குண்டான பெண்களென்றால் பழகப் பிடிக்கும், ஆனால் கல்யாணத்திற்கு மட்டும் யோசிப்பீர்களா?!

‘எனதருமைச் சமூகமே தயவு செய்து குண்டான பெண்கள் குறித்த உனது பொது மனப்பான்மையை உடைத்தெறி!’
குண்டான பெண்களென்றால் பழகப் பிடிக்கும், ஆனால் கல்யாணத்திற்கு மட்டும் யோசிப்பீர்களா?!

கே.பாக்யராஜின் ‘சின்னவீடு’ திரைப்படம் வெளிவந்து கிட்டத்தட்ட 35 வருடங்கள் கடந்திருக்கலாம். ஆனால், இன்றும் கூட அந்தத் திரைப்படத்தில் பேசப்பட்ட முக்கியமான விவகாரமொன்று அன்று எப்படி அணுகப்பட்டதோடு அப்படியே தான் இன்றும் அணுகப்படுகிறது. அதில் நாயகி கல்பனா குண்டாக இருப்பார். அதனால் மெத்தப் படித்திருந்தும், வசதி, வாய்ப்புகளுக்கு குறைவில்லாதவராக இருந்தும் எக்ஸ்ட்ரா டெளரி கொடுத்து அவரது அப்பா, வெறும் டிகிரியில் கூட அரியர் வைத்திருக்கும் ஒரு மணமகனுக்குத் திருமணம் செய்து கொடுப்பார். அப்படி சீர், செனத்தியோடு புகுந்த வீட்டில் அடியெடுத்து வைத்திருந்தும் அவரது கணவரான பாக்யராஜ் அவரிடம் பாராமுகமாகவே இருப்பார். காரணம் அவர் எதிர்பார்த்த சாமுத்ரிகா லட்சணங்களில் எதுவொன்றிலும் கல்பனா உருவம் அடங்காததோடு அதை விட பலமடங்கு உடல் பெருத்தவராக அவர் இருந்ததால். ஒரு குண்டுப் பெண்ணின் கணவரெனத் தன்னைக் காட்டிக் கொள்ள பாக்யராஜ் விரும்ப மாட்டார். அது எதுவரை என்றால் அழகான ஸ்லிம்மான பெண்ணொருத்தி அவரை ஏமாற்றிச் செல்லும் வரை. படத்தை உங்களில் அனேகம் பேர் பார்த்திருப்பீர்கள். அதனால் அதைப் பற்றி அதிகம் பேசத்தேவையில்லை. அது சொல்லிச் சென்ற விஷயம் தான் முக்கியம்.

படத்தில் கல்பனாவின் தகப்பனாருக்கு வசதி இருந்ததால் அதிக டெளரி கொடுத்து தனது மகளைத் திருமணம் செய்து கொடுக்க முடிந்தது. ஆனால், அதே வசதி குறைவான குடும்பத்தில் பெண்கள் திருமண வயதில் குண்டானவர்களாக இருந்து விட்டால் அவர்களைத் திருமணக் கரை சேர்ப்பதென்பது பெற்றோருக்கு மிகக் கடினமான விஷயம். பெண்களைக் கரை சேர்க்கிறோம் என்கிற பெயரில் இந்தப் பெற்றோர்களும், பெரியவர்களும், உற்றார், உறவினர்களும் அடிக்கிற கூத்திருக்கிறதே... அதைப் புட்டுப் புட்டுச் சொன்னால் நிச்சயம் பெண்ணியவாதிகள் சண்டைக்கு வருவார்கள். அப்படியாவது ஒரு பெண்ணுக்கு திருமணம் நடத்தப்பட்டே தான் ஆக வேண்டுமா? ஏன்? குண்டான பெண்களை திருமணச் சந்தை புறக்கணிப்பதும் கூட ஒரு விதத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தான். இதை எதிர்க்க ஏன் யாருக்கும் நா எழவில்லை என்பார்கள். அது நியாயமான கேள்வி. ஏனென்றால் இந்தச் சமூகம் திருமணச் சந்தையில் குண்டான பெண்களை அப்படித்தான் அணுகுகிறது.

