அமெரிக்காவால் நம்ப முடியாத செயலை சாதித்துக் காட்டிய பொக்ரான் நாயகன் வாஜ்பாய்

மே 11-ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் 45 கிலோ டன் ஹைட்ரஜன் குண்டை வெடித்து இந்தியா சோதனை செய்தது. அன்றைய தினம் உலக வல்லரசுகள் அனைத்தும் இந்தியாவைத் திரும்பிப் பார்த்தன. 
அமெரிக்காவால் நம்ப முடியாத செயலை சாதித்துக் காட்டிய பொக்ரான் நாயகன் வாஜ்பாய்

மே 11-ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் 45 கிலோ டன் ஹைட்ரஜன் குண்டை வெடித்து இந்தியா சோதனை செய்தது. அன்றைய தினம் உலக வல்லரசுகள் அனைத்தும் இந்தியாவைத் திரும்பிப் பார்த்தன. 

வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில், கடந்த 1998-ஆம் ஆண்டு மே மாதம் 11-ஆம் தேதி, ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இந்தியா இரண்டாவது முறையாக அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. அன்றைய தினம் 3 அணுகுண்டுகள் அடுத்தடுத்து சோதித்துப் பார்க்கப்பட்டன.

இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் நடைபெற்ற அணுகுண்டு சோதனைக்கு பிறகு 1998-ல் மீண்டும் ஒரு அணுகுண்டு சோதனை நடத்த வாஜ்பாய் தலைமையிலான இந்திய அரசு தயாரானது. இதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்னரே அணுகுண்டு சோதனைக்கு நரசிம்மராவ் தலைமையிலான அரசு தயாரானது. ஆனால், பொக்ரானில் அணுகுண்டு சோதனைக்கான தயாரிப்புகள் நடந்துகொண்டிருந்தது, உலகத்தைக் கண்காணித்துக்கொண்டிருக்கும் அமெரிக்க செயற்கைக் கோள்களின் கழுகுக் கண்களில் பட்டுவிட்டது. இதனால், இந்தத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. வாஜ்பாய் அரசு அதை நிறைவேற்றிக்காட்டியது.

இம்முறை அமெரிக்க செயற்கைக் கோள்களின் பார்வையில் படாத வகையில் ஏற்பாடுகளை இந்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) மேற்கொண்டது. சுழன்றுகொண்டிருக்கும் செயற்கைக்கோள்கள் பூமியில் பொக்ரான் பகுதியிலிருந்து வேறு திசைக்குத் திரும்பியிருந்த கால இடைவெளியில் அணுகுண்டு சோதனையைச் சத்தமின்றி முடித்துவிட்டது இந்தியா. மத்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் டைரக்டர்-ஜெனரலாக அப்துல் கலாம் இருந்தபோது இந்த சோதனை நடைபெற்றது.

இந்த சோதனை முழு வெற்றியடைந்ததாக அப்துல் கலாம் குறிப்பிட்டார். அதே ஆண்டு மே 13-ம் தேதி இரு சிறிய குண்டுகள் வெடித்து சோதனை செய்யப்பட்டது. இந்தச் சோதனைக்கு ‘சக்தி’ என்று பெயரிடப்பட்டிருந்தது.

அமெரிக்காவின் அப்போதைய அதிபர் பில் கிளிண்டனால் இதை நம்ப முடியவில்லை. அமெரிக்காவின் உளவு நிறுவனமான சி.ஐ.ஏ., தேசியப் பாதுகாப்பு அமைப்பு ஆகியவை இவ்விஷயத்தில் இந்தியாவிடம் ஏமாந்துவிட்டதாக அமெரிக்க அரசு கருதியது.

இதற்கிடையே, இந்தியாவுக்குப் போட்டியாக 1998 மே 28-ல் சாகாய் எனும் இடத்தில் பாகிஸ்தானும் அணுகுண்டு சோதனை நடத்தியது. இதையடுத்து, இரண்டு நாடுகளையும் அமெரிக்கா கடுமையாகக் கண்டித்தது. அமெரிக்கா, கனடா, ஜப்பான் போன்ற நாடுகள் இந்தியாமீது பொருளாதாரத் தடைகளை விதித்தன.

பொருளாதாரத் தடைக்கு அஞ்சாதவர்!

அமெரிக்காவின் உளவு அமைப்புகளுக்குக்கூடத் தெரியாத வகையில் நிகழ்ந்த இந்தச் சோதனையை அடுத்து, அதிர்ச்சி அடைந்த அமெரிக்கா உள்ளிட்ட மேலைநாடுகள் இந்தியா மீது பொருளாதாரத் தடை விதித்தன.

முதல் அணு குண்டு சோதனை நடத்தப்பட்ட பிறகும் அசராமல், அடுத்த இரு தினங்கள் கழித்து (மே 13) மேலும் 2 அணுகுண்டுகளை இந்தியா வெற்றிகரமாகச் சோதித்தது. அத்துடன், இந்தியா அணு ஆயுத வல்லமை நாடு என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்தியாவின் அறிவியல் ஆற்றலையும், தொழில்நுட்ப மேம்பாட்டையும் பறைசாற்றும் வகையில், கடந்த 1999-ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் பொக்ரான் அணுகுண்டு சோதனை தினமான மே 11-ஆம் தேதி, தேசியத் தொழில்நுட்ப தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. 

பொக்ரான் அணுகுண்டு சோதனைகளை உலகம் நன்கு அறியும். அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையின் கீழ் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்ட அந்தச் சோதனைகள் மூலம் இந்தியாவின் வலிமையை உலகம் உணர்ந்துகொண்டது. நமது விஞ்ஞானிகள், நாட்டைப் பெருமிதம் கொள்ளச் செய்தார்கள்.

முதலில் மே 11-ஆம் தேதி நிகழ்த்திய அணுகுண்டு சோதனையை அடுத்து உலக நாடுகள் இந்தியா மீது பொருளாதாரத் தடை விதித்தன. ஆனால், மே 13-ஆம் தேதி மீண்டும் சோதனைகளை நிகழ்த்தி, தான் வித்தியாசமானவர் என்பதை வாஜ்பாய் நிரூபித்தார்.

வேறு பலவீனமான பிரதமராக இருந்திருந்தால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டதும் பயந்திருப்பார். ஆனால் அடல்ஜி தான் அச்சமற்றவர் என்பதை உணர்த்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com