிறகு சிலர் சாக்பீசுக்கு மாறி விட்டார்கள், என்ன இருந்தாலும் குச்சி போல வராது! குச்சியில் கூட இரண்டு வெரைட்டி உண்டு. முதலாவது கல் குச்சி, இது ஒல்லியாக நீண்டு கருப்பாக இருக்கும், இரண்டாவது மாவுக் குச்சி, இது நல்ல வெள்ளை நிறத்தில் கொஞ்சம் தடிமனாக இருக்கும், இதில் மாவுக் குச்சி தான் பள்ளிப் பிள்ளைகள் எல்லோராலும் விரும்பப் பட்டது. என்ன தான் சொல்லுங்கள் சாக்பீசெல்லாம் மாவுக் குச்சிக்கு ஈடாகவே ஆகாது. சப்பென்று இருக்கும் சாக்பீஸ் தூள்.

மண், வெறும் மண் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. தெள்ளு மண் என்பார்கள் கிராமப்புறங்களில், அப்படிப் பட்ட நுண்ணிய மண்ணை தின்னும் பழக்கம் கூட சிலருக்கு அப்போது இருந்தது.

எறும்பு சாப்பிட்டால் கண் நன்றாகத் தெரியும் என்று ஒரு பழம் நம்பிக்கை... யார் சொல்லக் கேள்வியென்று இப்போது நினைவில்லை, அப்படி எறும்புத் தின்னி பிள்ளைகளும் சிலர் இருக்கத்தான் செய்தார்கள். சித்தெறும்பு @ சிவப்பு எறும்புகளை எங்கே கண்டாலும் சரி, பிடித்து வாயில் போட்டுக் கொள்ளும் கண்ணபிராண் எனும் வகுப்புத் தோழனை இப்போது நினைத்தாலும் சிரிப்பாகத்தான் இருக்கிறது. உண்மையில் எறும்பைத் தின்றால் கண்களுக்கு நலம் என்பது வெறும் மூட நம்பிக்கை என்று இப்போது தெரிந்திருந்தாலும் அன்றைக்கு அதை நான் நம்பினேன்.

மேலே சொன்ன பழக்கங்களைக் காட்டிலும் ராவாக அரிசியை அப்படியே சமைக்காமல் பச்சையாக வாயிலிட்டு சதா மென்று கொண்டிருக்கும் அபாரப் பழக்கம் அன்றைக்கு எங்கள் கிராமத்தில் பலரிடமும் இருந்தது. இதில் குழந்தைகள், படித்து முடித்து விட்டு வீட்டு வேலைகளைப் பார்த்துக் கொண்டு பொழுது போக்கும் அக்காக்கள், அத்தைகள், சித்திகள் என்று வயது வரம்பெல்லாம் கிடையாது. பெண் குழந்தைகள் அப்படி எந்நேரமும் அரிசி மென்றால் அத்தைமார்கள் சொல்வார்கள் ‘ரொம்ப அரிசி திங்காத, உன் கல்யாணத்தன்னைக்கு விடாம மழை வரும் பார்’ என்று! அதுவும் மூடநம்பிக்கையே! அப்படியாவது பச்சை அரிசியைத் தின்னும் பழக்கம் நிற்கட்டுமே என்பதற்காகச் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அந்த பயமுறுத்தல்களை எல்லாம் கண்டுகொண்டதே இல்லை. எந்நேரமும் வாய் அரிசியைத் தான் மென்று கொண்டிருக்கும்.

சிலருக்கு புளியை சதா நேரமும் வாயிலிட்டு சப்பிக் கொண்டே இருக்கப் பிடிக்கும், இல்லையேல் புகையிலை போல கன்னங்களுக்கிடையில் அதக்கிக் கொள்வார்கள், உமிழ் நீரில் லேசான இனிப்பும் மிகையான புளிப்புமாய் புளி மெல்ல மெல்லக் கரைந்து வர அதை விழுங்கும் ஒவ்வொரு முறையும் அலாதி ஆனந்தமாய் இருக்கும். என்ன ஒரு பொல்லாத பிரச்சினை என்றால், இப்படி புளி தின்றால் நாக்கின் ஓரங்கள் நாளடைவில் கொதித்துப் போய் கொப்புளித்து புண் வரும். இதற்க்கெல்லாம் தலைப்பிரட்டைப் பருவத்தில் அதாவது டாட்லர் பருவத்தில் யாரும் அஞ்சியதில்லை.

சொல்ல மறந்து விட்டேன்... இப்போது தான் ஸ்கூல் பேக் வித விதமாய் வருகிறதே தவிர; இருபது இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்பெல்லாம் பெரும்பாலும் நகைக் கடை, துணிக் கடைகளில் இலவசமாகத் தரும் மஞ்சள் பை தான் ஸ்கூல் பேக், மஞ்சள் பை பிடிக்காதவர்கள் வயர் கூடைகளில் புத்தகம் கொண்டு செல்வார்கள், அதுவும் இல்லா விட்டால் துணியாலான ஜோல்னாப் பை. ஒரு சவாலாகவே சொல்கிறேன்! மேற்கண்ட பைகளைப் பயன்படுத்தியவர்கள், அதன் காதுகளையோ அல்லது ஓரங்களையோ அல்லது அடி நுனிகளையோ பற்களால் கடித்து மெல்லாத பள்ளிப்பருவத்தினர் சொற்பமே. அது ஒரு விநோதப் பழக்கம்... லேசான உப்புச் சுவையோடு அப்படி மென்று விழுங்குவதை... இப்போது நினைத்தால் குமட்டக் கூடும், அன்றென்னவோ அது பிடித்தமானதாகவே இருந்தது எல்லாக் குழந்தைகளுக்கும்.