குண்டாக இருப்பதென்றால் அவர்களுக்கு சாப்பிட்டு விட்டுத் தூங்கித் தூங்கி எழுவதைத் தவிர வேறு வேலையே இருப்பதில்லை என்று மட்டமாக கருதத் தேவையில்லை. சிலருக்கு மரபியல் ரீதியாக குடும்ப ஜீன் அமைப்பியல் காரணமாகவும் உடல் எடை எப்போதுமே வாளிப்பாக இருப்பதுண்டு. பார்க்க கொழுக் மொழுக்கென்று இருப்பார்கள். அவர்களுக்கு உடற்பயிற்சியில் ஆர்வம் இல்லாவிடினும் பூரண ஆரோக்யத்துடன் உற்சாகமாகவே எல்லா வேலைகளிலும் ஈடுபடுவார்கள். பார்வைக்கு இடுப்பில் துளி சதை இன்றி பார்க்க ஒல்லிக் குச்சி உடம்புக்காரியாக தோன்றாவிட்டாலும் கூட அவர்களளவில் அவர்கள் கச்சிதமாக உணர்வார்கள். அப்படிப் பட்டவர்களை நீங்கள் குண்டாக இருக்கிறீர்கள் என்று கல்யாணச் சந்தையில் புறம் தள்ளினால் பெற்றோர்களாலும், உற்றார்களாலும் வேறு வழியின்றி அரங்கேற்றப் படுபவை தான் மேற்சொன்ன டெளரி நாடகங்கள்.

இதில் அந்தப் பெண்ணுக்கு உண்டாகும் மன உளைச்சல்களைப் பற்றி எவரும் யோசிக்க விரும்புவதில்லை.

காரணம் நமது சமூகக் கண்ணோட்டம்.

திருமணத்திற்காக காத்திருக்கும் பெண்கள் குண்டாக இருப்பது தவறு என்ற ரீதியில் தான் எப்போதுமிருக்கின்றன நாம் நமது பெண்களுக்கு வழங்கும் அத்தனை அறிவுரைகளும்.

முக அழகுக் க்ரீம் விளம்பரங்கள் முதல் ஜவுளிக்கடை விளம்பரங்கள், சமையல் எண்ணெய் விளம்பரங்கள், சத்துபான விளம்பரங்கள் வரை அனைத்திலும் வாழைப்பழ ஊசியாக இருக்கத்தான் செய்கின்றன குண்டானவர்களைப் பற்றிய நக்கலும், நையாண்டியும் பொதிந்த விமர்சனங்கள். 

இவை காலம் காலமாக இப்படியே போதித்துக் கொண்டே இருப்பதால் நமது இளைஞர்கள், இளம்பெண்களின் மனதில் குண்டாக இருந்தால் அது அழகுக்குரிய இலக்கணமல்ல என்றொரு வெறுப்புணர்வு ஆதி முதலே படிந்து வளரத் தொடங்கி விடுகிறது. சம்பாதிக்க சோம்பேறித்தனப்படும் ஆண்கள்... திருமணச் சந்தையில் குண்டான பெண்களைத் தேர்ந்தெடுப்பதை தங்களுக்கு அதிக வரதட்சிணை பெற்றுத்தரும் ஒரு வாய்ப்பாகவும் அணுகத் தொடங்கி விடுகிறார்கள்.

சரி, வசதி வாய்ப்புகள் இருப்பவர்கள் தங்களிடம் இருக்கும் பணத்தைக் கொண்டு பெண்ணுக்கொரு திருமண வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்து விடுகிறார்கள். இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்? குண்டான தங்களது ராஜாத்தியை மணந்து கொள்ளும் ராஜகுமாரன் எப்போதடா வருவான்? என்று காத்திருக்க வேண்டியது தானா? என்ன விதமான சமூக மனப்பான்மை இது?! 

மற்ற இளம்பெண்களைப் போலத்தானே இவர்களும்?! அவர்களுக்கு இருக்கக் கூடிய அனைத்து அபிலாஷைகளும் இவர்களுக்கும் இருக்கும் தானே? அதை ஏன் இந்த ‘குண்டு’ என்ற ஒரே ஒரு பைசா பெறாத காரணத்தைச் சொல்லி தூக்கிப் பிடித்துக் கொண்டு நிராகரிக்கிறீர்கள்?

அந்தப் பெண்களின் மனதைப் பார்த்து அவர்களைத் தேர்வு செய்யுங்கள், வீணாக குண்டான பெண் வேண்டாம் என்று சொல்லி அநாகரீகமாகச் சொல்லி நிராகரிப்பதை நிறுத்துங்கள். அவர்கள் பிற இளம்பெண்களைக் காட்டிலும் எந்தவிதத்திலும் குறைந்தவர்கள் அல்ல. சொல்லப் போனால் குண்டான பெண்களுக்கு பிறரை விட நகைச்சுவை உணர்வு அதிகம் என்று கூட சொல்லப்படுவதுண்டு. அது உண்மையோ, கற்பனையோ? எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால், ஒரு பெண்ணை அவள் குண்டாக இருப்பதற்காக விமர்சிப்பதோ, திருமணச் சந்தையில் நிராகரிப்பதோ தவறு என்பதை மட்டும் மனதில் ஆழப் பதித்துக் கொள்ளுங்கள்.

இந்தப் பிரச்னையை மையமாக வைத்து இந்தியில் 2015 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘தும் லகா கி ஹெய்சா’ (My Big Fat Bride) என்ற திரைப்படம் அந்த ஆண்டுக்கான சிறந்த படத்துக்கான தேசிய விருது வென்றது. அந்தப் படத்தில் பேசப்பட்டதும் இதே விவகாரம் தான். குண்டான அரசு வேலையிலுள்ள மிடில் கிளாஸ் பெண்ணுக்கு பொருத்தமான வரன் கிடைக்காமல் திருமணம் என்பது கனவாகவே தள்ளிப் போய்க் கொண்டிருந்த நிலையில் அவளது வேலையை பெரிதெனக் கருதி அரசு வேலை பெற முடியாத அழகான மகனுக்கு மணமகளாக்குவார் ஒரு தந்தை. ஆனால், அந்த மணமகனின் உள்ளம் இந்தக் குண்டான பெண்ணை மனைவியாக ஏற்றுக் கொள்ளப் பிடிக்காமல் தகராறு செய்யும். பெற்றோரின் வற்புறுத்தலால் திருமணத்தில் இணையும் இந்த ஜோடி, மணமகள் குண்டு என்பதால் உண்டான மனத்தடையை கிளைமாக்ஸில் எப்படித் தகர்த்தெறிகிறது என்பது தான் படத்தின் கதை. 

இந்திய நடுத்தரக் குடும்பங்களில் குண்டாக இருப்பதால் ஒரு பெண்ணின் திருமணம் எப்படியெல்லாம் தடைபடுகிறது? அவளை இந்த சமூகம் எவ்விதமாக எல்லாம் விமர்சனங்களாலும், கேலிகளாலும் குத்திக் கிழிக்கிறது? அவள் அவற்றிலிருந்தெல்லாம் எப்படி மீண்டு வருகிறாள்? குண்டான பெண்ணின் கணவன் எனும் மனத்தடையை அவளது கணவன் எப்படிக் கடக்கிறான் என்பதையும் மிக அருமையாகவும், உணர்வுப் பூர்வமாகவும் பதிவு செய்த படம் என்ற வகையில் அப்படத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டது. நிஜமாகவே குண்டு உடலுடன் நடித்த நாயகி பூமி பெட்னேகருக்கும் இத்திரைப்படம் சிறந்த புதுமுக நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றுத்தந்தது.

நம்ம ஊர் சின்னவீடு திரைப்படத்தின் கதையை ஒத்த திரைப்படம் தான். ஆனால், தமிழை விட கதாநாயகி  ‘குண்டு’ என்ற விஷயத்தை இந்தியில் அணுகிய விதம் பாஸிட்டிவ்வாக இருந்தது.