இன்றைய குழந்தைகள் மட்டும் இளப்பமா என்ன? டூத் பேஸ்ட் திங்காத குழந்தைகள் அரிது. நல்ல வேலை இப்போது சிலேட்டுகள் இல்லை நேரடியாக பென்சிலுக்குப் போய் விடுகிறார்கள் எல்.கே.ஜி யிலேயே மேஜிக் சிலேடு வந்து விட்டது. அதனால் பெற்றோர்களுக்கு தங்கள் பிள்ளைகள் குச்சி தின்று விடக் கூடுமோ என்ற அபாயம் குறைவே.

மண் தரை இருந்தால் அல்லவா இப்போதைய குழந்தைகள் அதெல்லாம் முயன்று பார்க்க! எங்கெங்கு காணினும் சிமெண்டுக் காடுகள் தான். அப்படியாக அந்தப் பழக்கமும் இருக்க வாய்ப்பில்லை. திருநீர் கூட அப்படி ஒன்றும் இந்தக் கால குழந்தைகள் சாப்பிட முயல்வதில்லை என்றே நினைக்கிறேன். சாம்பல் சொல்லவே தேவையில்லை... விறகு அடுப்பு உபயோகித்தால் அல்லவா சாம்பலை குழந்தைகள் கண்ணால் பார்க்க முடியும்?!

இப்படி எல்லாம் பெற்றோர்கள் நிம்மதிப் பட்டுக் கொள்ள முடியாது. இதெல்லாம் என்ன பெரிய சாதனைகள்?!

ஃப்ரீஸரைத் திறந்து அதில் உறைந்திருக்கும் ஐஸ் துகள்களை சுரண்டித் தின்பது;

கோரைப் பாயோ... பிளாஸ்டிக் பாயோ அதன் ஓரங்களை உருவி மென்று துப்புவது.

பென்சில் கரையும் வரை அதை விட்டேனா பார் என துருவோ துருவென்று துருவுவது. பென்சில் நுனிகளை மென்று சப்புவது.

முன்னமே சொன்னபடி டூத் பேஸ்ட் தின்பது.

நகத்தைக் கடித்து மெல்லுவது,

இப்படி சில மாறாத பழக்கங்கள் இன்றும் கூட இருக்கின்றன தான்.

ஆனாலும் அன்றைய குழந்தைகளை விடவும் இன்றைய குழந்தைகளுக்கு கவனிப்பு கூடுதல் என்பதால் பல விநோதப் பழக்கங்கள் இன்றைக்கு குழந்தைகளிடையே மட்டுப் படுத்தப்பட்டு விட்டன  என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். பெரும்பாலும் ஒற்றை குழந்தைகளாய் வளர்வதால் எந்நேரமும் பெற்றோரின் கவனிப்பு வளையத்திலே தான் இருக்க நேர்கிறது. அதனால் தேவையற்ற பல பழக்கங்கள் தடுக்கப்பட்டு விட்டன என்பதை சொல்லித் தான் ஆக வேண்டும். அன்றைய குழந்தைகளிடம் அறவே இருந்திராத ஒரே ஒரு கெட்ட பழக்கம் இப்போதைய குழந்தைகளிடையே விஸ்வரூபமாய் வளர்ந்து கொண்டிருக்கிறது. வளர்வது மட்டுமல்லாமல் பெற்றோரின் தீராத தலைவலியாகவும் மாறிக் கொண்டிருக்கிறது எனில் அது இந்த ஸ்மார்ட் ஃபோன் உபயோகிக்கும் வழக்கம் தான். சின்னச் சின்ன நண்டுகள் போன்ற வாண்டுகள் கூட தியேட்டரில் படம் ஓடிக் கொண்டிருக்கும் இருட்டிலும் கையில் ஸ்மார்ட் ஃபோன்களை வைத்து நோண்டிக் கொண்டிருக்கின்றன. பெற்றோர்களும் தம்மை தொல்லை செய்யாமல் இருந்தால் சரி என அதை அனுமதிக்கிறார்கள். இது சமீபத்தில் ஒரு தியேட்டரில் நான் கண்ட காட்சி. அங்கே மட்டுமல்ல; மருத்துவமனை, ரயில்வே ஸ்டேஷன், பேருந்து நிலையம், ஷாப்பிங் மால்கள், என குழந்தைகளுடன் எங்கே காத்திருக்க நேர்ந்தாலும், கையில் சாப்பிட ஸ்னாக்ஸும், தண்ணீர் பாட்டிலும் இருக்கிறதோ இல்லையோ? இப்போதெல்லாம் குழந்தைகளைச் சமாளிக்கக் கண்டிப்பாக  செல்ஃபோன்கள் கையிலிருக்க வேண்டியாதாகியிருக்கிறது.

ஆகவே, அந்நாளைய சில அனாவசியமான பழக்கங்கள் இப்போது அறவே இல்லை, நல்ல வேலை என சந்தோஷப்பட்டுக் கொள்ள மட்டும் எப்போதும் வழியே இருப்பதில்லை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com