இதே வரிசையில் தற்போது ஜீ தமிழில் ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’ என்றொரு மெகா சீரியல் நேற்று முதல் ஒளிபரப்பாகத் தொடங்கியிருக்கிறது. கதை மேற்கண்ட படங்களில் பேசப்பட்ட அதே விஷயம் தான். குண்டான  நாயகி ராசாத்தியை ஊரில் எல்லோருக்கும் பிடிக்கும், அவர்களைப் பொருத்தவரை அவளொரு ராஜகுமாரி. ஆனால், என்ன தான் ராஜகுமாரி என்றாலும் குண்டாக இருப்பதால் அவளுக்குத் திருமணம் தடை பட்டுக் கொண்டே இருக்கிறது. இது தான் கதை. இதில் நடிப்பதற்காக குண்டாக இருக்கும் ஒரு புதுமுகத்தை தேடி இருக்கிறது படக்குழு. கிடைத்தவர் பெங்களூரைச் சேர்ந்த அஸ்வின் ராதாகிருஷ்ணா எனும் தகவல் தொழில்நுட்ப பொறியாளர் ஒருவர். குண்டாக இருப்பதன் அத்தனை அசெளகர்யங்களையும் சொந்தமாக உணர்ந்தவர் என்ற அடிப்படையில் இந்த சீரியலில் நடிப்பதற்கென்றே தனது வேலையை உதறி விட்டு வந்திருக்கிறார் அஸ்வினி.

வாரநாட்களில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஜீ தமிழில் நீங்கள் இந்த ராஜகுமாரியை தரிசிக்கலாமாம்.

சூழ்ச்சிகள், அழுகாட்சி மெலோ டிராமாக்களைத் தாண்டி மெகாத்தொடர்களில் இப்படியான சமூகப் பிரச்னைகள் தொடர்ந்து பேசுபொருளாக எடுத்துக் கொண்டு அலசப்படுவது ஆரோக்யமான விஷயம் தான்.

2015 ஆம் ஆண்டு நவம்பரில் அனுஷ்கா, ஆர்யா நடிப்பில் வெளிவந்த சைஸ் ஜீரோ திரைப்படத்தின் கதைக்கருவும் இதே விஷயத்தைப் பற்றியதாகத் தான் இருந்தது. நாயகி அனுஷ்கா குண்டாக இருப்பதால் நல்ல வரன் கிட்டாமல் அவரது திருமணம் இழுபறியாக இருக்கும். கணவரை இழந்தை அம்மா ஊர்வசிக்கு தனத் மகளின் திருமணம் ஒன்றே வாழ்வின் மிகப்பெரிய தலையாய கடமையாக இருக்கும். எனவே மகள் குண்டாக இருப்பதை வெறுக்கும் முதல் நபராக இங்கே அவளது தாயே இருப்பார்.

ஒரு பெண் குண்டாக இருப்பதால் அவள் இதர பெண்களிடையே தாழ்வுணர்ச்சி கொள்ளத் தேவை இல்லை. குண்டாக இருக்கிறோமே என்று மன உளைச்சலில் காசு பிடுங்கும் தந்திர மூளைக்காரர்களான ஃபிட்னெஸ் சென்ட்டர் காரர்கள், உடல் எடை குறைப்பு மாயங்களை 30 நாட்களில் நிகழ்த்திக் காட்டுவோம் என்ற பெயரில் நகரங்களின் மையப் பகுதிகள் தோறும் தெருவுக்குத் தெரு முளைத்துக் கொண்டிருக்கும் மாயாஜால மந்திரக் கூடங்களான வெயிட் லாஸிங் சென்ட்டர்கள், மேலை நாட்டுத் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய லிப்போ சக்ஸன் கூடாரங்கள் என அத்தனை போலி அமைப்புகளின் முகத்திரையையும் இத்திரைப்படம் ஓரளவுக்கு தோலுரித்துக் காட்ட முயன்றது.

மேலே சொல்லப்பட்ட மூன்று திரைப்படங்களிலும் பேசப்பட்ட விஷயம் ஒன்று தான். பேசிய விதம் வேண்டுமானால் வேறுபடலாம்.

அதனால்;

‘எனதருமைச் சமூகமே தயவு செய்து குண்டான பெண்கள் குறித்த உனது பொது மனப்பான்மையை உடைத்தெறி!’

- எனும் பாடத்தை போதிக்கவே ஒவ்வொரு முறையும் இத்தகைய திரைப்படங்கள் வெளிவருகின்றன. ஆயினும் எதிர்பார்த்த மாற்றங்கள் இந்த சமூகத்தில் உண்டாயிற்றா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com